பிச்சை எடுத்து மற்றவர்களுக்கு உதவும் 72 வயது மூதாட்டி!
சத்தீஸ்கரைச் சேர்ந்த 72 வயதான சுக்மதி மனிக்பூரி கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அவதிப்படுவதைக் கண்டு அரிசி, புடவைகள் போன்றவற்றை கொடுத்து உதவியுள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பலரை பட்டினியுடனும் இருப்பிடம் இன்றியும் தவிக்கவிட்டுள்ளது. தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் என்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு மற்றவர்களுக்கு உதவிய எண்ணற்றோரின் செயல்களைப் பார்த்துள்ளோம்.
ஆனால் சுக்மதி மனிக்பூரியின் செயல் வித்தியாசமானது. சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று பரவும் இன்றைய இக்கட்டான சூழலில் இவர் 100 கிலோ அரிசி, 12 புடவைகள், பணம் ஆகியவற்றை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவியுள்ளார்.
72 வயதான இவர் தனது பகுதியின் மாநகராட்சி உறுப்பினரான விஜய் கேசர்வானி உதவியுடன் நன்கொடை அளித்துள்ளார். சுக்மதி, பிச்சை எடுத்து திரட்டிய அரிசி மற்றும் புடவைகளை விஜயிடம் ஒப்படைத்து அவர் மூலமாக மக்களுக்கு உதவியுள்ளார்.
“பசியின் வேதனை எனக்குத் தெரியும். எனவே கஷ்டத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவ அதிகம் பிச்சை எடுக்கத் தொடங்கினேன். யாரும் பட்டினியுடன் இருக்கக்கூடாது,” என்று சுக்மதி தெரிவித்ததாக SheThePeople குறிப்பிட்டுள்ளது.
இவர் கணவரை இழந்தவர். 16 வயதான ராஜலட்சுமி, 10 வயதான சிருஷ்டி ஆகிய இருவரும் இவரது பேத்திகள். அரசுப் பள்ளியில் படித்து வரும் இவர்களை சுக்வதி கவனித்து வருகிறார். இவரது செயல், அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சஞ்சய் அலங் இவரை பாராட்டியுள்ளார்.
“ஊரடங்கு சமயத்தில் பலர் கஷ்டப்படுவதைப் பார்த்தேன். நான் பிச்சை எடுத்தே வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்ததை சேகரித்து நன்கொடையாக கொடுப்பதற்காக பிலாஸ்பூர் மாநகராட்சி ஊழியரிடம் ஒப்படைத்தேன். இதுபோன்ற சூழல்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும்,” என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-இடம் தெரிவித்துள்ளார்.
இவர் தனது கணவரை இழந்த பின்னரே பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளார். குடும்பத்தில் வேறு யாரும் இல்லாத நிலையில் பேத்திகளை இவரே கவனித்துக்கொள்கிறார்.
பணம் இருக்கும் நிலையில் தங்களது தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு மற்றவர்களுக்கு உதவும் பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து பிச்சை எடுத்து நாட்களை நகர்த்தும்போதும் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்கிற இவரது நல்லுள்ளம் பலருக்கு பாடமாக அமையும்.
கட்டுரை: THINK CHANGE INDIA