இந்தியாவின் முதல் யானை ஹாஸ்பிட்டல்!
யானை என்றாலே நமக்கு எங்கிருந்து தான் இவ்வளவு உற்சாகம் தொற்றிக் கொள்கிறதோ! நம்முடைய சிமெண்ட் காட்டிற்குள் எங்காவது கோவில் விழாக்களில் தென்படும் ஒரு யானையை பார்த்தலே துள்ளி குதிப்பவர்களிடம் எல்லாம், யானைகளுக்கு என்று ஒரு ஹாஸ்பிட்டல் திறந்திருக்கிறார்கள், அங்கே யானைகள் கூட்டமாக ஒய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன என்றால் எப்படி இருக்கும். பலரின் பல நாள் கனவு நனவாகியிருக்கிறது ‘இந்தியாவில் யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை’.
புது தில்லியில் இருந்து 160 கிமீ தொலைவில் இருக்கும் மதுராவில், யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது ‘வைல்டு லைஃப் எஸ்.ஓ.எஸ் எலிஃபெண்ட் ஹாஸ்பிட்டல்’. கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணிக்கையில் பெருமளவு குறைந்திருக்கும் யானைகளின் நலனுக்காக டிஜிட்டல் எக்ஸ்-ரே, அல்ட்ரா – சோனோகிராஃபி மற்றும் ஹைட்ரோதெரபி போன்ற சிறப்பு வசதிகளுடன் இயங்குகிறது இந்த மருத்துவமனை. வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் எனும் அரசு சாரா அமைப்பு இந்த மருத்துவமனையை நிறுவியிருக்கிறது.
ஆயிரத்துநூறு சதுர அடியில் இருக்கும் இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க தனியார் நிதியுதவியால் கட்டப்பட்டிருக்கிறது. சிறப்பு சிகிச்சைக்கான தேவைகள் இருக்கும் யானைகளுக்கு என பல்பிரிவு ஒன்று தனியே செயல்படுகிறது. யானைகளுக்கான இந்த மருத்துவமனை, பத்து வருடத்திற்கு முன்னர் கரடிகளுக்கு என்று இதே அமைப்பு தொடங்கிய சரணாலயத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது.
“பிற விலங்குகளுக்கு கொடுக்கும் அதே அளவு சிகிச்சைகளும், உதவிகளும் யானைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தவே இந்த மருத்துவமனையை கட்டுகிறோம்,”
என வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ்-ன் கீதா ஷேஷமணி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். யானைகளை எப்படி நடத்த வேண்டும், யானைகளுக்கு அடிப்படையான மருத்துவ உதவிகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை பயிற்றுவிக்கவும் இந்த மருத்துவமனை செயல்படும்.
யானை பொதுவாகவே சூழலியலை நிலையாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால், யானைகளின் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பார்கள். குறிப்பாக ஆசிய நாடுகளில் யானைகள் மக்களின் வாழ்வோடு எதாவது ஒரு வகையில் இணைந்து கொண்டே இருக்கும். பல ஆசிய நாடுகளில், யானை தெய்வமாக வணங்கப்படுகிறது. இந்திய தெருக்களில் எல்லாம் இருக்கும் விநாயகர் சிலை அதற்கு சாட்சி. ஆனால், இந்தியாவில் 2012ல் 30,1711 ஆக யானைகளின் எண்ணிக்கை 2017-ல் 27,312-ஆக குறைந்திருக்கிறது.
யானை பாகன்களால் கொடூரமாக நடத்தப்பட்டும், ரயில் விபத்துக்களிலும், மின் வேலிகளில் மாட்டியும் யானைகள் மரித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் பல யானைகள் அடைத்து வைக்கப்பட்டு, பயிற்சி எனும் பெயரில் உலோகத்தால் தாக்கபட்டு பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. இது மட்டுமில்லாமல், மாறி வரும் வாழ்க்கை முறையினாலும் யானைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. நீரிழிவு நோய் தொடங்கி, உடல் பருமன் வரை பல்வேறு வியாதிகள் யானைகளுக்கும் இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் வைத்து செயல்படும் இந்த மருத்துவமனை, சுற்றுலா பயணிகளுக்கும் திறந்தே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகள் இங்கிருக்கும் யானைகளை பார்த்து கொண்டாடுகிறார்கள். கூடிய விரைவிலேயே இது இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாக கூட மாறிவிடும்.
சமீபத்தில், மத்திய விலங்கு காட்சி சாலை அதிகாரிகள் இந்த மருத்துவமனை சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினர்.
”நாங்கள் நடத்துவது முகாம் தான். இந்தியாவில் வேறெங்கும் யானை முகாம் நடத்த அனுமதி கேட்கும் வழக்கம் இல்லை. எதற்காக எங்களை கேட்கச் சொல்கிறீர்கள். மேலும், வனத்துறையின் ஆய்வாளர்கள் இருவர் எங்களுக்கு வாழ்த்து மடல் வேறு அனுப்பி இருக்கிறார்கள், இது சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்பட்டால், அப்படி அனுப்புவார்களா?,” என பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் வனவிலங்கு எஸ்.ஓ.எஸ் குழுவினர்.
இந்தக் குற்றச்சாட்டு குழப்பத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. என்னவாக இருந்தாலும், இந்தியாவின் முதல் யானைகளுக்கான மருத்துவமனை தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்த பிரச்சாரங்கள் எல்லாம் வெறும் பிரச்சாரங்களாகவே நின்று விடும் சூழலில், இப்படியான ஒரு செயல்பாடு வரவேற்கத்தக்கது.