கிராமிய அனுபவம் மற்றும் உணவு முறைகளை மீட்டெடுக்க ஒன்றுகூடும் ‘வில்லேஜ் டிக்கெட்’
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பசுமை பூங்கா எனும் இடத்தில் 'வில்லேஜ் டிக்கெட்; இது நம்ம ஊரு திருவிழா' தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 3ம் தேதி 2019 முதல் இருந்து 6ம் தேதி வரை சத்யபாமா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய கிராமத்து சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை அறிமுகப்படுத்தும் விதமாக தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில்,
'வில்லேஜ் டிக்கெட் இது நம்ம ஊரு திருவிழா' என்ற நிகழ்வு உழவர், உணவு, உணர்வு ஆகிய மூன்று விஷயங்களை எடுத்துக்காட்டும் விதமாக நடைபெற உள்ளது. மறக்கப்பட்ட கிராமிய நாட்டுப்புறக் கலைகள், விளையாட்டுகள் என அனைத்தையும் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக நகர்ப்புறத்தில் வாழும் இளைஞர்களுக்குக் கொண்டு செல்லப்படும்,” என்றார்.
இழந்த தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படியான நிகழ்ச்சியை நடத்த இருக்கும் பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்டரிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள், என அமைச்சர் மேலும் கூரினார்.
வில்லேஜ் டிக்கெட் கடந்த ஆண்டும் சென்னையில் நடைபெற்றது. அதில் சுமார் 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தற்போது ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பதற்கான நிகழ்வாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் பிராண்ட் அவதார் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமசந்திரன் வில்லேஜ் டிக்கெட் திருவிழா பற்றி பேசுகையில்,
“இந்தத் திருவிழா இன்றைய காலக் கட்டத்தில் மிக முக்கியமான தேவையாக உள்ளது. குறிப்பாக, இந்நிகழ்ச்சியின் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை சந்திக்கும் வாய்ப்பும், அவர்கள் உற்பத்தி செய்கின்ற இயற்கைப் பொருட்களை வாங்குவது மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க உதவும்,” என்றார்.
ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கிராமத்து பாரம்பரியத்திற்கு உயிரோட்டத்தை நிச்சயம் நாங்கள் கொடுப்போம் என்றார் ஹேமசந்திரன்.
வில்லேஜ் டிக்கெட் விழாவின் அறிமுக நிகழ்ச்சியில், கிராமிய உணவு வகைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பம்சம். நிகழ்ச்சிக்கு வந்து இருந்த கல்லூரி மாணவி வைஷ்ணவியிடம் இது குறித்து கேட்ட போது,
”இது எனக்கு புதிதாக உள்ளது. இங்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் இவ்வளவு உணவு வகைகள் இருக்கிறது என்றே தெரியும். இதுவரை படத்தில் பார்த்ததை நான் இப்போது என் கண் முன்னே பார்க்கிறேன். 30க்கு மேற்பட்ட சைவ-அசைவ கிராமத்து உணவு முறையில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை இங்கே சாப்பிட்டேன், சுவையாக இருந்தது...” என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை மற்றும் சமூக செயற்பாட்டாளர் கஸ்தூரி, மாறுவோம் மாற்றுவோம் அமைப்பின் நிறுவனர் நடிகர் ஆரி, நல்ல கீரை அமைப்பின் ஜெகநாதன், தமிழக இயற்கை விவசாயம் சார்பாக எழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கட்டுரை தொகுப்பு: ஆ.லட்சுமி காந்த் பாரதி