சிறிய கடையாக துவங்கி இரண்டே வருடத்தில் 15 கிளைகளாக விரிவடைந்துள்ள ’சாய் கிங்ஸ்’
ஒரே தொழில் சிந்தனை கொண்ட இரு நண்பர்கள் தங்களது ஐடி வாழ்க்கையை துறந்து தங்களுக்கு விருப்பமான சுய தொழிலை துவங்கி, பல தொழில்களில் ஈடுபட்டு, பல படிப்பினைகளை பெற்று இன்று கோடிகள் மதிப்புள்ள சென்னையின் பிரபலமான ’சாய் கிங்ஸ்’ உணவகத்தின் நிறுவனாராக வளர்ந்துள்ளனர். அவர்களது இந்த தொழில் பயணத்தை நம்முடன் பகிர்கிறார் துணை நிறுவனர் ஜாபர் சாதிக்.
சாய் கிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் ஜாபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோப்பன். ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிந்த இவர்கள் தங்களது வேலையை விட்டு தொழில் தொடங்க முடிவு செய்தனர். 2012-13 களில் தொழில் முனைவராக வளர சந்தையில் இருக்கும் சப் வே, பீட்சா போன்ற பெரும் பிராண்டுகளின் பிரான்சைஸ் எடுத்து நடத்தத் துவங்கினர். சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு பிரான்சைஸ்களை நடத்தியதோடு டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தையும் சிறிதளவில் இயக்கிக் கொண்டு வந்தனர்.
“சில ஆண்டுகள் உணவகத் துறையில் கொஞ்சம் அனுபவம் பெற்றதால் எங்களுக்கான உணவு பிராண்டை உருவாக்க நினைத்தோம். பல சந்திப்புகளுக்கு பிறகு மக்கள் அணுகக் கூடிய விலையில் சாய் பிராண்டை உருவாக்க முடிவு செய்தோம்,” என்கிறார் ஜாபர் சாதிக்.
பிரான்சைஸ் உணவகத்தில் தங்களது உழைப்பை கொடுத்து சலித்த இவர்கள், சுயமாக சென்னையில் காபி மையங்கள் அமைக்கலாம் என யோசித்தனர் ஆனால் ஏற்கனவே பல பிராண்டுகள் காபிகளுக்கு இருப்பதால் தேநீர் பக்கம் அவர்களது கவனம் திரும்பியது.
“சென்னையில் காபியை விட தேநீருக்கு அதிக சந்தை வாய்ப்பு இருக்கும் என நம்பினோம். வடஇந்தியாவில் தேநீர் கடைகள் அதிகம் உள்ளது, ஆனால் இங்கு இல்லை. நம் ஊருக்கு தேவையானதை கவனமாக தேர்வு செய்தோம்; சீரான நிறுவன அமைப்பை அமைக்க 7 மாத காலம் ஆனது,” என்கிறார்
பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு அக்டோபர் 2016 தங்களது முதல் கடையை நிறுவினர். அனைத்து பொருளாதார நிலையில் இருப்பவர்களும் அணுகும் வகையில் தங்களது கடை இருக்க வேண்டும் என முடிவு செய்த இவர்கள், 20 ரூபாய் குறைந்த விலையாக நிர்ணயித்தனர். இதுவே அவர்களது தனிப்பட்ட விற்பனைப் புள்ளியாகும்; குறைந்த விலையில் ஆரோக்கியமான சுவையான தேநீர்கள். எடுத்தவுடன் பல சுவைகள் மற்றும் உணவுகளை திணிக்காமல் முதலில் குறைவான வகைகளை மட்டும் வைத்து துவங்கினர்.
ஒரு கடையுடன் துவங்கிய சாய் கிங்ஸ் உணவகம் இரண்டே வருடத்தில் எட்டு கிளைகளாக வளர்ந்துள்ளது. பல கிளைகளுடன் தங்களது நிறுவனம் வளர்ந்திருந்தாலும் தற்போது பிரான்சைஸ் கொடுப்பதில் எந்த ஆர்வமும் இல்லை என்கிறார் சாதிக். இது குறித்து பேசிய அவர்,
“பிரான்சைஸ் கொடுத்தால் பிராண்டின் வளர்ச்சி பாதிப்படையும் என நினைக்கிறோம். மேலும் எங்களது கிளைகளை பார்த்துக் கொள்ளும் அளவு பெரும் நிறுவனமாகவே சாய் கிங்ஸ் உள்ளது. எனவே பிரான்சைஸ் மாடலை நாங்கள் கொண்டு வர விரும்பவில்லை,” என்கிறார்.
தங்களது உணவகம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் தற்பொழுது சென்னையில் மட்டுமே தங்களது பிராண்டை விரிவாக்க உள்ளனர். கூடிய விரைவில் சென்னையில் மட்டும் மேலும் 9 கிளைகள திறக்கவுள்ளது இந்நிறுவனம்.
சொந்த சேமிப்பில் இருந்து தங்களது முதல் கடையை 20 லட்ச முதலீடு கொண்டு துவங்கினர். கீழ்பாக்கில் துவங்கிய அவர்களது முதல் கடை நல்ல வரவேற்பை கொடுக்க, அடுத்த 6 கிளைகளையும் சொந்த முதலீட்டிலே துவங்கியுள்ளனர். அடுத்து துவங்கவிருக்கும் கிளைகளுக்கு சென்னை ஏஞ்சல் முதலீடு மூலம் 2 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி உள்ளனர்.
இந்த ஆண்டு முடிவிற்குள் 15 கிளைகள் சென்னயில் துவங்கப்பட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் சந்தையில் நுழய முயற்சிக்கிறோம் என்கிறார் சாதிக்.
“எங்களது விலை மற்றும் நிறுவன அமைப்பில் விரைவில் லாபம் பார்ப்பது சுலபம் அல்ல. விலையால் மற்ற உணவகத்தை விட எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்தால் மட்டுமே லாபத்தை எதிர்பார்க்க முடியும். ஆனால் எங்களது நோக்கம் அதுவல்ல...”
கடைகள் அளவில் பார்த்தால் ஜனவரி பிறகு ஒரளவு லாபம் பார்க்கத் துவங்கினோம். இருப்பினும் ஓர் நிறுவனமாக பார்த்தால் இன்னும் சிறிது காலம் தேவைப்படும். தற்பொழுது எங்களது நோக்கம் பிராண்டை விரிவாக்கி மக்களிடம் சேர்வது மட்டுமே என்கிறார். அடுத்த 5 ஆண்டுக்குள் 100 கிளைகள் அமைப்பதே தங்களது நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது என முடிக்கிறார் சாதிக்.