ஆட்டிசத்தை எதிர்த்து போராடி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 83 % எடுத்த மாணவர்!
பெரும்பாலான குழந்தைகள் தங்களது இளம் வயதில் விளையாட்டு, படிப்பு என பரபரப்பாக இருக்கையில் ஆறு வயதான ருத்ராக்ஷிற்கு ஒரு மாறுபட்ட அனுபவமே கிடைத்தது. மிகவும் இளம் வயதிலேயே இவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
டெல்லியில் வழக்கமான பள்ளியில் படிக்கத் தகுந்தவர் அல்ல என தெரிவித்தனர். அவரது எதிர்காலம் குறித்து வருந்திய அவரது பெற்றோர் தங்களது குழந்தைக்கு வழக்கமான பள்ளிக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக குர்கான் பகுதிக்கு மாற்றலாயினர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் ருத்ராக்ஷ் 83 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்போது ஜி டி கோயன்கா பப்ளிக் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் இருக்கும் ருத்ராக்ஷ் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் குறிப்பிடுகையில்,
பொதுத்தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்து எங்களது பள்ளியில் எடுத்துரைத்தனர். எங்களது ஆசிரியர்கள் அதிக முயற்சி எடுத்து விரைவாகப் பாடங்களை முடித்தனர். பல முறை மீண்டும் மீண்டும் பாடங்களை படிக்கவைத்து எங்களைத் தயார்படுத்தினர். கடந்த பல மாதங்களாகவே சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி போன்றவற்றிலிருந்து விலகியே இருந்தேன். தினமும் பல மணி நேரம் படித்தேன். கடந்த மாதத்திற்கு முன்பு வரை தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்து வந்தேன்.
அவரது குடும்பத்தினர் அவர் எடுத்த மதிப்பெண் குறித்து மகிழ்ச்சியோடு இருக்கையில் ருத்ராக்ஷ் கணித பாடத்தில் அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்டிருத்ததாக குறிப்பிடுகிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் அதிக ஈடுபாடு இருக்கும் ருத்ராக்ஷிற்கு ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரங்கள் மீது ஆர்வம் இருப்பதாக அவரது அம்மா சுகன்யா கார்த்திக் தெரிவித்தார்.
”என் மகன் எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் சிறப்பாக செயல்பட்டு என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எதிர்மறையான விஷயங்களையும் நேர்மறையாக மாற்றியுள்ளார். தனது லட்சியத்தை எட்ட சிறப்பான கவனமும் அர்ப்பணிப்பும் கொண்டுள்ளார்.”
”சிறப்பு கவனம் தேவைப்படும் நிலையைக் கண்டறிந்து தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் துவங்க இருக்கும் ருத்ராக்ஷைப் போன்றவர்களுக்கு அவரது சாதனை நம்பிக்கை அளிக்கும்,” என்றார்.
ருத்ராக்ஷிற்கு இரண்டு வயதிருக்கையில் அவரிடம் அறிகுறிகள் தென்படத் துவங்கியபோது அவரது பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். அவர் வளர்கையில் சமூகத்துடன் ஒன்றிணையாமல் ஒதுங்கியிருக்கத் தொடங்கினார். நகரில் உள்ள பேச்சு சிகிச்சையாளர்களின் உதவி பெறப்பட்டது. ருத்ராக்ஷ் படித்த பள்ளியில் அவரை இணைத்துக்கொள்வதற்காக சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் சேர்க்கைக்கான சிறப்பு அனுமதியை சிபிஎஸஇ இடமிருந்து அவரது பள்ளி பெற்றது.
தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்தது மட்டுமல்லாது அவருக்கு நீச்சலில் அதிக ஆர்வமுண்டு. பல்வேறு போட்டிகளில் பள்ளி சார்பாக பங்கேற்றுள்ளார்.
”தடகளப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளேன். 10 கிலோமீட்டர் மாரத்தான் நிறைவு செய்துள்ளேன். விளையாட்டு எனக்கு பெரிதும் உதவியுள்ளது. ஒவ்வொருவரும் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என பரிந்துரைக்கிறேன்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA