குழந்தைகளை தொழில்நுட்பத்தில் இருந்து விடுவித்து பிற ஆர்வத்தை தூண்டும் மையம் நடத்தும் இளம் தாய்!
திருமணத்துக்குப் பின் பொதுவாக வேலைக்கு செல்ல அல்லது ஒரு தொழில் தொடங்க பெரும்பாலான பெண்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும். அதை எல்லாம் தாண்டி மனதிற்கு பிடித்ததை செய்து அதில் முன்னேறுவது சவாலான விஷயமே. அவ்வாறு தனக்குள் நெடுநாள் கனவாய் இருந்த தொழிலைத் தொடங்கி தாயாகவும் தொழில் முனைவராகவும் வலம் வருகிறார் தீபிகா அருண்.
தீபிகா அருண் ஒரு பொறியியல் பட்டதாரி, படிப்பை முடித்தபின் மற்றவர்களைப் போல இவரும் ஒரு கார்ப்ரெட் வேலையில் அமர்ந்தார். அங்கு 4 வருடம் பணிபுரிந்த பிறகு தன் மனதிற்கு இது ஏற்ற வேலை இல்லை என தெரிந்து விலகினார். எப்போழுதுமே ஒரு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தீபிகா, சென்னையில் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் ஆனார். இரண்டு வருடம் ஆசிரியராக பணிபுரிந்த பின் குழந்தைகளுடன் இருப்பது மன நிம்மதி அளிப்பதை உணர்ந்தார். ஆனால் பள்ளி பணியாளர் அறை கார்ப்ரெட் அலுவலகத்திற்கு குறைந்தது இல்லை, தனக்கு அது பிடிக்கவில்லை என கூறுகிறார்.
“பள்ளயில் குழைந்தைகள் எப்போழுதும் ஸ்மார்ட்போன் பற்றியும், முகநூல், கணினி விளையாட்டுகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 5, 6 வயது குழந்தைகள் தொழில்நுட்பத்துக்கு அடிமையாவது வருத்தம் அளித்தது. அதை மாற்றவே நான் எண்ணினேன்.”
பள்ளியிலும், தன் குடும்பத்திலும் தன்னைச் சுற்றியுள்ள குழந்தைகள் யாவும் பாரம்பரிய பழக்கங்களை மறந்து தொழில்நுட்பத்தில் மூழ்கி இருந்ததை பார்த்த பிறகே 'ஜூலா ஆக்டிவிட்டி மையம்' Jhoola Activity Center ஒன்றை சென்னை நங்கநல்லூரில் தொடங்கினார் அவர். இங்கு பள்ளி முடித்து வரும் குழந்தைகள் மாலையில் புத்தகம் படிப்பது, பல்லாங்குழி போன்ற பல பாரம்பரிய விளையாட்டை விளையாடுகின்றனர். Gadget இல்லாமல் பிறரோடு இணைந்து மாலை நேரத்தை கழிக்கவே இந்த மையத்தை ஆரம்பித்தார் தீபிகா. 6 வருடம் இதை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்த அவர், கடந்த வருடமே துவங்கினார்.
பெற்றோர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. புத்தகம் படிக்கவும், விளையாடவும் பிள்ளைகளை சேர்ப்பார்களா என்ற தயக்கதிலே பல வருடங்கள் இந்த முயற்சி தள்ளி வைக்கப்பட்டது. அனைத்தையும் வென்று வருவதே வெற்றி. தன் குடும்பதின் உந்துதலில் ஜூலா மையத்தை தொடங்கினார்.
ஆரம்பத்தில் கோடை விடுமுறை முகாமாக தொடங்கி பின்னர் வார இறுதியே இதற்கு ஏற்றதாய் இருக்கும் என நம்பினார் ஆனால் அப்போதுதான் பிள்ளைகள் பாட்டு வகுப்பு, யோகா வகுப்பு, என பலவற்றில் பிஸியாக உள்ளனர். அதனால் வார நாட்களிலும் ஜூலா மையம் இயங்கத் தொடங்கியது, பெற்றோரும் அதையே விரும்புகின்றனர் என்றார் தீபிகா.
“பெற்றோர்கள் பலர் இதை வரவேற்றனர், அவர்கள் இதன் மூலம் குழந்தைகள் என்ன கற்று கொள்வார்கள் எனக் கேட்டனர். நான் இதை கற்று கொள்வார்கள் என நம்பிக்கை கொடுப்பதில்லை. குழந்தை ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள பல வகுப்பில் சேர்க்கிறோம் இதனால் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அவர்கள் இழக்கின்றனர். ஜூலாவில் அவர்களாகவே இருப்பர், கதை புத்தகங்களை இங்கே படிப்பதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்,” என்கிறார்.
ஒவ்வொரு புத்தகத்தையும் குழந்தைகள் தானாகவே தேர்வு செய்கிறார்கள். முக்கியமாக இந்திய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களே இங்கே அதிகம் இருக்கிறது. தீபிகாவின் மையத்திற்கு வரும் பெற்றோர்கள், முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கே மன அழுத்தம் இருப்பதாகக் கூறி அதை குறைக்கவே இங்கு சேர்ப்பதாக கூறுகின்றனர் என்று நம்மிடம் பகிர்ந்தார் தீபிகா.
மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கும் சூழலை ஜூலா உருவாக்கித் தருகிறது. 5 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் இணைந்து ஒரு அமர்வில் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, படிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு அமர்வில் 10 பிள்ளைகளை மட்டுமே தீபிகா சேர்க்கிறார். தனித்துவமாக அனைவருக்கும் கவனம் செலுத்த விரும்புகிறார். தற்போது ஒரு நாளில் 3 அமர்வுகள் நடைபெறுகிறது.
“என் குழந்தைக்கு 3 வயதாகிறது. இதுவரை அவள் ஸ்மார்ட்போனில் விளையாடியது இல்லை தொலைக்காட்சியும் பார்த்தது இல்லை. நிறைய புத்தகம் படிப்பாள். நான் எதை மற்ற பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறேனோ அதையே என் வாழ்விலும் பின்பற்றுகிறேன். பிள்ளைகள்; பள்ளியையும் மற்ற வகுப்பைக் காட்டிலும் ஜூலாவிற்கு ஆர்வமாக வருகின்றனர் என பெற்றோர்கள் சொல்ல கேட்க மகிழ்ச்சியாய் இருக்கிறது,” என்கிறார்.
ஒரு தொழில்முனைவராக இதை விளம்பரம் செய்யவே தீபிகாவிற்கு கடினமாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் தன் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளார். இப்பொழுது லாபம் காணவும் தொடங்கியுள்ளார். அதானால் இதுவரை தன் வீட்டிற்குள் நடத்தி வந்த மையத்தை தனியாக நடத்த முடிவு செய்துள்ளார். வரும் செப்டம்பர் முதல் தனி கட்டிடத்தில் இதை நடத்த உள்ளார்.
ஒரு தாயாக இருந்து எந்த சிரமும் இல்லாமல் தொழில் செய்ய முக்கியக் காரணமாக இருப்பது தீபிகாவின் குடும்பம். தன் மாமியார் மற்றும் கணவரின் ஆதரவால் தான் இதை சுலபமாக செய்ய முடிகிறது என்கிறார்.
இதைத் தாண்டி தன் சகோதரருடன் இணைந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் இந்த மாதம் நடந்து முடிந்த சுயசக்தி விருது விழாவில் கல்வி பிரிவில், வீட்டிலிருந்து தொழில் புரியும் ‘ஹோம்ப்ரூனர்’ விருதை பெற்றுள்ளார்.