இந்தியக் கிராமப்புறங்களில் மருத்துவ சாதனை- "ஐ க்யூர்"
மருத்துவச் சேவைக்கான புதிய மென்பொருளை உருவாக்கித் தனது கிளைகள் மூலம் மருத்துவ வசதி கிடைக்காத இலட்சக்கணக்கான மேற்கு வங்க கிராமப்புற மக்களுக்கு உதவி வருகிறது ஐ க்யூர்.
மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் மாவட்டத்தில் சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒருவர் இதயநோய் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு எவ்வளவோ சிகிச்சை அளித்தும் நோயாளியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போகவே, அவரது மகன் அவரை பெங்களூரு இதயநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், நோயாளிக்குத் தவறான மருந்து கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.
இந்த சம்பவம், இந்தியாவில் தொழில்முறை மருத்துவக் கவனிப்பு, கிராமப்புற மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை, ஐ க்யூரின் நிறுவனரும், மூத்த அதிகாரியுமான திரு சுஜய் சந்திரா அவர்களுக்கு உணர்த்தியது. இந்தியக் கிராமப்புற மக்களில் (84 கோடிப் பேர்களில்) 30% க்கு மட்டுமே மருத்துவ வசதி கிடைப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இதற்காகவே "ஐ க்யூர்" (ikure), 2015 மார்ச் 20 ஆம் தேதி துவக்கப்பட்டது.
‘’கிராமப்புற மக்களை எளிதில் சென்றடைய கூடிய வகையிலும், அவர்களது பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையிலும் மருத்துவ சேவை அளிப்பதற்காக "ஐ க்யூர்" (IKure), நிறுவனம் துவங்கப்பட்டது என்று அதன் நிறுவனர் சுஜய் சன்ட்ரா கூறுகிறார். இந்த சேவை, நோயாளிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் எங்களது முதலீட்டாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் திருப்தியளிக்கிறது’’ என்று கூறுகிறார் ‘’அரசு தீவிர முயற்சி மேற்கொண்டாலும் ஆள் பற்றாக்குறையாலும், போதிய வசதியின்மையாலும், தரமற்ற நிலையிலும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது கிராமப்புற ஆரோக்கியம். ‘இந்தியாவில் 43.5% கிராமங்களில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளனர்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் 2012 ஆண்டுக் கணக்கெடுப்பு. ஆனால் அதிலும் மோசம் என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் மருத்துவர்கள் தங்கள் பணியிடத்தில் இருப்பதில்லை, நிர்வாக அமைப்பு சீர் குலைந்து கிடக்கிறது. தேவைப்படும் இடங்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதில்லை, சரியான கண்காணிப்பும் கிடையாது.
எனவே நவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து, கடைக்கோடிக் கிராமத்திற்கும் மருந்துவத்தைக் கொண்டுபோய் சேர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம். அதாவது குறிப்பிட்ட மருத்துவ நிலையத்தின் வரம்பிற்கு உட்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப் படுத்துவற்கான கணினி மென்பொருளை மருத்துவத்துறை உருவாக்க வேண்டும் இதற்காகவே "WHIMS" எனும் தொழில்நுட்பம் தளம் தொடங்கப்பட்டது.
"WHIMS" (Wireless Incident Monitoring System) அதாவது, நிகழ்வுகளை வயர்லெஸ் ஒளிப்பரப்பு மூலம் கண்காணிக்கும் முறை மென்பொருள் ஒன்றை ஐக்யூர் நிறுவனம் தயரித்துள்ளது. இது மருத்துவ வசதி சரிவர இல்லாத கிராமப்புற மக்களை மருத்துவமனையுடன் இணைக்க உதவுகிறது. WHIMS ஒரு க்ளவ்டு முறை வலை பயன்பாடு. இது குறைவான அலைவரிசையின் மூலம் செயல்பட்டு நகர்புறம் மற்றும் கிராமபுறத்தை இணைக்ககிறது.
நகரத்தை சேர்ந்த மருத்துவர்கள் தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்று சேவையாற்றுவதில் பெரும் மனத்தடை உள்ளது. ஆனால் இந்தக் கண்காணிப்பு வலைப்பின்னல் சேவை, கிராமப்புற நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவிகரமாக அமைந்துள்ளது. ஒன்று, நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்படுகிறார்கள். மற்றொன்று, நோயாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சிகிச்சை வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய முடிகிறது. கண்காணிப்புப் சேவையுடன் காணொளி வசதியும் இணைக்கப்படுகிற போது அதில் நோயாளியின் மருத்துவப் பதிவுகளை சேமித்து வைக்க முடிவதுடன், வழங்கப்பட்ட மருத்துவ அறிவுரை பிற்காலத்தில் சரிபார்க்கவும் அது உதவிகரமாக இருக்கிறது. "இந்தமுறை, சிகிச்சையை மேம்படுத்துவதற்கு உதவும் என்பதோடு எந்தெந்த பகுதிகளில் எத்தகைய நோய்கள் உருவாகின்றன என்பதை நாங்கள் கண்டறிவதோடு முக்கிய நோய்களை வகைப்படுத்தவும், அதற்கான காரணங்களை ஆராயவும் முடிகிறது’’ என்கிறார் சுஜய்.
தற்போது, ஐ க்யூர், நோயாளிகளுக்கு மருத்துவர் வழங்கும் பரிந்துரை வாயிலாகவும், நோயைக் கண்டறிதல் வாயிலாகவும் பணம் ஈட்டுகிறது. 2016 முதல், புறப்பரிந்துரையின் வாயிலாக மருத்துவமனையின் திறனை அதிகரித்துக் கொள்வதன் மூலம் தங்கள் வருமானத்தை மேலும் கூடுதலாகப் பெருக்கிக் கொள்ள முடியும். ‘’எங்களது சேவைக்கான தேவை அதிகரிக்கும் போது, அதற்குரிய வேகத்தில் உள் கட்டமைப்பை உருவாக்குவது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் சுஜய்.
பிற தொழில் துறையினரின் முதலீடு மற்றும் கூட்டுத் தொழில் மூலம் எங்கள் நிறுவன சேவைகளை விரிவுபடுத்தி, தொலைதூர கிராம மக்களுக்கு மருத்துவ சேவையை மிக விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்புகிறோம்’’ என்கிறார். ‘’கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகளில் இருந்த திறமையான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருந்தக ஊழியர்களை எங்களுடன் இணைத்து ஐம்பது பேர் கொண்ட ஒரு தேர்ந்த குழுவை உருவாக்க முடிந்திருக்கிறது. இந்தச் செயலூக்கமிக்க படை 24 மணிநேரமும், வாரம் முழுதும் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது’’ என்கிறார் சுஜய்.
தொலைதூர மருத்துவம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றாலும் ‘’நவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக கிராமப்புறத்திற்கு மருத்துவ சேவை அளிப்பதில் எங்களது ஐ க்யூர் தான் தேசத்தில் முன்னணியில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கணினி மென்பொருள் பொறியாளர்கள், குறு மருந்தாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள் என அனைத்து துறைகளிலும் திறமை பெற்ற நிபுணர்கள் எங்களிடம் மட்டுமே உள்ளனர்’’ என்கிறார் சுஜய். ‘’தொலைதூர மருத்துவத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் அதற்குரிய தகவல் தொழில்நுட்ப வசதி, நவீன மருத்துவக் கருவிகள், நமது பாரம்பரிய முறைப்படி நோயாளிக்கு அருகில் இருந்து கவனிப்பது ஆகிய ஏற்பாடுகள் இல்லாததால் அதனை முன்னெடுத்துச் செல்வதில் எண்ணற்றத் தடைகள் உள்ளன. அதற்கு மாறாக குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் எங்களது ஐ க்யூர் கிராமப் புற மக்களுடன் கொண்டுள்ள சமூக மட்டத்திலான பிணைப்பின் மூலம் தனக்கான ஒரு பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. எங்களிடம் உள்ள, ரீமோட் கண்காணிப்பு தொழில்நுட்ப மூலம் செயல்படும் சமூக மருத்துவ மையங்கள், தொலைதூர மருத்துவத்திற்கு ஆகும் செலவை காட்டிலும் பத்தில் ஒருபங்கு மட்டுமே இதற்கு செலவாகிறது. தரமான மருத்துவ சேவையை கிராமப்புற மக்களுக்கு எங்களால் வழங்க முடிகிறது. (அருகாமைப் பகுதியில் பிற மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு 120 – 150 ரூபாய் பெற்று வருகிற நிலையில் எங்களது ஐ க்யூர் தனது தரமான மருத்துவ சேவையை 80 – 100 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் அளித்து வருகிறது)
சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள், தரமான உயிரியல் சாதனங்கள், ஆய்வகம் போன்ற வசதிகளுடன் மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மற்றும், மித்னாப்பூர் மாவட்டங்களில் 24 கிராமப்புற சுகாதார மையங்களை இயக்கி வரும் ஐ க்யூர் நிறுவனம், விரைவில் ஒரிசா, பிகார், அசாம் மற்றும் ழக்கு இந்திய பகுதிகளில் 100 கிராமப்புற மையங்களை துவக்கத் திட்டமிட்டு வருகிறது.
தனது திட்டத்தைப் பற்றி கூறிய பின் ‘’நான் கடந்து வந்த தொடர் நிகழ்வுகள் நிறைந்த நெடும் பயணத்தை நினைத்துப் பார்க்கிறேன். அது எனக்குப் பல வெற்றிகளையும், தோல்விகளையும் அளித்துள்ளது. இதிலிருந்து நான் கற்றுக் கொண்டது இதுதான் – தோல்விகளைச் சுவைக்காத ஒருவனால் நிச்சயமாக வெற்றி மீது விருப்பம் கொள்ள முடியாது. நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்த்து விட்டேன். எனவே எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் துணிவு இப்போது எனக்கு இருக்கிறது.’’ என்கிறார் சுஜய் தன்னம்பிக்கையுடன்
‘’என்னைப் போன்ற தொழில் முனைவர் பலரும் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயித்து விடுகின்றனர். ஆனால் அதனை நோக்கிப் பயணிப்பதில் அவர்களுக்கு நிறைய மனத்தடைகள் இருக்கின்றன. நமக்குள் மறைந்திருக்கும் துணிவையும், நமக்குள் பொதிந்து கிடக்கும் மன வலிமையையும் வெளிக் கொணர்ந்து நடை போட்டாக வேண்டும்’’ என்று கூறித் தனது பேச்சை நிறைவு செய்தார் சுஜய்.
ஐ க்யூர் பற்றி மேலும் விபரங்கள் அறிய : http://www.ikuretechsoft.com/#