புரட்சி செய்யும் தேனீ மனிதன்!
பட்டாம் பூச்சி விளைவு என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது தான் தற்போது தேனீ விளைவு என அழைக்கப்படுகிறது. கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான இந்த தேனீக்களின் தொகுப்பு பயிர்களில் 70 % அளவுக்கு மகரந்தச் சேர்க்கைக்கு காரணமாகிறது. இதன் மூலம் 90% மனிதர்களுக்கான உணவு கிடைக்கிறது. மிகவும் பரபரப்பான இந்த தேனீக்கள் உருவாக்கியுள்ள நீண்ட மற்றும் சிக்கலான சங்கிலித் தொடர் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த தேனீக்கள் திடீரென காணாமல் போனதன் விளைவாக நமது சுற்றுச்சூழலில் காணப்படும் சமநிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்யுள்ளது. இதன் காரணமாக, நினைத்துக்கூட பார்க்கமுடியாத விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் தான் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கஜ்பியே என்பவர் "பீ தி சேஞ்ச்" என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகள் மற்றும் வனவாசிகளுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்து வருகிறார். பண்ணை மற்றும் விவசாயப் பணிகள் நடத்தப்படும் இடங்களுக்கு அருகிலேயே இந்த தேனீக்கள் வளர்க்கப்பட வேண்டும் என்பது அவரது முக்கிய ஆலோசனையாக உள்ளது. இதன் மூலம் விவசாய உற்பத்தியானது 20% முதல் 200 % வரை அதிகரிப்பதுடன் இந்த தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனை சந்தையில் விற்பனை செய்தும் பணம் பார்க்கலாம் என்பது அவரது வாதமாகும்.
பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தேனீக்கள் அளிக்கும் மறைமுக சேவைகள் மூலமாக ஆண்டுக்கு 200 மில்லியன் பவுண்ட் வருவாய் கிடைப்பதுடன் மகரந்தச் சேர்க்கையின் மூலமாக 1 பில்லியன் பவுண்ட் கூடுதல் வருமானம் கிடைப்பது தெரியவந்துள்ளது. இதே போன்று மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் தெரியவந்துள்ளதும் இதுதான். அமெரிக்காவில் சில வகையான தேனீக்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டது. ஐரோப்பாவிலோ சில இன தேனீக்கள் அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலோ தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போய்விட்டது. மொபைல் கருவிகள் மற்றும் செல்ஃபோன் டவர்களில் இருந்து வெளியாகும் ஒருவிதமான கதிர்வீச்சுதான் இதற்கு காரணம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. தேனீக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவு அனைவருக்கும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தேனீ விளைவில் ஏற்படும் பெரும் பாதிப்புக்களை பார்த்தால் அதை ஒரு சிறிய பிரச்சனையாக நினைத்து விட முடியாது. இதனால் தான் ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை தேன் உற்பத்திக்கான ஒரு முயற்சியாக மட்டுமே பார்க்காமல் அதனால் ஏற்படக்கூடிய பெரிய மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு நாம் பார்க்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோழிக்கோட்டில் உள்ள ஐஐஎம் இல் பட்டப்படிப்பு முடித்த ஸ்ரீகாந்த், புனேயில் உள்ள அரசு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தேனீ வளர்ப்பு குறித்த ஐந்து நாள் பயிற்சி பெற்றார். தொடக்கத்தில் பொழுதுபோக்கு கண்ணோட்டத்துடன் தான் இந்தப்பயிற்சியில் சேர்ந்த போதிலும் தேனீ வளர்ப்பின் மீது அவருக்கு தணியாத ஈடுபாடு ஏற்பட்டது. "தேனீக்கள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் உண்மைகள் பற்றி நான் தெரிந்து கொண்டதுடன் மகரந்தச் சேர்க்கை மூலமாக அவை நமது சுற்றுச்சூழலுக்கு அளிக்கும் பங்களிப்பு பற்றியும் தெரிந்து கொண்டேன்" என்கிறார் அவர். "இயற்கையில் தேனீக்களின் பங்களிப்பு பற்றி மட்டுமின்றி அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்கையிலும் பெரும் மாற்றத்தை அவை எவ்வாறு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றும் எனக்குத் தெரிந்தது" என்கிறார் ஸ்ரீகாந்த்.
கடந்த சில மாதங்களில் மட்டும் ஸ்ரீகாந்த்தின் "பீ தி சேஞ்ச்" அமைப்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. தற்போது இந்த அமைப்பில் 50 பயிற்சியாளர்கள் உள்ளனர். "எங்களது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளை நாங்கள் சந்தித்து அவர்களுக்கு தேனீ கூண்டுகளை அளித்து இலவச பயிற்சியும் அளிக்கிறோம். பின்னர் அவர்கள் தேனீக்களை வளர்க்கத் தொடங்கிய பின்னர், நிர்ணயித்த விலையில் அவர்களிடம் இருந்து நாங்கள் தேனை கொள்முதல் செய்கிறோம். எங்களது அமைப்பு லாப நோக்கமற்றது என்பதால் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் தேனை எங்களது பிராண்ட் பெயரில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறோம்" என்கிறார்.
விவசாயிகளைப் பொருத்தவரையில் தேன் மற்றும் மெழுகு விற்பனை என்பது அவர்களுக்கு கிடைக்கும் ஏராளமான பயன்களில் ஒன்றாக அமைகிறது. தேனீக்களில் முதலீடு என்பது அந்த பயன்களைத் தரக்கூடியதாகும். விவசாய உற்பத்தியும் அதிகரிக்கிறது என்பதுடன் அது ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. "தேனீ வளர்ப்பதும் பூச்சி மருந்து வைத்துக் கொள்வதும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் பூச்சி மருந்தில் உள்ள ரசாயனங்கள் தேனீக்களை கொன்றுவிடும். எனவே தேனீக்கள் வளர்க்கும் போது பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளை கேட்டுக் கொள்கிறோம்" என்கிறார் ஸ்ரீகாந்த். இதனால் பூச்சி மருந்துகள் பயன்பாடு தானாக குறைந்துவிடுகிறது. "பீ தி சேஞச்" அமைப்பின் 25 பயிற்சிகயாளர்கள் இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனீ வளர்ப்புக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விவசாயிகளிடம் பேசி அவர்களை சம்மதிக்க வைப்பது எளிதான பணியில்லை. "ஒரு தேனீக் கூண்டின் விலை 5 ஆயிரம் ருபாய். தேனீக்கள் சில மாதங்கள் கழித்துத் தான் தேன் உற்பத்தி செய்யக் தொடங்கும். பொதுவாக நாங்கள் பணி செய்த இடங்களில் 10ல் ஒரு விசாயி மட்டும்தான் தேனீ வளர்க்க ஆர்வம் காட்டுகிறார். ஆனால் அந்த அந்த விவசாயியின் பயிர் உற்பத்தி அளவு அதிகரித்திருப்பது தெரிய வரும் போது மற்றவர்களும் இதில் ஆர்வம் காட்ட முன் வருகின்றனர்" என்கிறார் ஸ்ரீகாந்த். மேலும் ஒரு தேனடை ஒவ்வொரு ஆண்டும் வேறு இரண்டு தேனடைகளை உருவாக்கி அதன் மூலம் வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
ஸ்ரீகாந்த் நடத்தி வரும் அமைப்பு வனவாசிகள் மத்தியில் பணியாற்றும் போது சற்று மாறுபட்டவகையில் பணியாற்றுகிறது. "நாங்கள் அவர்களுக்கு இயற்கையான முறையில் எவ்வாறு தேனை எடுப்பது என்று கற்றுக்கொடுக்கிறோம். தேனீக்களை துன்புறுத்தாமல் தேன் எடுக்கும் முறை அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இது அவர்கள் தங்கள் வருவாயை அதிகரிப்பதுடன் தேனீக்களை பாதுகாக்கவும் உதவுகிறது" என்கிறார் அவர்.
இதே போன்ற முறையில் செயல்படும் சில அமைப்புகள் தான் உள்ளன எனக்கூறும் ஸ்ரீகாந்த், அவை பெரும்பாலும் விவசாயிகள் மத்தியில் தான் பணியாற்றுகின்றன என்றும் ஆனால் தாங்கள் வனங்களிலும் செயல்படுகிறோம் என்கிறார். "மேலும் இந்த அமைப்புகள் தங்களது உற்பத்தி பொருட்களை கூடுதல் விற்பனைக்கு விற்கின்றன, ஆனால் நாங்கள் எங்களது உற்பத்தியை யார் வேண்டுமானாலும் அணுகத்தக்க விலையில் விற்பனை செய்கிறோம்" என்கிறார் அவர்.
போதிய தேனீ வளர்ப்பு பயிற்சியின்மை, தேனீ கூண்டுகள் இல்லாத நிலை, பயிற்சியாளர்களுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலை, தேனீக்களைப் பற்றிய தவறான எண்ணம், மொழி பிரச்சனை, போதிய நிதியின்மை ஆகியவை இந்த பணியில் ஈடுபடுவர்கள் சந்திக்கும் சவால்களாகும். "பீ தி கேஞ்ச்" இந்தச் சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது. எனினும் "முதலில் நாங்களே எங்களைத்தயார்படுத்திக் கொண்டு இந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். சில நிபுணர்கள் எங்களுக்கு பயிற்சி, ஆதரவு மற்றும் கூண்டுகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வர உதவுகின்றனர். அபரிவிதமான வெற்றி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சுமுக ஆர்வத்தைப் பெறுவதும் தான் மிக முக்கியம் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்கிறார்.
தற்போது இயற்கையாகவே உள்ள தேனடைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக புதிய தேன் கூண்டுகளை அமைப்பதில் ஆகும் செலவுகள் அதிகமாக உள்ளது. "இயற்கையான முறையில் தேனீகூண்டுகளை அமைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இயற்கை தேன் உற்பத்தி மற்றும் தேன் மெழுகு அடிப்படையிலான அழகு சாதன பொருட்கள் உற்பத்தி குறித்து பெண்கள் அடங்கிய குழுக்களுக்கு பயிற்சி அளிக்கவும் பீ தி சேஞச் திட்டமிட்டுள்ளது. பீ தி சேஞ்ச் செய்து வரும் பணி உண்மையிலேயே சிறமந்தது. 20 தன்னார்வலர்கள் கொண்ட இந்தக் குழுவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே தெரிகிறது. "இந்த அண்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்,அதை இங்கேயே ஆரம்பியுங்கள்" என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருப்பதை நினைவுகூர்கிறார் ஸ்ரீகாந்த்.
போதிய அளவுக்கு ஆதாரங்கள் இல்லை என்றபோதிலும், அவர்களது நோக்கம் பெரியது என்பதால் மாற்றம் ஏற்படுத்துவது மட்டும் அல்ல. ஒரு புரட்சி செய்வதுதான் அவர்களது இலக்காகும்.
மேலும் தகவல்களுக்கு: http://www.beethechange.in/