90ஆண்டு பழமைப் புடவைகள் உடுத்தி ’ஜவுளி மாசு’ தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமதி அழகிகள்!
ஜவுளித் துறையே இன்று உலக மாசுபாட்டில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. அதை வலியுறுத்தி, ஜவுளி மாசுப்பாடை தடுக்க பழைய ஆடைகளை ‘ரீ- ஸ்டைல்’ செய்து பழமையான புடவைகளை அணிந்து வலம் வந்தனர் திருமதி இந்திய அழகிகள்!
வயது, எடை, உயரம் அல்லது வண்ணம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அழகு மற்றும் பேஷன் உலகில் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொண்டு முன்னோடியாக விளங்கும் திருமதி இந்தியா போட்டிகள், அழகு பற்றிய உலகத்தாரது கண்ணோட்டத்தையும், சமூகத்தில் நிலவும் ஸ்டீரியோடைப்களையும் ஏற்கனவே முற்றிலும் உடைத்துவிட்டது. 2019ம் ஆண்டில் திருமதி இந்தியா போட்டி, மற்றொரு முறை அவர்கள் முன்மாதிரிகள் என்பதை நிரூபித்துள்ளது.
ஆம், ஜவுளி மாசுப்பாட்டிற்கு எதிரான கூரலை எழுப்பியுள்ளார் திருமதி இந்தியா போட்டியை 2013ம் ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய தீபாலி ஃபட்னிஸ்.
'Re-style' ‘ரீ-ஸ்டைல்’ என்பது ஜவுளி மாசுபாடுகளை குறைப்பதற்காக நம்மிடம் இருக்கும் துணிகளையே மறுவடிவமைப்பு செய்து மறுபயன்பாடு செய்வதை வலியுறுத்தும் ஒரு தீவிரமான கருத்தாகும்.
திருமதி இந்தியா போட்டிகள் மாசுபாட்டின் ஒரு பகுதியாக இல்லாமல் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்துள்ளது. அதன் தொடக்கமாக இந்தாண்டின் திருமதி இந்தியா பங்கேற்பாளர்கள் ‘திருமதி இந்தியா -2019’ இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் ‘மறுசீரமைக்கப்பட்ட’ ஆடைகளையே உடுத்தி உள்ளனர்.
‘திருமதி இந்தியா -2019’ இறுதிப் போட்டியில் நான்கு தலைமுறை வயதுடைய மற்றும் ஒரு நூற்றாண்டு வயதுடைய ஆடைகளையும் அழகிகள் அணிந்து கம்பீரமாக நடந்து அதன் பின்னாலிருந்த கதைகளை கூறினர்.
திருமதி இந்தியாவில் நடந்த இந்த புரட்சிகர சுற்று, பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்தும் ரீ-ஸ்டைல் டிரெண்டை உருவாக்கி அதிகப்படியான துணிகள் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கும் என்று நம்புகின்றனர்.
ஜவுளித் துறையே இன்று உலக மாசுபாட்டில் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக உள்ளது. இந்த புரட்சிகர சுற்று மூலம் ‘திருமதி இந்தியா 2019’ ஜவுளி மாசுபாட்டின் ஆபத்தான பிரச்சினைக்கு கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல், பாரம்பரிய நெசவுளார்களின் தூய்மையை கொண்டாடுவதற்கான முயற்சியினையும் எடுத்துள்ளது.
திருமதி இந்தியா 2019-ன் பைனலிஸ்டுகள் உடுத்தியிருந்த ஒவ்வொரு ஆடைகளும் தனித்துவமான மற்றும் உத்வேகம் தரும் கதைகளை வெளிப்படுத்தியது.
‘திருமதி இந்தியா 2019’-ன் 40வயதுக்கு உட்பட்டோருக்குகான போட்டியின் வெற்றியாளர் பிரியங்கா அபிஷேக், போட்டி அமைப்பினரது இம்முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஆம், இயல்பில் ஒரு கலைஞராகவும் ஓவியராகவும் இருப்பதால் லெஜண்ட்ரி பெயிண்டர் ராஜா ரவி வர்மாவின் பிரபலமான ஓவியமான பழங்களை சுமந்து நிற்கும் மகாராஷ்டிரிய பெண் ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடைய மூத்த மாமியாரின் புடவையைk கொண்டு அவருடைய தோற்றத்தை ஓவியத்தை போன்றே உருவாக்கிக் கொண்டார். அவரணிந்த சேலையின் வயது 90.
அவர் தனது கலை மீதான அன்பையும், ஜவுளி மாசுபாட்டின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்த விரும்பிய அதே நேரத்தில், புகழ்பெற்ற ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தை கொண்டாடும் விதமாகவும், அவரது குடும்பத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்றுவதற்கான வாய்ப்பாகவும் கருதி உள்ளார்.
‘திருமதி இந்தியா 2019’-ன் வெற்றியாளர் அவரது கற்பனையில் உருவாக்கிய உடையை அணிந்து நடக்கையில் ஓவியமே நடப்பது போன்றதொரு காட்சியாக இருந்தது என்று பங்கேற்றவர்களும், பார்வையாளர்களும் மிகவும் ஆச்சரியமாக கண்டுகளித்தனர். இதற்கு முன்பாக இப்படியொரு யோசனையில் எவருமே ஆடை அணிந்ததில்லை என்று கூறி பிரமித்தனர்.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெற்றியாளர் பிரியங்கா, அவரது தோற்றத்தை அமைக்க இரண்டு அழகான கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் புடவைகளைப் பயன்படுத்தி ரீ- ஸ்டைல் செய்துள்ளார். இரண்டு சேலைகளும் 90 ஆண்டுகளுக்கு முன்பாக நெய்யப்பட்டது. இது அவரது குடும்பத்தின் பாரம்பரிய புடவையை அவருடைய மாமியார் பிரியங்காவிற்கு பரிசளித்துள்ளார்.
“என் பிறந்த வீட்டை பிரிந்து இருக்கும் துயரத்தை ஒருபோதும் என்னை உணரவிடாமல் வைத்திருந்தார் என் மூத்த மாமியார். நான் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவரை நான் ரோஸி என்று தான் கூப்பிடுவேன். அவர் இறந்தபிறகு, அவருடைய நினைப்பு வரும் போது எல்லாம் இந்த விலைமதிப்பற்ற சேலையை எடுத்து பார்த்து கொள்வேன். இந்த விலைமதிப்பற்ற உடைமைக்கு பின்னாலிருந்து எனது கதையை வெளிப்படுத்த திருமதி இந்தியா போட்டிகள் எனக்கு வாய்ப்பளித்தை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
”நான் எங்களது பாரம்பரியத்தை எனது குழந்தைகளுக்கும் கடத்துவேன். மேலும் துணி மறுபயன்பாட்டின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவேன். இது ஜவுளி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் குடும்ப பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது.” என்றார் பிரியங்கா.
40 வயது முதல் 60 வயது பிரிவினருக்கான ‘கிளாசிக் திருமதி இந்தியா - 2019’ போட்டியின் வெற்றியாளரான நிமிஷா சக்சேனா, இன்று ஜவுளி மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றான நீர் மாசுபடுவதை கவனத்தில் கொள்ள அவர் கடற்கன்னி போல உடையணிந்துள்ளார். ஏனெனில், சாயமிடுதல், ஆலைகளில் அன்றாடம் வீணாகும் மைக்ரோஃபைபர்கள் என ஜவுளி மாசுபாடு மனித பயன்பாட்டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. நிமிஷா சக்சேனாவின் ஆடை அவரது தாயின் 30 வயதுடைய சேலையால் உருவாக்கியுள்ளார்.
திருமதி இந்தியா பைனலிஸ்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. உலக சாம்பியன் ஐஸ்வர்யா மணிவண்ணன் அவர்களால் உலகின் பழமையான தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒடிஸி எக்ஸ்போனென்ட் குருமா வாணி மாதவ் அவர்களால், இந்திய கிளாசிக்கல் நடனப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், நேச்சுரல்ஸ் சலூன் தனிப்பட்ட முடி மற்றும் ஒப்பனை குறித்து பயிற்சி அளித்தது. இவை தவிர, சருமத்தை பேணிக்காப்பதற்கான அறிவுரைகள் வல்லுநர்கள் வழங்கினர்.
இறுதி போட்டியாளர்களுக்கிடையே காரச்சார சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த சுற்றுகள், இடை இடையே பல நிகழ்வுகள் என ‘திருமதி இந்தியா 2019’ அழகு போட்டி பிரம்மாண்டமாய் கடந்த 13ம் தேதி முதல் 16 வரை வெகு சிறப்பாய் நடந்து முடிந்தது.
இறுதிப்போட்டிக்கு 60பேர் தேர்வாகிய நிலையில் கேள்வி பதில் சுற்றில் 25 பேர் தகுதி பெற்று அடுத்த சுற்றுக்கு தேர்வாகினர். அந்த 25 அழகிகளில் இருந்து வெவ்வேறு வயதுக்கு உட்பட்ட பிரிவில் 3 அழகிகள் மகுடம் சூடினர். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் பிரியங்கா அபிஷேக்கும், 40 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நிமிஷா சக்சேனாவும், 60வயதுக்கும் மேற்பட்டோர்களுக்கான ‘சூப்பர் கிளாசிக்’ பிரிவில் சோபா தேவியும் வெற்றி பெற்று, மகுடம் சூடி மேடையை அலங்கரித்தனர்.