ஏழை மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் தைத்து கொடுக்கும் 98 வயது மூதாட்டி!
பஞ்சாபைச் சேர்ந்த 98 வயதான மூதாட்டி குருதேவ் கவுர் தலிவால். முகக்கவசம் வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவுகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்கின்றனர் நிபுணர்கள். தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைவரும் நோய்தொற்றில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்வதும் சானிடைசர் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வதும் அவசியமாகிறது.
இதனால் சந்தையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இந்தப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏழை மக்களால் இவற்றை வாங்க முடிவதில்லை. இந்தக் காரணத்தால் பலர் பாதுகாப்பாற்ற முறையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்கின்றனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் பல தனிநபர்களும் என்ஜிஓ-க்களும் இலவசமாக முகக்கவசங்களையும் சானிடைசர்களையும் வழங்கி வருகின்றனர்.
பஞ்சாபைச் சேர்ந்த 98 வயதான மூதாட்டி குருதேவ் கவுர் தலிவால். ஏழை மக்கள் முகக்கவசத்தை வாங்க முடியாமல் தவிப்பதைக் கண்ட குருதேவ் கவுர் அவற்றைத் தயாரித்து இலவசமாக வழங்கி உதவத் தீர்மானித்துள்ளார்.
இவர் தினமும் அதிகாலை எழுந்துவிடுகிறார். கடவுளைப் பிரார்த்திக்கிறார். அதன் பிறகு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முகக்கவசம் தயாரிக்கிறார். இவற்றை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவுகிறார்.
இவருக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது. இருப்பினும் மக்களுக்கு உதவவேண்டும் என்கிற நற்சிந்தனையே இவருக்கு ஊக்கமளிக்கிறது. இந்தத் தள்ளாத வயதிலும் தையல் இயந்திரத்தின் உதவியுடன் முகக்கவசம் தயாரித்து வருகிறார்.
இவரது செயலைப் பாராட்டும் வகையில்
“கொரோனாவிற்கு எதிரான போரில் இவர் ஒரு வலிமையான போராளி,” என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பதிவில் குருதேவ் கவுரைப் பாராட்டியுள்ளார்.
தலிவாலின் மருமகளான அமர்ஜித் கவுர் பிடிஐ உடனான உரையாடலில் கூறும்போது,
“சாலைகளில் காய்கறிகளை விற்பனை செய்யும் பலர் முகக்கவசம் அணியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் இல்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். உடனே அவர்களுக்கு இலவசமாக வழங்கத் தீர்மானித்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அரசாங்கம் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில் இவரது உதவி ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA