இந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...
விவசாய நிலத்தை கலையின் ஒரு புதிய வடிவத்திற்கான தளமாக பயன்படுத்தமுடியும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? ஆனால் 1993-ம் ஆண்டு இன்கடேட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களை அழகுப்படுத்த ஒரு புதிய வடிவிலான நில வடிவமைப்பை ஆராய்ந்தனர். அதுதான் நெற்பயிர் கலை. பிரபல மவுண்ட் இவாகியின் மாதிரியை வெவ்வேறு நிறங்களைக் கொண்டு நெற்பயிர்களை விதைத்து உருவாக்கினர்.
ஒரு புதிய கலை வடிவம் உருவானது. அதுவே டாம்போ அடோ அல்லது நெற்பயிர் கலை என்றழைக்கப்பட்டது. இன்று 8,000 பேரை மட்டுமே கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் இனக்டேட் நெற்பயிர் கலைவண்ணம் 2,00,000-க்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
இந்தியாவில் மஹாராஷ்டிராவில் இருபதாண்டுகள் கழித்து ஒரு பொறியாளரும் தாவரவியல் ஆர்வலரும் இந்தக் கலையை உருவாக்கியுள்ளனர். புனேவைச் சேர்ந்த 64 வயதான ஸ்ரீகாந்த் இங்கல்ஹலிகர் ஒரு பிரம்மாண்டமான 40 மீட்டர் நீள கணேசர் வடிவமைப்பை டான்ஜ் படா (Donje Phata) பகுதியில் உள்ள ஒரு நெற்பயிர் விளையும் நிலத்தில் உருவாக்கியுள்ளார். இந்தக் கிராமம் சயாத்திரி மலைகளிடயே அமைந்துள்ளது.
இயற்கை ஆர்வலரான ஸ்ரீகாந்த் கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதி வருகிறார். வன விலங்கு புகைப்படக்கலையும் முடித்துள்ளார். ’ஃப்ளவர்ஸ் ஆஃப் சயாத்திரி’ என்கிற வலைப்பக்கத்தை நிர்வகித்து வருகிறார். சயாத்திரி பகுதியில் வளர்ந்து வரும் பல்வேறு பூக்களை மூன்று புத்தகங்களாக பட்டியலிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ’ஹோம்க்ரோன்’ உடனான உரையாடலில் இன்கடேட் நெற்பயிர் கலைவண்ணம் குறித்த புகைப்படங்களை இணையம் வாயிலாக பார்த்த போது பிரமித்துப் போனதாக தெரிவித்தார்.
“கடந்த 25 ஆண்டுகளாக நெல் சாகுபடியில் ஈடுபட்டிருந்தேன். ஜப்பானில் சில விவசாயிகள் நெற்பயிர் விளையும் நிலங்களில் கலையை உருவாக்குவது சுவாரஸ்யமாக இருந்தது. என்னால் அதை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. ஏனெனில் பச்சை நிற இலைகளைக் கொண்ட நெற்பயிர் குறித்து மட்டுமே நான் அறிந்திருந்தேன். ஆனால் ஜப்பானில் ஐந்து நிறங்களில் நெற்பயிர்கள் உள்ளன,” என்றார்.
இதை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பில்லை என தெரிந்துகொண்டதும் உள்ளூர் நெல் விதைகளை ஆராயத் துவங்கினார். அப்போது அவர் ஊதா நிற இலைகள் கொண்ட அரிசி வகை குறித்து தெரிந்துகொண்டார்.
நெற்பயிர் கலையை உருவாக்க பயிர்களை அறுவடை செய்து முட்டி வரை ஆழம் உள்ள சேற்றில் அவற்றை வைக்கும் சவால் நிறைந்த செயல்முறையைத் துவங்கினார்.
“கைகளால் வரையப்பட்ட வடிவமைப்பை கணிணிக்கு மாற்றி நிலத்தின் நீள அகல அளவிற்கேற்றாற்போல் அதை பெரிதாக்கினோம். பேப்பரில் கட்டங்கள் வரைந்த பிறகு நிலத்தில் அதே போல் வடிவமைத்து விதைகளை விதைத்தோம். விதைத்தது முதல் மறுநடவு வரை ஒட்டுமொத்த செயல்முறையும் ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது,” என்றார் ஸ்ரீகாந்த்.
இந்தக் கலை உயர்ந்த தளத்தில் இருந்து பார்க்கும்போது தெரியவேண்டும் என்பதற்காக அவரது நிலங்களில் சற்றே தாழ்வாக அமைந்திருக்கும் ஒரு நிலத்தை மட்டுமே தேர்வு செய்தார்.
"இந்தக் கலை வடிவத்திற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். பருந்துப்பார்வை மூலம் கலையை உருவாக்க வேண்டிய நிலப்பரப்பின் காட்சியை வடிவமைக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு அந்தப் படங்களை அச்சிடப்பட்டு நெற்பயிர் வாயிலாக அது நிலத்தில் செயல்படுத்தப்பட்டது. வடிவமைப்பு மற்றும் நடவு செயல்முறைகளை நிறைவு செய்ய ஒரு வாரம் ஆனது. கலைப்படைப்பை வெளிப்படுத்த ஒரு மாதம் ஆனது,”
என்று ஸ்ரீகாந்த் ‘தி பெட்டர் இண்டியா’ இடம் தெரிவித்தார். இந்தக் கலையால் உந்துதலளிக்கப்பட்ட நபர் இவர் மட்டுமல்ல.
வயநாடு பகுதியின் சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த பிரசீத்குமார் என்கிற விவசாயியும் நெற்பயிர் கலைவண்ணம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகளான அகராஷிமா அவர் இந்தக் கலையை உருவாக்க உந்துதலளித்துள்ளார். இந்தியாவின் உருவப்படத்தை தனது கலைவண்ணத்திற்குக் கொண்டு வர பிரசீத்குமார் அசாமைச் சேர்ந்த கருப்பு நிற அரிசி வகையை பயன்படுத்துகிறார். இதற்காக 10 நிறங்களில் ஆன நெல் விதைகள் பயன்படுத்தப்பட்டன.
விவசாய நாடான இந்தியாவில் அரிசி அதிகளவில் விளையும் பயிராகும். இதனால் சுற்றுலாவிலும் பாரம்பரிய விவசாய முறைகளிலும் ஆர்வத்தை ஏற்படுத்த நெற்பயிர் கலைவண்ணம் உதவும்.
”விவசாய சுற்றுலா மாவட்டத்தில் படிப்படியாக செழித்து வருகிறது. சுற்றுலாத் துறையின் லாபத்தில் ஒரு பங்கினை விவசாயிகள் பெற இந்த கலை வடிவம் உதவும்,” என ’தி ஹிந்து’-விற்கு தெரிவித்தார் பிரசீத்குமார்.
கிராமப்புற கலாச்சாரத்தை பாதுகாக்கவும் உள்ளூர் இளைஞர்கள் விவசாயத் துறையை விரும்பி ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கவும் இந்தக் கலை வடிவத்தின் புகழைப் பயன்படுத்தலாம் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
கட்டுரை : THINK CHANGE INDIA