வட சென்னையில் இயங்கும் ஸ்டார்ட்-அப் 'Zhopout'- தொழில்முனைவரான பழ வியாபாரியின் மகன் முருகன் துரை!
”சென்னையிலுள்ள பல ஷாப்பிங் மால்களுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறேன். ஆனால் பெரும்பாலான சமயங்களில் மால்களில் இருக்கும் கடைகள் குறித்தும், அவர்களது சிறப்பான சலுகைகள், ப்ராண்ட்ஸ் குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதிலும் பல சிரமங்களை உணர்ந்திருக்கிறேன்.”
இவ்வாறு பேசத் தொடங்கிய முருகன் துரை, அதுபற்றி மேலும் விவரிக்கையில், ”பல சலுகைகள் இருந்தபோதும் அது குறித்த தகவல் இல்லாத காரணத்தினால் அவற்றை பயன்படுத்திக்கொள்ளாமலேயே பல பொருட்களை வாங்கியிருக்கிறேன். தகவல்களின் அறியாமையினால் ஏற்படும் இந்த பிரச்சனையை மனதில் கொண்டு அதற்கான தீர்வாகவே நிறுவனம் தொடங்க முடிவெடுத்தேன்,” என்றார் ’Zhopout’ நிறுவனத்தின் நிறுவனர் முருகன் துரை.
சென்னையின் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா முடித்த இவர் ஸ்டார்ட்-அப் தொடங்குவதற்கு முன் TCS-ல் பணிபுரிந்தார். டிப்ளோமா சான்றிதழைக் கொண்டு ஹார்டுவேர் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரியத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பின்னர் 2005-ல் அவரது விருப்பத்திற்கேற்ப சாஃப்வேர் டெவலப்மெண்ட் குழுவிற்கு மாற்றப்பட்டார். தொழில்முனைவில் அடியெடுத்து வைத்த சமயம் 10 வருட சாஃப்ட்வேர் ப்ராடக்ட் டெவலப்மெண்டில் அனுபவத்தைப் பெற்றிருந்தார் முருகன் துரை
தொழில்முனைவு கனவு
முருகனின் அம்மா பழக்கடை நடத்தி வந்தார். அப்போது பள்ளியில் படித்து வந்த முருகனும் தனது அம்மாவிற்கு உதவி செய்திருக்கிறார். அப்போதில் இருந்தே தனக்கு தொழில்முனைவராகும் கனவு இருந்ததாக கூறினார் முருகன். அந்தக் கனவை நோக்கி பயணிக்கும் திட்டத்திற்காக, டிசிஎஸ் சார்பில் அவர் லண்டனில் பணிபுரிந்தபோது பணத்தை சேமிக்கத் தொடங்கியுள்ளார்.
”லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும் பணிபுரிந்துகொண்டே பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். இரண்டு பேர் கொண்ட முழுநேரம் இயங்கும் குழுவை உருவாக்கினேன். அவர்களுக்கு முறையான ஊதியமளித்து வந்தேன். மொபைலில் கிரிக்கெட் கேம், வெப் ப்ராடக்ட் போன்ற என்னுடைய திட்டங்களை இவர்கள் செயல்படுத்தினர். ஒரு வருடம் கழிந்த நிலையில் எங்களது தயாரிப்புகள் கிட்டத்தட்ட தயார் நிலையில் இருந்தபோது நிறுவனத்திலிருந்து வெளியேறினேன்,” என்கிறார்.
Zhopout சேவைகள்
’Zhopout’ வட சென்னையைச் சேர்ந்த ஒரு மொபைல் மற்றும் இணைய தளம். இதன் மூலம் நுகர்வோர்கள், உள்ளூர் கடைகள், ப்ராண்ட் பற்றிய தகவல்கள் மற்றும் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்ளமுடியும். இதனால் சில்லறை விற்பனையாளர்களை அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்கள் பயனடைவார்கள்.
பயனாளிகளின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சலுகைகள் குறித்த விவரங்களை Zhopout வழங்குகிறது. பிரத்யேக மற்றும் பிரத்யேகமல்லாத சலுகைகள் கொண்ட ப்ராண்ட் விவரங்களையும் இத்தளம் அளிக்கிறது. மேலும் ஆய்வுகள் அடிப்படையில் 5வது முறை அல்லது 9வது முறை பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
பிரத்யேக சலுகைகளைத் தாண்டி வாடிக்கையாளர் ஒவ்வொரு முறை வரும்போதும் உடனடியாக ஊக்கமளிக்கும் விதத்தில் சூடான அல்லது குளிர் பானங்கள், கார் புக்கிங், ரீசார்ஜ், ஸ்பா கூப்பன்கள் போன்றவற்றை அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் பணியும் நடந்துவருகிறது.
உணவுத் தளங்களுக்கு Zomato போல சில்லறை விற்பனையாளர்களுக்காக Zhopout செயல்படும். சென்னையிலுள்ள தெருக்கள் முதல் ஷாப்பிங் மால்கள்வரையுள்ள
500-600 உள்ளூர் ப்ராண்ட்களை Zhopout பட்டியலிட்டுள்ளது. ஷாப்சிட்டி (பேடிஎம் வாங்கியுள்ளது) ஃபேஷலாட், க்ளோஸ்பை, ஷாப்ஸ்அப் போன்றவை Zhopout போட்டியாளர்கள்.
IBEF சில்லறை விற்பனைத் துறை ஆய்வின்படி இந்திய சில்லறை சந்தையின் அளவு 2015-ல் 672 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. 2020-ல் 16 சதவீத வளர்ச்சியுடன் 1.3 ட்ரில்லியன் டாலர்களை எட்டவுள்ளது.
நிதி மற்றும் சவால்கள்
நிறுவனர் முருகன் துரை மற்றும் அவரது மனைவியின் சுயமுதலீட்டான 6.5 லட்ச ரூபாய் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இத்தளம், மேலும் விரிவுப்பணிகளுக்காக சிறிய முதலீட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
”நிதி பற்றாக்குறை காரணமாக விளம்பரத்திற்கு செலவிட இயலவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.”
குழு விவரம் மற்றும் வழிகாட்டி
நான்கு பேரைக் கொண்ட Zhopout குழு, API, வலைதளம், மொபைல் செயலி, பின்னணி நடவடிக்கைகள் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களை அடக்கியுள்ளது. மார்கெட்டிங், விற்பனை, பயன்பாட்டு கட்டமைப்பு மற்றும் தினசரி நடவடிக்கைகளில் தலைமை வகிக்கிறார் முருதன் துரை.
நிறுவனரான முருகன், பழ வியாபாரியின் மகனாக வளர்ந்து கடுமையாக உழைத்து பட்டப்படிப்பை முடிக்காத நிலையிலும் டிப்ளோமா சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு நல்ல ஊதியத்துடன் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொழில்முனைவு கனவை நோக்கி பயணித்தார். இரண்டு வருடங்களாக தொழில்முனைவில் ஈடுபட்டு வரும் அவர், Voonik.com நிறுவனத்தின் இண்டர்நேஷனல் ஆப்பரேஷன்ஸ் தலைவர் பாலச்சந்தர் முருகானந்தம் அவர்களை வழிகாட்டியாக கொண்டு செயல்படுகிறார்.
”மிகக்குறைந்த தொகையில் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். சென்னை பி2பி சந்தைக்கு பிரபலமானதாக இல்லாதபோதும் நாங்கள் 2018-ல் வெற்றிகரமான லாபகரமான பி2சி பிரிவில் சாதிக்க விரும்புகிறோம்,” என்றார் முருகன்.
வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதை குறிக்கோளாய் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், வருங்காலத்தில் வெற்றி நிலையை அடைவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.