இந்தியாவின் நீண்ட ரயில்-சாலை பாலம் திறக்க உள்ளார் பிரதமர் மோடி!
கிரிஸ்துமஸ் தினத்தன்று அசாமில் திறந்து வைக்க உள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடி ஆசியாவின் இரண்டாவது நீண்ட ரயில்-சாலை பாலமான போகிபீல் பாலத்தை கிரிஸ்துமஸ் தினத்தன்று திறந்து வைக்க உள்ளார். இந்த பாலம் பிரம்மபுத்ராவின் தெற்குக் கரையில் அசாமின் திப்ரூகர் பகுதியை வடக்கு அசாமின் தேமாஜி பகுதியுடன் இணைக்கிறது.
4,800 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் 2002-ம் ஆண்டு துவங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 16 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,
ரயில்வே துறைக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். அசாமையும் அருணாச்சல பிரதேசத்தையும் இணைக்கும் 4.94 கிலோமீட்டர் தொலைவு வரை அமைந்துள்ள இந்தியாவின் நீண்ட சாலை-ரயில் பாலத்தில் முதல் சரக்கு ரயில் பயணித்தது ஒரு மைல்கல் நிகழ்வாகும். இது வடகிழக்கு பகுதியில் போக்குவரத்து வசதி மேம்பட வழிவகுக்கும்.
போகிபீல் பாலம் வடகிழக்கு மாநிலங்களில் வர்த்தக இணைப்பை மேம்படுத்தும். டிசம்பர் 3-ம் தேதி முதல் சோதனை முயற்சிகள் துவங்கப்பட்டு ரயில்கள் இயங்கி வருகின்றன. லோஹித் நதியின் குறுக்கே அமைந்துள்ள இந்தியாவின் நீண்ட பாலமான தோலா-சதியா பாலம் 2017ம் ஆண்டு மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
ஆசியாவின் இரண்டாவது நீண்ட ரயில்-சாலை பாலம் பற்றிய சில முக்கிய தகவல்கள்:
• ரயில்-சாலை பாலம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட திட்டம் 1985-ம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
• இந்த பாலத்தின் வடிவமைப்பிற்கு ஸ்வீடனையும் ஃபின்லான்டையும் இணைக்கும் 7.8 கி.மீ பாலம் முன்மாதிரியாக இருந்துள்ளது.
• மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழிப்பாதையும் உள்ளது.
• இந்த பாலம் திறக்கப்பட்ட பிறகு அருணாச்சலப்பிரதேசம் மற்றும் திப்ரூகர் இடையே இருக்கும் தொலைவு 400 கி.மீ முதல் 500 கி.மீ வரை குறையும்.
• சீன எல்லையில் இந்த பாலம் அமைந்திருப்பதால், இந்தியா ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்ல உதவும். இது 80 டன் பாரம் தாங்கக்கூடியதாகும். எனவே அர்ஜுன் எம்கே-II போன்ற இந்தியாவின் மிகக் கனமான பீரங்கிகளையும் எடுத்துச்செல்ல முடியும் என ’ஃபர்ஸ்ட்போஸ்ட்’ தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் லாஜிஸ்டிக்ஸை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு திட்டங்களின் கீழ் அமைந்துள்ளது போகிபீல் பாலம். இந்த பாலத்திற்கான செலவாக முதலில் 3,230.02 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டது. ஆனால் பாலத்தின் நீளத்தை ஏற்கெனவெ முன்மொழியப்பட்ட 4.31 கி.மீட்டரில் இருந்து கிட்டத்தட்ட 5 கி.மீ அதிகரித்ததால் இந்தத் தொகையும் அதிகமானது.
இந்த பாலம் மட்டுமல்லாமல் பிரம்மபுத்ராவின் வடக்கு கரையில் டிரான்ஸ்-அருணாச்சல் நெடுஞ்சாலை, புதிய சாலைகள், ரயில் இணைப்புகள் உள்ளிட்ட மற்ற கட்டமைப்பு திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ’இண்டியா டுடே’ தெரிவிக்கிறது.
இந்த திட்டங்கள் திபாங், லோஹித், சுபன்சிரி, காமேங் போன்ற ஆறுகள் மற்றும் நதிகள் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA