சுமார் 830 தொலைக்காட்சி சேனல்கள் தற்போது வந்துள்ள போதிலும், 1930 ஆம் ஆண்டு இந்தியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது முதல் இன்றுவரை, ரேடியோவிற்கு என்று தனி ரசிகர்கள் என்றுமே உண்டு.
அதனால்தான், அகில இந்திய வானொலி நாடு முழுதும் 415 வானொலி நிலையங்களை சிறப்பாக இன்றும் நடத்திவருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ரேடியோ நேயர்களுக்கு ஒரே புகலிடமாக இருந்தது ஆல் இந்தியா ரேடியோவின் மீடியம் அலை வரிசைதான்.
பின்னர், தனியார் எஃப்.எம். அலைவரிசை ரேடியோ நிலையங்கள் நாடு முழுதும் தங்கள் சேவையை தொடங்கியபோது திரைப்பட பாடல் ரசிகர்கள் அதில் மூழ்கினர். ஆனாலும், இந்தியாவின் பாரம்பரிய இசைக்கான ரசிகர்கள் தொடர்ந்து ஆல் இந்தியா ரேடியோவையே நாட வேண்டியிருந்தது. அவர்களின் இந்த இசை தாகத்தை தணிக்க 24 மணி நேரமும் சேவை புரிய வந்திருப்பதுதான் புதிய 'ராகம்' RAAGAM சேனல்.!
'ராகம்' அலைவரிசைச் சேவையை கடந்த ஜனவரி 26-ம் தேதி, அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை நிர்வகிக்கும் பிரச்சார் பாரதியின் தலைவரான டாக்டர்.சூரிய பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
தமிழ் யுவர்ஸ்டோரி அவரிடம் இதுபற்றி பேசியபோது,
"கர்னாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசைக்கு என்று தனியாக ஒரு அலைவரிசை கொண்டுவர வேண்டும் என்பது அரசிடம் மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்தத் திட்டம். அதனை செயல்படுத்துவதற்கான திட்டம், பெங்களூரு அகில இந்திய வானொலி மூலம் உருவாக்கப்பட்டது. அதுதான் தற்போது குடியரசு தினத்தன்று நனவாகி இருக்கிறது. கர்நாடக, இந்துஸ்தானி இசை பிரியர்கள் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் இசையைக் கேட்டு மகிழலாம்".
நவீன தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு ஏற்ப, தூர்தர்ஷன் டி.டி.எச். மூலமாகவும், allindiaradio.gov.in, allindiaradio.org.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாகவும் 'ராகம்' அலைவரிசை நிகழ்ச்சிகளை கேட்கலாம். அதேப் போன்று ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐ.ஓ.எஸ் மூலம் மொபைல் போன்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கும் செயலிகளை (APP) பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம். 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது என்பது இதன் கூடுதல் சிறப்பு" என்றார் சூரிய பிரகாஷ்.
இது உலக அளவில் வசிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் ஒரு பெரிய இசைப் பரிசு. அறிமுகப்படுத்திய இரண்டே நாட்களில், பல நாடுகளிலிருந்தும் அகில இந்திய வானொலியின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருப்பதாக மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ராகம் அலைவரிசையின் அறிமுகம் பற்றி சென்னையைச் சேர்ந்த இளம் இலைக்கலைஞரான எஸ்.அரவிந்த் கூறும்போது,
"அரசின் இந்த முயற்சி எங்களைப்போன்ற இளம் கலைஞர்களுக்கு மேலும் ஊக்கத்தை தருவதாக உள்ளது. முன்பு வேர்ல்ட் ஸ்பேஸ் ரேடியோ மூலம் மட்டுமே, கர்னாடக இசை நிகழ்சிகளை தொடர்ச்சியாக கேட்க முடிந்தது. தற்போது இந்த 'ராகம்' சேனலின் 24 மணி நேர சேவைமூலம் புதிய இளம் ரசிகர்கள் உருவாகும் வாய்ப்பும் இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு இரண்டு முறைதான் எங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு ரேடியோவில் பாட வாய்ப்பு கிடைக்கிறது. இனிமேல் அது அதிகமாக்கப்படலாம். அது போல், ரேடியோவில் எங்கள் குரலை கேட்பதன் மூலம் 'கச்சேரிகளிலும் போய் பார்க்கலாமே' என்று ரசிகர்கள் அங்கும் எங்களைத் தேடி வருவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"கர்னாடக இசை ஞானிகளான அரியக்குடி ராமானுஜம், செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் போன்றோரின் அரிய வகை இசை தொகுப்புக்கள் இன்று அகில இந்திய ரேடியோவிடம் மட்டுமே அதிகமாக உள்ளது. அது போன்ற ஆயிரக்கணக்கிலான இசை பெட்டகங்கள் அகில இந்திய வானொலியிடம் மட்டுமே பொக்கிஷங்களாக உள்ளன. அவை எல்லாம் இந்த ராகம் அலைவரிசை மூலம் ஒலிபரப்பப்பட்டால் இசை பிரியர்களும், இசை பயிலும் மாணவர்களுக்கும் பெரிதாக பயன்படும்.." என்று தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார் அரவிந்த்.
முன்னணி கர்நாடக இசை கலைஞரான நித்யஸ்ரீ மகாதேவனிடம் ராகம் சேனல் குறித்து பேசியபோது,
இது வானொலியின் மிக அற்புதமான முயற்சி. அகில இந்திய வானொலியில் பாட விருப்பப்படும் கர்நாடக, இந்துஸ்தானி கலைஞர்களே அதிகம். ஆகவே, 1930 கால கட்டம் முதலான பல பழமையான 'விண்டேஜ் கலெக்ஷன்'கள் அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவை எல்லாவற்றையும் திரும்ப ஒலிபரப்புவதற்கு ஒரு கூடுதல் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும். மொத்தத்தில் இசை கலைஞர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் இந்த ராகம் அலைவரிசை ஒரு வரப் பிரசாதம்தான்..!" என்றார்.
நம் நாட்டு பாரம்பரிய இசை வடிவங்களான, கர்நாடிக் மற்றும் ஹிந்துஸ்தானி இசைக்கென பிரத்யேகமாக வந்துள்ள 'ராகம்' அலைவரிசை, இன்றைய இளம் சந்ததியினருக்கு அதன் சிறப்பைக் கொண்டு செல்லும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.