நடராஜன் தங்கராசு: சின்னப்பம்பட்டியில் புறப்பட்டு ஐபிஎல் அடைந்த வேகப்பந்து புயல்!
நம்மள கடந்து போற ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விதத்துல யாருக்காவது ஒருத்தருக்கு மறக்க முடியாத நாளா மாறிட்டு போகும். அப்படி அந்த நாள் கொடுக்குற மாற்றம் அதற்குரியவங்களுக்கு மட்டுமில்லாம அவங்கள சுத்தி இருக்கிற நமக்கும் சிறப்பான நாளாக மாறிப்போகும். நம்ம கூட இருக்குற யாராவது ஒருத்தர் நமக்கு இதை அடிக்கடி நிரூபிச்சிட்டு தான் இருக்காங்க.
இந்த யாராவது ஒருத்தர்னு நாம சொல்ற லிஸ்ட்ல புதுசா அவங்க பெயர அழுத்தி எழுதினது சேலம் பக்கத்தில சின்னப்பம்பட்டி ஊரை சேர்ந்த நடராஜன் தங்கராசு (பிறப்பு 27 May 1991). இந்தியன் பிரிமியர் லீக்-ன் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக விளையாட இவர் மூன்று கோடி ரூபாய்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது தான் இந்த சிறப்புக்கு காரணம்.
எனக்கு ரொம்ப நாளா இருந்த ஒரு ஆசை நம்ம ஊர்ல நாம பேசி பழகின ஒரு பெயர கிரிக்கெட் ஸ்கோர் போர்டுல உலக மக்களோட சேர்ந்து உள்ளூர் மக்கள் நாம பாக்கனும்ங்குறது, அஷ்வின் ரவிச்சந்திரன், முருகன் அஷ்வின் பேர ஸ்கோர் போர்ட்ல பாக்கும்போது அவங்க பேருக்காகவே அவ்ளோ சந்தோசமா இருக்கும். சட்டைக்கு பின்னாடி அவங்க பெயர போட்டுகிறதுல இருக்குற மகிழ்ச்சில ஒரு பங்கு அவங்க பெயர ஸ்கோர் போர்ட்ல பாக்குற நமக்கும் இருக்கு.
இந்தியாவில டென்னிஸ் பந்துல விளையாடி உருவான டென்னிஸ் வீரர்களை விட டென்னிஸ் பந்துல விளையாட ஆரம்பிச்சு அதில இருந்து உருவான கிரிக்கெட் வீரர்களே அதிகம்.
வைரமுத்து ஒருமுறை அவரோட கவிதைல சொன்னது “இந்தியா காதல் தேசம் தான் , காதலர்கள் தேசமல்ல. வெளிநாடுகளில் திருமண தோல்விகள் அதிகம் , இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்” இப்படி வைர வரிகளில் சொல்லிருப்பாரு.
இந்திய இளைஞர்களுக்கு காதல் தோல்வி கிரிக்கெட் மீதிருந்த முதல் காதலில் இருந்து தொடங்குவதாக நகைச்சுவையாக சொல்வதுண்டு.
இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் வீரரா இருக்கிறது வீரர்களுக்கு வரமா இல்லை சாபமானு தெரியல, இது மாதிரி தான் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு வாய்ப்புகளும் அதிகம் அதே நேரத்தில் அந்த வாய்ப்புகளுக்கான போட்டிகளும் மிக அதிகம்.
முழுமையான வாய்ப்புகளை பெற நடராஜன் தங்கராசு இன்னும் நிறைய பயணிக்க வேண்டி இருந்தாலும், இன்றைய நாளில் அவரோட பயணம் சரியான துவக்கத்தில இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு அவருக்கு முன்னாடி தெரியுற மூன்று கோடியை விட நாளைக்கு அவருக்கு கேட்கப் போற பல கோடி ஜோடி கைதட்டல் தான் அவரை உந்தித் தள்ளப்போகுது.
மொபைல்ல விளையாடுற கிரிக்கெட்ல கூட நாம பேட்ஸ்மேனா தான் விளையாடிட்டு இருக்கோம் இப்படி இருக்கிற இடத்துல ஒரு பந்து வீச்சாளரா அதுவும் வேகப்பந்து வீச்சாளர் ஒருத்தர் தன்னை முன்னிருத்த நினைக்கிறதுக்கே ஒரு துணிச்சல் வேணும்.
இன்டர்நேஷனல் லெவெல்ல விளையாடுற வீரர்களுக்கே அவங்களோட பந்து வீச்சு முறையை தடை பண்ணினா அதில இருந்து மீண்டு வர்றதுக்கு பல வருடங்கள் ஆயிடும் ஆனா முதல் தர போட்டிகளில் அறிமுகமான ஆரம்பத்துலையே இவர் மேல தடை விதிக்கப்பட்டு அந்த தடையை தகர்த்துட்டு வந்தவர் தான் நடராஜன் தங்கராசு. குறிப்பா தமிழ்நாடு பிரிமியர் லீக்-ல் (TNPL) அவர் விளையாடின திண்டுக்கல் அணியின் தலைவர் அஷ்வின் ரவிச்சந்திரன் ட்விட்டர்ல வரவேற்ற விதமும் மிகச்சிறப்பு.
இந்த நாள் நடராஜனுக்கு மட்டுமல்ல முஹம்மது சிராஜ் ங்குற மற்றொரு கிரிக்கெட் வீரருக்கும் மறக்கமுடியாத நாளா மாறி இருக்கு.
விளையாட்டுக்கு நாம கொடுக்குற முக்கியத்துவம் அன்றாட அரசியலுக்கு கொடுத்திருந்த அரசியல்லயும், கடந்த கால தலைவர்களின் சாதனைகளும் விளையாட்டாக முறியடிக்கப்பட்டிருக்கும்.
வாழ்த்துக்கள் நடராஜன் தங்கராசு!
(ரகுபதி எழுதிய வலைப்பதிவில் இருந்து வெளியிடப்பட்ட கட்டுரை இது.)