முதியோர்களுக்கு இலவச உணவு, பராமரிக்கும் இல்லத்தையும் கட்ட திட்டமிட்ட மருத்துவர்!
பலருக்கு மும்பைதான் உண்மையான கனவு நகரம். ஆனால் பயந்தர் பகுதியில் வசிக்கும் உதய் மோடி ஒரு காலைப் பொழுதில் பயங்கரமான கனவுடன் கண் விழித்தார். 70 வயது மதிக்கத்தக்க ஒரு அந்நியர் அவரது வீட்டுக் கதவைத் தட்டுகிறார். நோய்வாய்ப்பட்ட தனது மனைவியைப் பராமரிக்க பணம் வேண்டும் என அந்த முதியவர் கேட்கிறார். இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட உதய் அன்றைய தினமே முதியோர் இல்லம் ஒன்றை துவங்கவேண்டும் என முடிவெடுத்தார்.
குழந்தைகளால் கைவிடப்பட்டவர்களுக்காக இன்று டாக்டர் உதய் மோடி தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இவர் தினமும் 200 முதியவர்களுக்கு உணவளிக்க தனது சொந்த பணத்தை செலவிடுகிறார். உணவு சமைக்கவும் அவற்றை பேக் செய்யவும் உள்ளூர் சமையல்காரர்களுடன் இணைந்து செயல்படுகிறார்.
அவர்களுக்காக ’திக்ரா நூ கர்’ என்கிற இல்லத்தை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த மருத்துவர் குறிப்பிடுகையில்,
”எங்களிடம் இரண்டு டெம்போக்களும் நான்கு டீலர் வேன்களும் உள்ளது. இது சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவை எடுத்துச் செல்ல உதவுகிறது. சீரியல்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடிக்கும் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து கிடைக்கும் உதவியுடன் என்னுடைய கூடுதல் வருமானமும் இருப்பதால் போதுமானதாக உள்ளது. எனினும் தினமும் மேலும் அதிகம் பேருக்கு உதவுவதற்கான வழிமுறைகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறேன்,” என்றார்.
பருப்பு, சாதம், ஆறு சப்பாத்தி, காய் ஆகியவை வழக்கமாக கொடுக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தினமாகும். எனவே உணவிற்குப் பின் சாப்பிடும் பண்டம் அன்று வீட்டிலேயே தயாரிக்கப்படும். அத்துடன் ஃபார்சன் என்கிற தின்பண்டமும் உணவின் பகுதியாக வழங்கப்படும் என Milaap பதிவு குறிப்பிடுகிறது.
உதயின் இந்த நோக்கத்தில் அவரது மனைவியும் அவரது பதின்ம வயது குழந்தைகளும் பங்களித்து ஆதரவளிக்கின்றனர். தொடர்ந்து உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய ஒவ்வொரு மாதமும் சுமார் 3 லட்ச ரூபாய் வரை செலவிடுகிறார். இந்த நோக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கூட்டுநிதி தளம் ஒன்றையும் துவங்கியுள்ளார். ஆனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற தீராத ஊக்கம்தான் அவரை தொடர்ந்து செயல்பட வைக்கிறது. அவர் கூறுகையில்,
”இந்த சேவைக்காக என் குழந்தைகள் தங்களது சேமிப்பில் இருந்து சிறு தொகையை வழங்கும்போது மனம் நிறைவடைகிறது. பலர் உதவ முன் வந்து ஆதரவளிக்கின்றனர். இந்த முயற்சி தொடரும் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்த முதியவர்கள் அவர்களது சொந்த மகனின் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அவர்களது உணவுத் தேவை மட்டுமல்லாது அனைத்து விதமான பராமரிப்பும் கிடைக்கக்கூடிய ’திக்ரா நூ கர்’ கட்ட விரும்புகிறேன்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA