ஸ்டார்ட்அப்’களை நாடும் பாதுகாப்புத் துறை அமைச்சகம்: கோவை ஃபோர்ஜ் உட்பட 5 இன்குபேட்டர் மையங்கள் தேர்வு!
பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு பொருந்தும் தொழில்நுட்பத் தேவைகளுக்கான சாத்தியமான தீர்வுகளை கண்டறிய 11 சவால்களை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. மூன்று ஆயுதப்படைகளின் முக்கிய தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் சார்ந்த தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கும், சிக்கல்களை தடுப்பதற்குமான இந்த முயற்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிமுகப் படுத்தினார்.
இந்த சவால்கள் வளர்ந்து வரும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி பெறவும் தங்களை வளர்த்துக்கொள்ளவும் ஒரு பெரும் வாய்ப்பாக அமையும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அளித்துள்ள இந்த 11 சவால்கள்;
தொலை ஏவுகணை வாகனங்கள், லேசர் ஆயுதங்கள், பாதுகாப்பான தகவல்தொடர்பு அமைப்புகள் மற்றும் அலைவரிசை, துல்லியமான இலக்கு அமைப்புகள், சென்சார்கள், மற்றும் போர் வீரர்களுக்கான தகவல் தொடர்பு இயக்கம் ஆகும்.
கொடுக்கப்பட்ட சவால்களின் தீர்வின் முன்மாதிரியை அமைக்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.1.50 கோடி ரூபாய் நிதி உதவி தரவிருக்கிறது. மேலும் SPARK-ன் கீழ் அமையும் நட்பு கொள்முதல் நடைமுறைகள் அல்லது பாதுகாப்பு முன்மாதிரி மற்றும் ஆராய்ச்சியின் ஆதரவு கிடைக்கும்.
இதனையொட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை குறிப்பிட்டு பேசிய அமைச்சர்,
“இந்த முறை யோசனைக்காக உங்களிடம் வந்துள்ளோம். பாதுகாப்புத் துறைக்கு தேவையான அனைத்து முன்னேற்றங்களும் இந்தியாவில் இருந்துதான் கிடைக்க வேண்டும். எங்கள் குடிமக்களை பாதுகாக்க உங்கள் புத்திசாலித்தனத்தை எதிர்நோக்குகிறோம்,” என்றார்.
இந்த பாதுகாப்புத்துறை ஸ்டார்ட்-அப் சவால்கள் ஏப்ரல் அன்று பிரதமர் நரந்திர மோடி வெளியிட்ட iDEX (Innovation for Defence Excellence) திட்டத்தின் கீழ் அமையும். இந்த சவால்களை ஏற்று கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு வழிகாட்டவும், உதவவும் iDEX, 5 அடைக்காக்கும் (Incubation centers) நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது,
அவை புதுமை புகுத்துதல் மற்றும் தொழில்முனைவோர் மையம், ஐஐஎம் அகமதாபாத்; புதுமை மற்றும் தொழில்முனைவோர் சங்கம், ஐஐடி பம்பாய்; டி-ஹப், ஹைதராபாத்; கோயம்புத்தூரைs சேர்ந்த FORGE மற்றும் ஐஐடி மெட்ராஸ்.
தமிழகத்தைச் சேர்ந்த FORGE நிறுவனம் புதுமை இயங்கும் நிறுவனங்களை உருவாக்கவும் மற்றும் ஊக்குவிக்கவும் கோவையில் நிறுவப்பட்டது. வன்பொருள், மென்பொருள் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றின் நிகழ்நிலை சிக்கல்களை தீர்க்க, பொருளாதார ஆதாயங்களை உருவாக்கி சமூக தாக்கத்தை வழங்கவும் இம்மையம் முயற்சித்து வருகிறது.
iDEX உடன் பங்குதாரராக இணைந்ததை குறித்து பேசிய FORGE துணை நிறுவனர் விஷ் சஹசரனாமம்,
“பாதுகாப்புத் துறை ஆயுதப்படைகளை மட்டுமின்றி விண்வெளி, வாகனங்கள், சுகாதாரம், தொலை தொடர்பு, டிஜிட்டல் ஊடகங்கள்-இணையம், உற்பத்தி மற்றும் தளவாடங்கள் என சகலத்தையும் உறுதி செய்வதோடு அதில் ஓர் புரட்சியையும் ஏற்படுத்தும்,” என்றார்.
மேலும் பேசிய அவர் உலகளவில் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்துதான் பெரும்பாலம் பெறப்படுகிறது என தெரிவித்தார்.
“பாதுகாப்புத் துறையின் இந்த முயற்சி, இந்திய ஸ்டார்ட்-அப் துறைக்கும், இந்திய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஒரு மையில்கல்லாக அமையும். மேலும் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் சிவிலியன் துறைகளில் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்,” என்றார்.
அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்பை வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டு தங்களின் திறமையும், ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஃபோர்ஜ் அதற்கு உறுதுணை புரியும் என்றும் தெரிவித்தார்.