கேரள நிவாரண நிதிக்கு தங்கள் நிலத்தின் பங்கை நன்கொடை வழங்கிய உடன்பிறப்புகள்!
கேரளாவில் ஏற்பட்ட மோசமான இயற்கை பேரழிவைத் தொடர்ந்து அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவும் நம்பிக்கையும் குறித்த கதைகள் நாட்டையே ஆச்சரியப்படுத்தி வருகிறது.
அப்படிப்பட்ட ஒரு கதைதான் விஎஸ் ஸ்வஹா மற்றும் விஎஸ் பிரம்மாவினுடையது. இந்த இளம் உடன்பிறப்புகள் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு (CMDRF) 50 லட்ச ரூபாய் மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஸ்வஹாவும் பிரம்மாவும் கன்னூர் மாவட்டத்தில் உள்ள பயனூர் பகுதியில் உள்ள ஷெனாய் மெமோரியல் அரசு உயர்நிலைப்பள்ளியில் முறையே ஒன்பதாம் வகுப்பும் பதினோறாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களின் அப்பா ஸ்வர்கன் ஷங்கர் இவர்களுக்கு இந்த நிலத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
விவசாயியான ஸ்வர்கம் 1996-ம் ஆண்டு இந்த நிலத்தை ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் என்கிற விலை கொடுத்து வாங்கியுள்ளார். குழந்தைகள் வளர்ந்ததும் இந்த நிலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டுவார்கள் என நினைத்துள்ளார். இதை மூன்று ஏக்கர்களாக பிரித்து ஒரு ஏக்கரை மனைவிக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளார். ஸ்வஹா தனது பங்கு நிலத்தை கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்க தீர்மானிதார். அவரது சகோதரரும் இந்த முடிவிற்கு ஆதரவளித்ததாக ’தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது.
ஸ்வஹா இந்த தீர்மானம் குறித்து இவர்களது பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதுகையில்,
”மாநிலத்தின் இன்றைய நிலையைப் பார்த்து இந்த பள்ளி மாணவர்களான நானும் என் சகோதரரும் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு சிறு நன்கொடையை வழங்க தீர்மானித்துள்ளோம். எங்களது வருங்காலத்திற்காக விவசாயியான எங்கள் அப்பா ஒதுக்கியிருந்த நிலத்தில் ஒரு ஏக்கர் (100 செண்ட்) நிலத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளோம். எங்கள் அப்பாவிடம் இதற்கான ஒப்புதலும் பெற்றுவிட்டோம். இதை எவ்வாறு செயல்படுத்தலாம்?” என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வஹா மற்றும் பிரம்மாவின் அப்பா ஸ்வர்கம் தனது குழந்தைகளின் பெருந்தன்மை குறித்து பிரமித்துப்போனார். ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’-க்கு அவர் தெரிவிக்கையில்,
”நான் அவர்களை வளர்த்த விதத்தை இந்த செயல் காட்டுகிறது. தங்களைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீது இரக்கம் காட்டும் குணம் அவர்களிடம் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். இதுதான் ஒருவரை உன்மையான மனிதனாக மாற்றுகிறது,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA