மொய் விருந்து நடத்தி கோடிகளை அள்ளும் மக்கள்: தஞ்சை, புதுக்கோட்டையில் 'ஆடி அட்டகாசம்'
எது எப்படியோ, இவ்விழாவின் மூலம் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி கொண்டாடி மகிழ்வதால் தங்களுக்குள் இருக்கும் பிணக்குகளை மறந்து, அனைவரும் ஓற்றுமையாக வாழ வழிவகுக்கும் ஓர் சிறப்பான விழாவாக இந்த மொய் விருந்து நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள குடும்பத்தினர் தங்களின் வீட்டு விஷேசத்தை நடத்துவதற்காகவோ, தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளவோ தொடங்கப்பட்டதுதான் இந்த மொய் விருந்து விழா.
தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மொய் விருந்து விழா, தற்போது புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளான கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு, ஆலங்குடி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மொய் விருந்து கணக்கு வைத்துள்ளனர்.ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஓர் முறை இந்த மொய் விருந்து நடத்தலாமாம். பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த மொய் விருந்து விழா தற்போது இப்பகுதி மக்களின் வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது என்றால் மிகையல்ல.
ஆண்டுதோறும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நடைபெறும் இந்த மொய் விருந்து விழா தற்போது தொடங்கியுள்ளது. ஏதோ கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம் போல ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள், துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள், தனியார் வங்கி சார்பில் மொய் பணத்தை பெற சிறப்பு கவுன்டர் என அட்டகாசமாய் நடைபெறுகிறது இவ்விழா.
மொய் விருந்தின் மூலம் கடந்தாண்டு மட்டும் இப்பகுதிகளில் ரூ.500 கோடிவரை வசூலான நிலையில், நிகழாண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் மொய் விருந்து வசூல் தொகை குறையவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தொழில் தொடங்குவது, கடன்களை அடைப்பது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துவது என வாழக்கைக்கு பயன்படும் விதத்தில் பயன்படுத்தவேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கியக் குறிக்கோள். இதனை முறையற்ற வகையில் பயன்படுத்தினால் தெய்வகுற்றமாகி குடும்பத்துக்கு பாதிப்பேற்படும் என்பதும் இவர்களின் நம்பிக்கையாகும்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற மொய் விருந்தில் ரூ.4 கோடி வரை வசூலானது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சமீபத்தில் மொய் விருந்து விழா நடத்தினார். இதற்காக சுமார் 50 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டன. 1000 கிலோ ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டு விருந்து தயாரிக்கப்பட்டது. இந்த விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதற்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 14 இடங்களில் மொய் வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், அருகேயுள்ள கல்லாலங்குடி தனியார் வங்கிக் கிளை சார்பில் பணம் எண்ணும் இயந்திரங்களைக் கொண்டு வந்திருந்த வங்கி ஊழியர்கள் மொய் தொகைகளை சரிபார்த்து பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த மொய் விருந்தில் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.4 கோடி வரை வசூலானது. இதற்கு முன் கடந்தாண்டு நடைபெற்ற மொய் விருந்தில் சுமார் ரூ.5 கோடிவரை வசூலாகி இருந்த நிலையில், கஜா புயல் பாதிப்பு காரணமாக நிகழாண்டு மொய் வசூல் ரூ. 4 கோடியாக குறைந்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நிகழாண்டு நடைபெற்ற மொய் விருந்தில் தனி நபர் பெற்ற உச்சபட்ச மொய் தொகை இதுவே என தெரிகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூரத்தி தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
“எனக்கு ரூ. 4 கோடி மொய் வசூல் வந்துள்ளது பெரிய விசயமல்ல. நானும் அந்தளவுக்கு அனைவருக்கும் மொய் செய்துள்ளேன். ஓருசிலர் புதுநடையாக மொய் செய்யாததால்தான் மொய் வசூல் 4 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. நான் எப்படியும் ரூ.5 கோடிக்கு மேல் மொய் வசூல் வரும் என எதிர்பார்த்தேன்,” என்றார்.
எது எப்படியோ, இவ்விழாவின் மூலம் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி கொண்டாடி மகிழ்வதால் தங்களுக்குள் இருக்கும் பிணக்குகள் மறைந்து, அனைவரும் ஓற்றுமையாக வாழ வழிவகுக்கும் ஓர் சிறப்பான விழாவாக இந்த மொய் விருந்து நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது.