சமூக வலைதளங்கள் மூலம் மாதம் 4 லட்ச ரூபாய் ஈட்டும் அபிலாஷா ஜெயின்!
‘மார்வாடி கானா’ என்கிற பெயரில் வாட்ஸ்-அப் மூலம் ஆர்டர்கள் எடுத்து பாரம்பரிய உணவு வகைகளை வழங்குகிறார் இவர்.
தொழில்நுட்பம் பலரை, குறிப்பாகப் பெண்களை தொழில்முனைவர்களாக மாற்றியுள்ளது. பலர் தங்களது கனவுகளை நனவாக்கிக்கொண்டு வருவாய் ஈட்ட உதவியுள்ளது. வணிகத்தில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் தங்களது தயாரிப்பு அல்லது சேவையை சமூக வலைதளங்கள் அல்லது வாட்ஸ் அப் மூலம் எளிதாக விற்பனை செய்யமுடிகிறது. இந்த சமூக வலைதளங்கள் வணிக ரீதியாக மக்களைச் சென்றடைய உதவும் மிகச்சிறந்த கருவியாக உருவெடுத்துள்ளது.
அபிலாஷா ஜெயின் ஆரம்பத்தில் ஒரு இல்லத்தரசியாக, ஒரு அம்மாவாக தன் கடமைகளை நிறைவேற்றி வந்தார். அருமையாகச் சமைப்பார். இவருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகம். தன் குடும்பத்திற்காக அனுபவித்து சமைப்பார். பொதுவாக உணவகங்களில் கிடைக்கும் உணவு வகைகள் போலல்லாமல் பாரம்பரியமான மார்வாரி ரெசிபிக்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.
முகநூல் பதிவு
2014ம் ஆண்டு அபிலாஷா முகநூல் பக்கத்தில் குருகிராம் பகுதியில் உள்ள அம்மாக்களுக்காக அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பாரம்பரிய ராஜஸ்தானி உணவான தால் பாட்டி மற்றும் சூர்மா தயாரிக்க இருப்பதாகவும் தேவையிருப்போர் ஆர்டர் செய்யலாம் என்றும் விளையாட்டாக ஒரு பதிவிட்டார். அந்த ஒற்றைப் பதிவிற்கு 40 ஆர்டர்கள் கிடைத்ததைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
அதுவரை இல்லத்தரசியாக இருந்தவருக்கு இந்த முயற்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஒரே ஒரு முகநூல் பதிவுடனும் குடும்பத்தின் முழுமையான ஆதரவுடனும் ‘மார்வாடி கானா’ உருவானது.
“பாரம்பரிய ராஜஸ்தானி குடும்பம் என்பதால் எனக்கு எப்போதும் உணவில் ஆர்வம் இருந்து வந்தது. பள்ளிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் அஜ்மீரில் முடித்தபோதும் விடுமுறை நாட்களில் பில்வாராவில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வேன். சமையல் வேலைகளில் ஈடுபடுவேன். என் பாட்டியின் ரெசிபிக்களை மிகுந்த சிரத்தையும் பின்பற்றுவேன். குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்த பாராட்டுகள் எனக்கு ஊக்கமளித்தது,” என்று நினைவுகூர்ந்தார்.
அபிலாஷா திருமணத்திற்குப் பிறகு ஓராண்டு ஸ்காட்லாந்தில் இருந்தார். அந்த சமயத்தில் தனது சமையல் திறனை மேலும் மெருகேற்றிக்கொண்டுள்ளார்.
“நாங்கள் குளிர்ந்த வெப்பநிலையில் வசித்து வந்தோம். என்னுடைய குடும்பத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்தேன். பாரம்பரிய ராஜஸ்தானி உணவு வகைகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்,” என்றார்.
வாட்ஸ் அப்பின் உதவியுடன் அபிலாஷாவின் முயற்சி எளிதாக மக்களைச் சென்றடையத் தொடங்கியது. மக்கள் ஒருவர் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யத் தொடங்கி மெல்ல அதிகம் பேரிடம் பரவியது. ஒரு பிராட்கேஸ்ட் பட்டியலில் 250 நபர்கள் மட்டுமே இருக்கமுடியும் என்பதால் தற்போது ஐந்திற்கும் கூடுதலான பட்டியல் வைத்துள்ளார்.
“நான் தினமும் பிராட்காஸ்ட் செய்வதில்லை. வாரம் ஒருமுறையோ அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையோ பிராட்காஸ்ட் செய்வேன். இருப்பினும் என்னுடைய 90 சதவீத ஆர்டர்கள் வாட்ஸ் அப் மூலமாகவே வருகிறது. என்னுடைய வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கவும் என்னுடைய கிச்சனில் இருக்கும் ஸ்பெஷல் உணவு வகைகள் குறித்து தெரிவிக்கவும் மொத்த ஆர்டர்கள் எடுக்கவும் வாட்ஸ் அப் எனக்கு உதவியது,” என்றார்.
2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை அபிலாஷா தனது சமையலறையிலேயே உணவு தயாரித்தார். உணவு டெலிவர் செய்யவும் மற்ற வேலைகளுக்கும் ஒரு சிலரே உதவிக்கு இருந்தனர். வீட்டில் இவ்வாறு உணவு தயாரிப்பதால் வீடு முழுக்க உணவின் வாசம் நிறைந்திருந்தது. இது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு தொந்தரவாக இருப்பதை அபிலாஷா உணர்ந்தார். விரைவில் அருகில் ஒரு சிறு இடத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தார்.
அபிலாஷா கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் முதலீடு செய்து 1,000 சதுர அடி இடத்தில் சமையலறை அமைத்தார். மொத்த ஆர்டர்கள் ஏற்று சேவையளிக்கிறார். அதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் 40-50 ஆர்டர்கள் வரை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு 4-5 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.
தால் பாட்டி மற்றும் சூர்மா, லாப்சி, மக்கி கா டோக்ளா, பஜ்ரே கி கிச்சடி, கோந்து லட்டு, பிரசவத்திற்கு பிறகு கொடுக்கப்படும் லட்டு போன்ற பாரம்பரிய மார்வாரி உணவு வகைகள் அபிலாஷாவின் மெனுவில் இடம்பெற்றுள்ளன.
உயர்தரமான பொருட்களைக் கொண்டு ராஜஸ்தானி உணவு வகைகளை வழங்குவதே என்னுடைய நோக்கம். நான் தயாரிக்கும் லட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் அவற்றை டெலிவர் செய்கிறேன்,” என்றார்.
முகநூல் பதிவில் இருந்து தொடங்கப்பட்டு உடனடியாக நல்ல வரவேற்பு கிடைத்திருப்பினும் இவரது பயணத்தில் பல்வேறு சவால்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது.
“உணவை டெலிவர் செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. ஊழியர்கள், குறிப்பாக தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்வது மற்றொரு சவாலாக இருந்தது. தொழிலாளர்களில் சிலர் தினக்கூலிகளாக நியமிக்கப்பட்டதால் ஒரு நாள் அவர்கள் விடுப்பு எடுக்க நேர்ந்தாலும் அதனால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது,” என்கிறார் அபிலாஷா.
வணிக வளர்ச்சி குறித்து அபிலாஷா திட்டமிட்டிருப்பினும் படிப்படியாகவே அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ச்சியடைய விரும்புகிறார். வீட்டிற்கு வெளியே இடம் எடுத்து செயல்படத் தொடங்கியது முதல் செலவுகளை நிர்வகிப்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கிறார்.
“நிறுவனத்தை நடத்துவதற்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. வாடகை செலுத்தவேண்டும். நான் தயாரிக்கும் உணவு ஒரு குறிப்பிட்ட பிரிவை இலக்காகக் கொண்டுள்ளது. உணவின் தரத்தில் நான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். குறிப்பாக இந்த உணவு வகைகள் தயாரிப்பிற்கான முக்கிய மூலப்பொருள் நெய். எனவே தரமான நெய் மட்டுமே பயன்படுத்துகிறேன்,” என்றார்.
அபிலாஷா அதிக உணவுத் திருவிழாக்களில் பங்கேற்க விரும்புகிறார். சிறந்த தரத்துடன்கூடிய உணவு வகைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க விரும்புகிறார்.
“உணவின் மீது எனக்கிருக்கும் ஆர்வம் காரணமாகவே ‘மார்வாடி கானா’ உருவானது. எனவே வணிக ரீதியாக செயல்படுவதில் அதிகக் கவனம் செலுத்த நான் விரும்பவில்லை,” என்றார் அபிலாஷா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா