மிஸ்டு காலில் மலர்ந்த உன்னதக் காதல்: வாழ்வில் ஒன்றிணைந்த ஆசிர்வதிக்கப்பட்ட ஜோடி!
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லலிதாவின் இனிமையான குரல் மிஸ்டு காலில் அறிமுகமாக அந்தக் குரலால் கவரப்பட்டு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார் சிசிடிவி ஆப்ரேட்டரான ரவி.
மிஸ்டுகால்களால் உருவாகும் திருமணத்தை மீறிய உறவு மற்றும் தவறான நட்பால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிய நேரிடுகிறது. உறுதியில்லாத காதல்கள் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறது. ஆனால் எப்படி சந்தித்தாலும் சரியான புரிதலும் தெளிவான மனநிலை இருந்தால் திருமண வாழ்வு நன்றாக அமையும் என மும்பையைச் சேர்ந்த லலிதா பன்சி, ரவி சங்கர் தம்பதியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.
குடும்பப் பிரச்னையில் பழிவாங்கும் நோக்கத்தோடு உறவினர் ஒருவரே கடந்த 2012ம் ஆண்டில் லலிதா மீது ஆசிட் வீசித் தாக்கியுள்ளார். இதனால் மோசமான நிலையில் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லலிதாவிற்கு 17 அறுவை சிகிச்சைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து 12 பிளாஸ்டிக் சர்ஜரிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆசிட் வீச்சினால் மனித வாழ்வில் நிலையில்லாத அழகை வேண்டுமானால் லலிதா இழந்திருக்கலாம் ஆனால் அவரின் தன்னம்பிக்கையில் எந்தக் குறைவும் இல்லை. மருத்துவமைனையில் சிகிச்சை பெற்ற பின்னர் லலிதா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மைய அறக்கட்டளையான ’சாஹஸ்’ அறக்கட்டளையில் பணியாற்றி வருகிறார்.
ஒரு நாள் இரவில் லலிதா எதிர்பாராத விதமாக செய்த தொலைபேசி அழைப்பு அவரது எதிர்காலத்தை மாற்றியுள்ளது. நடு இரவில் லலிதா தவறுதலாக வேறு எண்ணை தொடர்பு கொள்ள மறு நொடியை சுதாரித்து அந்த அழைப்பை துண்டித்துள்ளார். 15 நாட்கள் கழித்து அதே எண்ணில் இருந்து லலிதாவிற்கு அழைப்பு வந்திருக்கிறது. எதிர்முனையில் இருந்தவர் தான் ரவி சங்கர்சிங், சிசிடிவி ஆப்ரேட்டர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்போது தவறுதலாக தான் அந்த எண்ணிற்கு அழைத்து விட்டதாக லலிதா விளக்கம் அளித்துள்ளார்.
லலிதாவின் எண்ணை முதலில் நான் கவனிக்கவில்லை, 15 நாட்கள் கழித்து அவரைத் தொடர்பு கொண்டேன். மிஸ்டு காலாக இருந்தாலும் லலிதா என் வாழ்வில் மிஸ் ஆகாமல் இருப்பதற்காக வந்த கால் என்றே அதை நினைக்கிறேன். இருவரும் நண்பர்களானோம், தினசரி பேசத் தொடங்கினோம், அவரது குரலால் கவரப்பட்டேன் என்று மெல்ல மெல்ல லலிதாவின் காதலனாக மாறிய கதையை விவரிக்கிறார் ரவி.
நாங்கள் பேசத் தொடங்கிய போதே லலிதா தான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் என்பதை என்னிடம் கூறி விட்டார். அது எனக்கு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை. ஒரு நாள் நான் என்னுடைய காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன். அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதையும் கூறினேன்.
பலர் தங்களது மனைவியின் முகத்தைப் பார்த்து காதலில் விழுந்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் லலிதாவைப் பொறுத்தவரை அவரின் முகத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, அவர் ஓர் இனிமையான பெண் என்பதால் அவருடன் தான் என்னுடைய வாழ்க்கைப் பயணம் என்பதை முடிவு செய்தேன் என்கிறார் ரவி சங்கர் சிங்.
மும்பையின் தாதரில் இந்த ஆசிர்வதிக்கப்பட்ட தம்பதியின் திருமணம் 2017ல் நடந்தது. பொருளாதார ரீதியில் இருவரும் நலிவுற்று இருந்ததால் சாஹஸ் அறக்கட்டளை இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. மேலும் சிலர் தாங்களாகவே முன் வந்து திருமணத்திற்கு செலவுகளை செய்துள்ளனர்.
நிறுவனம் ஒன்று திருமணத்திற்கு தேவையான உணவு, அலங்காரம், மண்டபம், தேனிலவுக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. உடையலங்கார நிபுணர்கள் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா லலிதா ரவி தம்பதியின் உடை மற்றும் நகைகளை வடிவமைத்துள்ளனர்.
அழகால் ஈர்க்கப்பட்டு திருமண பந்தத்தில் இணைவதை விட மனங்கள் ஒத்து நல்ல புரிதலுடன் ஏற்படும் பந்தமே நிலைக்கும். சொர்க்க்ததில் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இவர்களின் பெயரும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
கட்டுரையாளர் : கஜலட்சுமி