ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்டு இன்று ஃபேஷன் மாடலாக உருவாகி இருக்கும் சாதனையாளர்!
அம்மாவின் மடியில் கைக்குழந்தையாக படுத்திருந்த அன்மோல் மீது அவர் அப்பா வீசிய ஆசிட் அவரின் வாழ்க்கையை நிலைகுலைத்தாலும் இன்று அவர் ஒரு சாதனைப் பெண்ணாக வலம் வருகிறார்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அன்மோல் ரோட்ரிக்ஸ், ’Clovia’ என்கிற ஃபேஷன் மற்றும் உள்ளாடைகள் பிராண்டின் #HappyIsMySuperpower என்கிற புதிய பிரச்சாரத்தை ஊக்குவித்திருந்தாலும் அவரது வாழ்க்கை போராட்டங்களும் வலியும் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
அன்மோலின் அப்பா ஆசிட் வீசிய காரணத்தால் அவரது அம்மா உயிரிழந்துள்ளார். அப்போது அன்மோல் பிறந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. அன்மோல் அம்மாவின் மடியில் குழந்தையாக படுத்திருந்தார். அன்மோலின் முகம் விகாரமாக மாறியது. நிரந்தர வடுக்கள் ஏற்பட்டது. செல்வதற்கு இடமில்லாமல் போனது.
”என்னுடைய அப்பா சிறையிலடைக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தாலும் பராமரிக்க யாரும் இல்லாத காரணத்தாலும் நான் ஐந்தாண்டுகள் மருத்துவமனையில் இருந்தேன். அனாதை இல்லம் ஒன்றில் என்னை ஒப்படைக்கும் வரை மருத்துவர்களும் செவிலியர்களும் என்னை கவனித்துக் கொண்டனர்,” என்றார்.
ஸ்ரீ மானவ் சேவா சங் அனாதை இல்லத்தில் அன்மோல் வளர்க்கப்பட்டார். அங்கு எந்தவித பாகுபாடும் இன்றி அவருக்குத் தரமான கல்வியும் பராமரிப்பும் வழங்கபப்ட்டது.
நண்பர்கள் கிடைக்கவில்லை
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தபோது நிலைமை மாறியது. ”முதல் முறையாக பாகுபாட்டினை சந்தித்தேன். மக்கள் என்னை விநோதமாக பார்த்தனர். என்னுடன் நட்பு பாராட்ட யாரும் முன்வரவில்லை,” என்று அன்மோல் நினைவுகூர்ந்தார்.
கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது மன அழுத்தத்திற்கு ஆளாகி அனாதை இல்லத்திலேயே அதிக நேரம் செலவிடத் தொடங்கினார்.
”அனாதை இல்லத்தில் இருந்த அதிகாரிகள் என்னுடைய தேர்வு முடிவுகளைப் பார்த்து அதிர்ந்தனர். நான் எப்போதும் படிப்பில் முதலிடத்தில் இருப்பேன். என்னுடைய பிரச்சனை குறித்து அவர்கள் கேட்டபோது என்னால் அதை விவரிக்க முடியவில்லை,” என்றார்.
அனாதை இல்லத்தில் பயிற்சியாளர் ஒருவரை நியமித்தனர். அவர் பாடங்களை கற்றுக்கொடுத்ததுடன் மற்றவர்களின் மதிப்பீடுகள் குறித்து கவலைகொள்ளாமல் வாழ்க்கையில் கவனம் செலுத்தவேண்டும் என்பதையும் உணர்த்தினார்.
கணிணி பயன்பாடுகள் பிரிவில் இளங்கலை படிப்பு முடித்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்குத் தேர்வானார்.
“பட்டப்படிப்பை முடித்திருந்தபோதும் என்னுடைய போராட்டம் முடிவிற்கு வரவில்லை. அலுவலகத்தில் மக்கள் என்னை உற்றுப்பார்த்தனர். எனக்கு மிகவும் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. ஆனால் இந்த முறை வாழ்க்கையை நேர்மறை கண்ணோட்டத்தில் அணுக என்னைத் தயார்படுத்தியிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அனைவரும் என்னுடைய முகத்திலேயே கவனம் செலுத்தியதால் என்னை பணியிலிருந்து நீக்கிவிட்டனர்,” என்றார்.
சமூக ஊடகம் கண்ணோட்டத்தை மாற்றியது
அன்மோல் மற்றொரு வேலையில் சேர முயற்சித்தார். இந்த சமயத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் இணைந்து தனது புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
”சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி யாரும் கிண்டல் செய்தோ வெறுக்கத்தக்க வகையிலோ பதிவிடவில்லை. மக்கள் என்னை உந்துததலாகவே கருதினர். ஆனால் நிஜ வாழ்க்கை மாறுபட்டதாக இருந்தது,” என்றார்.
மக்கள் ஆன்லைனில் அவரைப் பாராட்டியபோதும் ஆஃப்லைனில் பெரிதாக யாரும் ஆதரவளிக்கவில்லை. ஆனால் அனாதை இல்லத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். 18 வயது நிரம்பியதும் அனாதை இல்லத்தில் தங்கமுடியாது. இருப்பினும் அவர்கள் அன்மோலுக்குத் தொடர்ந்து ஆதரவளித்தனர்.
”நான் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தனியாக வசிக்கத் தொடங்கினேன். ஓராண்டிற்குப் பிறகு அரசு சாரா நிறுவனம் ஒன்றில் எனக்கு பணி கிடைத்தது. ஆனால் எனக்கு பரிந்துரை செய்த பெண்மணி என்னுடைய சம்பளத் தொகையான 15,000 ரூபாயில் 5,000 ரூபாய் எடுத்துக்கொண்டார். அந்த சமயத்தில் அலுவலகப் பணி தேடி சோர்வடைந்து போனேன். கேமரா முன்பு நடிக்கவும் மாடலாக இருக்கவும் விரும்பினேன். என்னுடைய நண்பரும் மேலாளருமான மேகா எனக்கு உதவி செய்யத் தொடங்கினார்,” என்றார்.
சமூக நலனில் பங்களிக்க விரும்பிய அன்மோல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு சாரா நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். ஆனால் அவரது பார்ட்னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இன்று எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரின் உரிமைகள் தொடர்பாக பணியாற்றும் Kineer என்கிற நிறுவனத்தில் பணியாற்றுகிறார். Clovia பிரச்சாரமும் வாழ்க்கையில் அவரது இலக்கை நோக்கிய ஒரு முன்னெடுப்பாகும்.
பிராண்டுகள் கவனித்தன
சமூக ஊடகங்களில் இவர் பங்கேற்பதை பல்வேறு பிராண்டுகள் கவனித்தது. Clovia சமீபத்தில் நைட்வேர் வகைகளை அறிமுகப்படுத்தியது. அன்மோல் இதன் பிராண்ட் அம்பாசிடர்.
”நாங்கள் உள்ளாடைகள் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. நேர்மறையான வகையில் உந்துலளிக்கக்கூடிய பெண்களைக் கண்டறிந்து பாராட்டுவதில் கவனம் செலுத்துகிறோம்.
பெண்கள் சமூக கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து சுயத்தை வெளிப்படுத்த Clovia ஊக்குவிக்கிறது. ”மகிழ்ச்சியே என்னுடைய அசாதாரண வலிமை” என்பதே எங்களது தாரக மந்திரம். இதற்கு அன்மோலைவிட சிறந்த அம்பாசிடர் வேறு எவரும் இருக்கமுடியாது,” என்றார் Clovia நிறுவனர் மற்றும் சிஆர்ஓ நேஹா காந்த்.
சமூகம் ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்கிறார் அன்மோல்.
”வேலை வாய்ப்பு அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் என்னைப் போன்றோர் சாதாரண வாழ்க்கையை வாழமுடியும். அவர்கள் ஏற்கெனவே வாழ்க்கையில் பல அதிர்ச்சிகளை சந்துள்ளனர். எனவே அவர்களைக் கண்டு பச்சாதாபம் கொள்வதற்கு பதிலாக அவர்கள் சொந்த காலில் நிற்க உதவவேண்டும்,” என்றார்.
அன்மோல் தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் வாழ்கிறார். வருங்காலத்தில் ஒரு பிரபல நடிகையாக உருவாகவேண்டும் என்று விரும்புகிறார்.
“மக்களின் மனநிலை மாறும் என்றும் 70mm திரையில் தோன்றுவேன் என்றும் நம்புகிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா