தூத்துக்குடி பயிற்சி துணை கலெக்டர் ஆன சின்னி ஜெயந்த் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!
பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த போவதாக கூறும் ஜெய்!
பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த். 1980 - 1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக, துணை நடிகராக வலம்வந்தார். சினிமாவில் எந்தப் பாத்திரம் ஏற்றாலும், அதில் தனித்தன்மையுடன், தனக்கே உரித்தான காமெடி பாணியில் ஜொலிப்பார் சின்னி ஜெயந்த். காலங்கள் மாற சினிமா வாய்ப்புகள் குறைய இதன்பின் காமெடி ஷோக்களில் நடுவராக களமிறங்கினார். நீண்ட நாள்களுக்கு பின் அவர் விஜய் சேதுபதின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடித்துள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்த சந்தோஷத்துக்கு மத்தியில் சின்னி ஜெயந்த் வீட்டில் சமீபத்தில் இன்னொரு சந்தோசம் நிகழ்ந்தது. 2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இந்திய அளவில் 75வது இடம்பிடித்து தேர்ச்சி பெற்றார். அப்போதே இந்தத் தகவல் மிகவும் வைரலானது. இதையடுத்து, சின்னி ஜெயந்த் தனது மகன் ஜெய்யை அழைத்துக் கொண்டு ரஜினி உள்ளிட்ட சினிமாவின் மூத்த பிரபலங்களை சந்தித்து ஆசி வாங்கினார்.
இதற்கிடையே, ஜெய் நாராயணன் ஐஏஎஸ் பயிற்சியில் கலந்துகொண்டார். தற்போது பயிற்சி முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு கேடரில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டர் (பயிற்சி) ஆக ஜெய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்தே ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக,
தான் பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன் என்று ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், ஜெய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக திரைத்துறையை சேர்ந்தவர்களின் வாரிசுகள், திரைத்துறையை தேர்ந்தெடுப்பர். ஆனால் ஜெய் இந்த வழக்கத்தை மாற்றி சிவில் சர்வீஸ் தேர்வு மீது கவனம் செலுத்தி அரசு அதிகாரியாக மாறியிருக்கிறார்.
”அப்பா, அம்மா, என்னுடைய நண்பர்கள் எல்லோருமே பன்முகத்தன்மை கொண்டவர்கள். ஏதேனும் ஒரு துறையில் மட்டும் அவர்கள் இல்லை. எனது சுற்றுப்புறத்தில் இருந்த அவர்களின் இந்த செயல் எனக்கு ஊக்கமாக இருந்தது. எனினும், சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மா இருவரும் நான் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். அதற்கேற்ப நானும் நன்றாகப் படித்தேன். படிப்பதை அனுபவித்து செய்வேன். அப்படிதான் எனக்கு சிவில் சர்வீஸ் மீது ஆர்வம் வந்தது," என முன்பு ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ஜெய் நாராயணன்.
தகவல் தொகுப்பு: மலையரசு