கருவாடு, மளிகைக்கடை, காய்கறி வண்டி; லாக்டவுனால் வேறு தொழிலுக்கு மாறிய திரைப் பிரபலங்கள்!
கொரோனா அச்சுறுத்தலால் சினிமா படப்பிடிப்புகள் நடக்காமல் திரையுலகம் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் வருமானத்திற்கு வழியில்லாத பிரபல நடிகர்கள் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்.
இதற்கு முன்னர் உலகம் பல கொள்ளை நோய்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு வருகிறது கொரோனா தாக்கம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. வேறு வழியே இல்லை கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என ஒவ்வொரு நாடும் தங்களது மக்களுக்கு அறிவுறுத்தத் தொடங்கி விட்டது. ஆனாலும் அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தான் கொரோனா பாதிப்பு அதிகமானது. எனவே அப்போது முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், மக்களால் பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. இப்போதைக்கு அது சாத்தியமா என்பதே தெரியவில்லை.
கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு தொழில்கள் பெரும் முடக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. இதனால் வேறு வழியே இல்லாமல் அந்தத் தொழிலை இதுவரை செய்து வந்தவர்கள் வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த பலர், கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்கி விட்டனர்.
இது சாமானியர்களுக்கு மட்டுமல்ல... திரைப் பிரபலங்களுக்கும் பொருந்தும். திரையில் மட்டுமே பார்த்த பல பிரபலங்கள் கொரோனாவால் தெருவுக்கு இறங்கி வந்துள்ளனர். அதாவது காய்கறி விற்பனை, கருவாடு மற்றும் மீன் விற்பனை என வருமானத்திற்காக தங்களது தொழிலையே மாற்றிக் கொண்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. அப்போது பணக்கார நடிகர்கள் வீட்டில் ஓய்வில் இருக்க, சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த, அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு படப்பிடிப்பையே நம்பி இருந்த பலர் புதிய தொழிலில் களமிறங்கியுள்ளனர்.
சந்தர்ப்பங்கள் நமக்கு எதிரானதாக மாறும் போது, கிடைத்த வாய்ப்புகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களே உண்மையான திறமைசாலிகள். நான் ஒரு திரைப் பிரபலம் என்ற வீண் பெருமைகளைத் தூக்கி வீசி விட்டு, புத்திசாலித்தனமாக வருமானத்திற்கு வேறு வழியைத் தேடிக் கொண்டு ஊடகங்களில் பேசு பொருளாகினர் சில நடிகர், நடிகைகள்.
அப்படியான சிலரைப் பற்றிய தொகுப்பு தான் இது...
உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் தான் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிய மக்களுக்கு உடை, இருப்பிடம் கிடைத்து விட்டது. ஆனால் உணவுக்கு குறிப்பாக காய்கறி மற்றும் இறைச்சிக்கான தேவை இருந்து கொண்டே தான் இருந்தது. இதை சரியாகப் புரிந்து கொண்ட பலர், இந்த ஊரடங்கில் காய்கறி வியாபாரிகளாக மாறினர்.
அவர்களில் தபாங் 3 நடிகர் ஜாவித், இந்தி நடிகர் கார்த்திகா சாஹோ, மராத்தி நடிகர் ரோஷன், நடிகர் சின்ஹே (கருவாடு விற்பனை), நடிகர் சோலாங்கி திவாகர் போன்றோரும் அடங்குவர்.
முதலில் அமீர் கானின் குலாம் படத்தில் நடித்த நடிகர் ஜாவித் ஹைதர், தெருவில் காய்கறி விற்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதற்குப் பின்னர் தான் மற்ற நடிகர்கள் காய்கறி, பழங்கள் விற்கும் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவர்களில் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். நடிகர் சின்ஹே கருவாடு விற்பனை செய்து வருகிறார்.
மளிகைக் கடை
தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுனமழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த். கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. எனவே இவர் சென்னை முகலிவாக்கத்தில் மளிகைக் கடை ஒன்றைத் திறந்துள்ளார்.
இது குறித்து ஆனந்த் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
“கொரோனாவால் கடந்த சில மாதங்களாக சினிமா தொழில் இல்லை. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்று முடிவு எடுத்து நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு வாங்கி மளிகைக் கடை திறந்துள்ளேன். இங்கு குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்கிறேன்,” என்றார்.
இந்த கொரோனா கஷ்டத்தில் மக்களுக்கு ஒரு சேவையாக இந்தத் தொழிலை செய்கிறேன். படப்பிடிப்பு தொடங்கியதும் நான் இயக்கி வரும் ‘துணிந்து செய்’ படவேலைகளை கவனிக்க மீண்டும் சினிமா தொழிலுக்கு சென்று விடுவேன். அப்போதும் இந்த கடையை மூடமாட்டேன். வேறு ஒருவரை வேலைக்கு வைத்து கடையை நடத்துவேன்,” என்கிறார்.
மீன் வியாபாரம்
கழநோல் கனவு, ஆதாமின்டே மகன், புதிய தீரங்கள், உஷ்தாத் ஓட்டல், வர்ஷம், படடம்போல், பிரேமம் உள்பட பல மலையாள படங்களில் நடித்தவர் வினோத் கோவுர். ஊரடங்கு காலத்தில் இவர் மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார்.
இது குறித்து வினோத் கூறுகையில்,
“கொரோனாவால் திரையுலகம் முடங்கி வேலை இல்லாமல் இருக்கிறேன். இதனால் நண்பர்கள் ஆலோசனையின் பேரில் மீன் கடை திறந்து இருக்கிறேன்,” என்கிறார்.
வினோத்தைப் போலவே மற்றொரு மலையாள நடிகரான சுதீஷ் அன்சாரியும் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தனஹா உள்ளிட்ட பல மலையாள படங்களில், சிறு சிறு குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் சுதீஷ் அன்சேரி.
இவர் ஒரு தனியார் பள்ளியில், ஓவிய ஆசிரியராகவும், மிமிக்கிரி மற்றும் நாட்டுப்புற பாடல் கலைஞராகவும் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா பிரச்சனையால் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன, படப்பிடிப்புகள் முழு வீச்சில் தொடங்கவில்லை. எனவே வருமானத்திற்கான மீன் விற்பனை செய்து வருகிறார் இவர்.
விவசாயம்
மேற்கூறிய நடிகர்கள் மீன், இறைச்சி, மளிகை போன்ற வியாபாரங்களில் இறங்கி விட, இன்னும் சில திரைப் பிரபலங்களோ விவசாயத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர்.
நடிகர் பிரகாஷ்ராஜ், வில்லன் நடிகர் கிஷோர், காமெடி நடிகர் செந்தில், கின்னஸ் சாதனை நடிகர் பக்ரு, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை அனுமோல், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் என இந்தப் பட்டியல் மிக நீளமானது.
இவர்களில் பெரும்பாலானோர் வருமானத்திற்காக விவசாயத்தை நம்பி இருக்கவில்லை என்ற போதும், கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி தங்கள் மனதிற்குள் இருந்த விவசாய ஆசையை நிறைவேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் ‘காற்றுள்ள வரை தான் தூற்றிக் கொள்ள முடியும்’ என்பதில் தெளிவாகத் தான் உள்ளனர். இதனாலேயே திரைத்துறையை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் வேறு ஒரு துறையிலும் தங்களது முதலீட்டை செய்து வருகின்றனர்.
பேஷன் டிசைன் நிறுவனம்
அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, இந்த ஊரடங்கு காலத்தை தனக்கான ஓய்வாக எடுத்துக் கொண்டு பல விருப்பமான காரியங்களில் ஈடுபட்டுள்ளார். தோட்டக்கலையில் ஆர்வமாக செயல்பட்டு வரும் அவர், கூடவே பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
“எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். உடை விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம். அந்த விருப்பத்தை சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி இருக்கிறேன்.”
இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு உதாரணமாக இந்த தொழில் இருக்கும். நடிகையாக எனது பயணத்தை ஆரம்பிக்கும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன், என்றார் சமந்தா.