போன வருடம் கேரளா; இப்போ தமிழ்நாடு: கடையில் பணிபுரிபவர்களுக்காக சட்டத் திருத்தம் செய்த தமிழ்நாடு அரசு!
இருக்கை வசதி கட்டாயமாக்கப்படுகிறது!
கடந்த ஆண்டு கேரளாவில், ஜவுளிக் கடையில் பணிபுரிபவர்கள் உட்கார்ந்து கொண்டு பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இதேபோன்று ஒரு நடைமுறை தமிழகத்தில் கொண்டுவரப்பட இருக்கிறது. தமிழகத்தின் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு முயன்று வருகிறது.
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அளித்து விளக்கத்தின்படி,
மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் தங்களின் வேலை நேரத்தில் நின்றுகொண்டே பணிபுரியும் சூழல் நிலவுகிறது. அவர்கள் தங்களின் பணிநேரம் முழுவதும் நின்றுகொண்டே இருக்கின்றனர். இந்த தாக்கத்தின் காரணமான அவர்கள் பல வகையான உடல்நல தீங்குகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டவர்களின் நலன்களை கருத்தில்கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பணியாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவதை அரசு அவசியம் என கருதுகிறது.
அதன்படி, 04.09.2019 அன்று நடந்த மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி வழங்கும் விவகாரம் முன்வைக்கப்பட்டது.
பின்னர், கூட்டத்தில் தமிழக அரசின் யோசனை, குழுவின் உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது. அந்த யோசனையின்படி, 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய இருக்கிறது தமிழக அரசு," என்று கூறப்பட்டுள்ளது.
சமூக நீதி நாள்!
முன்னதாக, பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்று வருகிறது.