Anicut Capital இடமிருந்து ரூ.7 கோடி நிதி முதலீடு பெற்றது ‘உழவர்பூமி’
முன்னணி வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களில் ஒன்றான ’அனிகட் கேப்பிடல்’ (Anicut Capital) நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இடையே நேரடி வர்த்தகத்திற்கு வழி வகுக்கும் D2C அக்ரி ஸ்டார்ட் அப் நிறுவனம் Uzhavarbumi-இல் ரூ.7 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
’உழவர்பூமி’ நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து மேம்பட்ட விலைக்கு ஃப்ரெஷான பாலை கொள்முதல் செய்து, நகர்புற வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம், பண்ணை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இடையே பாலமாக விளங்குகிறது. விவசாயிகள் சீராக வருமானம் பெறவும், ஆண்டு முழுவதும் நிறுவனம் பால் கொள்முதல் செய்யவும் இது வழி செய்கிறது.
’அனிகட் ஏஞ்சல் ஃபண்ட்’ வழங்கும் நிதியை உழவர்பூமி தொழில்நுட்ப மேம்பாடு, பண்ணை கருவிகள் மற்றும் மார்க்கெட்டிங் உத்திகளுக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. பொருட்கள் பேக்கேஜிங்கை மேம்படுத்துவதோடு, ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, இந்த ஆண்டு பெங்களூரு மற்றும் அடுத்த ஆண்டு ஐதரபாத்தில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
"விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையிலான நேரடி வர்த்தகத்தை வழங்கும் உழவர்பூமி நிறுவனத்துடன் இணைவது பெருமை அளிக்கிறது. இந்த புதுமையான சப்ளை செயின் அணுகுமுறை மற்றும் சுற்றுச்சூழல் நட்பான நடவடிக்கைகள் எங்களுடைய நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு பொருத்தமாக உள்ளன,” என்று அனிகட் கேப்பிடல் நிர்வாக பார்ட்னர் பாலமுருகன் கூறியுள்ளார்.
"மேலும், நீடித்த நிலையான சமத்துவம் கொண்ட வேளாண் சார்ந்த சூழலை உருவாக்கும் எங்கள் நோக்கத்தில், அனிகட் கேப்பிடல் முதலீடு செய்வது உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆதரவுடன், எங்கள் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்து, சத்தான பாலை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வோம்,” என உழவர்பூமி நிறுவனர் வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள 42 மையங்களில் 2200க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு உழவர்பூமி வழங்கி வருகிறது. அண்மையில் வர்த்தகத்திற்கான செயலியையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. நிறுவனம், பாட்டிலில் பாலை வழங்குவதில் சுற்றுச்சூழல் நட்பான வழிகளை பின்பற்றி வருகிறது.
ஐடி ஊழியர் டூ பால்காரர்: பசும்பால் விநியோகத் தொழிலில் வெற்றிகண்ட வெற்றிவேல்!
Edited by Induja Raghunathan