‘பிரச்சனைகளை சுமூகமாக கடக்க நாம் யோகா மூலம் மன அமைதி அடையலாம்’ - ஐஸ்வர்யா தனுஷ்!
எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், நடனக்கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஐஸ்வர்யா SARVA என்கிற வெல்னெஸ் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் மகள், தனுஷின் மனைவி என்பதையெல்லாம் தாண்டி தனக்கென ஒரு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ஐஸ்வர்யா தனுஷ். இவர் ஒரு எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், நடனக்கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
பொழுதுபோக்குத் துறையில் இவருக்கு எப்போதும் ஈடுபாடு அதிகம். இவர் SARVA என்கிற யோகா வெல்னெஸ் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளார்.
இந்த ஸ்டார்ட் அப்பை 2016-ம் ஆண்டு சர்வேஷ் சசி நிறுவியுள்ளார். இவர்பாலிவுட் நடிகை மலைகா அரோரா உடன் இணைந்து Diva Yoga என்கிற பிரீமியம் பிராண்ட் பிரிவைத் தொடங்கினார். இதன் பிறகு SARVA ஸ்டார்ட் அப் SARVA & Diya Yoga என்கிற பெயரில் அறியப்படுகிறது.
இன்று இந்தத் தளத்தை ஜெனிஃபர் லோபஸ், மலைகா அரோரா, ஷாஹித் கபூர், மிரா கபூர், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆகியோர் ஆதரவளித்துள்ளனர்.
”எனக்கு சில ஆண்டுகளாகவே சர்வேஷை தெரியும். ஒன்றாக யோகா பயிற்சி செய்திருக்கிறோம். ஒன்றாக பேட்மிண்டன் விளையாடி இருக்கிறோம். அவர் மலைகா அரோரா உடன் இணைந்து Diva Yoga தொடங்கியபோது இந்த கான்செப்ட் புதிதாக இருந்ததால் தென்னிந்தியாவில் இதைத் தொடங்கலாமா என்று யோசனை கேட்டேன்,” என்று யுவர்ஸ்டோரி இடம் தெரிவித்தார் ஐஸ்வர்யா.
முதலீடு
ஐஸ்வர்யாவினுடைய யோசனை வெற்றிகரமாக அமையும் என்று சர்வேஷிற்கு தோன்றியுள்ளது. விரைவிலேயே SARVA ஸ்டார்ட் அப்பில் முதலீட்டாளராக இணைந்து கொண்டார் ஐஸ்வர்யா. இதுகுறித்து அவர் கூறும்போது,
”சரியான இடத்தில், சரியான நபர்களுடன் சரியான நேரத்தில் இணைந்திருக்கிறேன்,” என்றார்.
ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் தென்னிந்தியாவில் பிரபல அந்தஸ்தில் இருப்பவர்கள். மக்கள் மத்தியில் இவர்களுக்கு நற்பெயர் இருக்கிறது. எனவே இந்த முயற்சியை தென்னிந்திய மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்று நம்பினார்.
ஃபிட்னெஸில் இவருக்கு ஆர்வம் இருந்தபோதும் பொழுதுபோக்குத் துறையில் மட்டுமே இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால் ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டியுள்ளார்.
”தற்போதைய சூழலில் நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம் என்று நினைத்தேன். சில சமயம் நாம் தனிமையில் இருக்க விரும்புவோம். மனதில் இருக்கும் அழுத்தத்தை மெல்ல சுவாசிப்பதன் மூலம் வெளியேற்ற நினைப்போம். ஆனால் இது முடியாமல் போகும். இன்று நம் அனைவரது வாழ்க்கையில் பதட்டம் என்பது தவிர்க்கமுடியாத அங்கமாக மாறிவிட்டது. யோகா இதற்கு சரியான தீர்வாக அமையும்,” என்கிறார்.
யோகா என்பது ஃபிட்னெஸ் மட்டுமல்ல. அது நம் வாழ்க்கைமுறையில் நாம் கொண்டு சேர்க்கும் மாற்றம். இந்த செயலி ஓராண்டு வரை இலவசமாகக் கிடைக்கும். பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் ஐஸ்வர்யா. யோகா செய்வதற்கு ஒரு இடமும் ஒரு யோகா மேட்டும் இருந்தால் போதும் பயிற்சியைத் தொடங்கிவிடலாம் என்கிறார் ஐஸ்வர்யா.
யோகாவின் முக்கியத்துவம்
தனிப்பட்ட முறையில் ஐஸ்வர்யா பல வகையான ஃபிட்னெஸ் வகைகளை முயற்சி செய்துள்ளார். மூன்றாண்டுகளுக்கு முன்னரே யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்துள்ளார்.
”என் பெற்றோர் யோகா செய்வார்கள். நான் அதைப் பார்த்தே வளர்ந்தேன். யோகா முறை போரிங்காக இருக்கும் என்பதே என் கருத்தாக இருந்தது. தனிப்பட்ட முறையில் ஒருவர் யோகாவின் பலன்களை அனுபவித்தால் மட்டுமே இதை ஈடுபாட்டுடன் மேற்கொள்வார்கள்,” என்கிறார் ஐஸ்வர்யா.
யோகாவின் பலன்கள் ஒரே நாளில் தெரியாது. தொடர்ந்து செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். யோகா வாழ்க்கையை மாற்றக்கூடியது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும் என்கிறார்.
உங்களை நேசியுங்கள்...
பெண்கள் முதலில் தங்களை நேசிக்க பழகிக்கொள்ளவேண்டும். எத்தனை பரபரப்பாக இருந்தாலும் இதற்கென நேரம் ஒதுக்கவேண்டும் என்கிறார்.
“பெண்களாகிய நம்மால் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்க முடியும். இதற்கு நாம் பெருமைப்படவேண்டும். அதேசமயம் சுய பராமரிப்பு மிகவும் முக்கியம். நம்மை நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். நிச்சயம் இதற்கு நேரம் ஒதுக்கவேண்டும். நம்மை முறையாகப் பராமரித்துக் கொண்டால் மட்டுமே நம்மால் மற்றவர்களை பராமரிக்க முடியும். நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தும் பிரச்சனையின்றி சுமுகமாக செல்ல நாம் தினமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம்,” என்கிறார்.
யோகா செய்வதைத் தவிர்ப்பதற்கு எந்த ஒரு காரணத்தையும் சுட்டிக்காட்டக்கூடாது என்கிறார் ஐஸ்வர்யா. வாரத்தில் ஆறு நாட்கள் வொர்க் அவுட் செய்கிறார். இவர் வழக்கமாக செய்யும் ஃபிட்னெஸில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது.
ரஜினியின் மகள் என்கிற அடையாளமும் தனுஷின் மனைவி என்கிற அடையாளமும் தனக்கென உருவாக்கிக்கொண்ட பிம்பத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா.
“நான் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நிறைந்தே இருக்கும். பாதி டம்ப்ளரில் நீர் நிரம்பியிருப்பதை கவனிக்கவேண்டுமே தவிர பாதி டம்ப்ளரில் நீர் இல்லை என வருந்தக்கூடாது. நான் எனக்குக் கிடைப்பவற்றை அழுத்தமான அணுகுமுறையுடன் பார்க்காமல் ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன். இதனால் வாழ்க்கையில் சிக்கல்கள் குறைகிறது,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா