உலகின் 4வது பணக்காரரின் காப்பீட்டு நிறுவனத்திற்கு வாரிசாகப் போகும் இந்தியர் அஜித் ஜெயின்!
இந்தியாவில் சாதாரண விற்பனையாளராக இருந்த அஜித் ஜெயின் அமெரிக்க நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் அடுத்த வாரிசாகப் போகிறவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
அஜித் ஜெயின் இந்தியாவின் கடற்கரை மாநிலமான ஒடிசாவின் கட்டாக்கில் சாதாரண விற்பனையாளராக இருந்தவர். உலகின் நான்காவது பணக்கார அமெரிக்க நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேவின் உரிமையாளர் வாரன் பஃபெட்டின் வெற்றிக்குக் காரணமானவர் என்றால் நம்ப முடிகிறதா.
பஃபெட்டின் தற்போதைய சொத்து மதிப்பு $90 பில்லியன். அஜித் ஜெயின் மட்டுமே 2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 14 ஆயிரம் கோடி) சொத்துக்கு சொந்தக்காரர்.
1972 இல் ஐ.ஐ.டி கரக்பூரிலிருந்து படிப்பை முடித்து வெளியே வந்த அஜித் ஜெயின், இதுவரை பெர்க்ஷயரில் முதலீடு செய்தவர்களின் முதலீடுகளை நூற்றுக்கணக்கான கோடி ரூபாயாக மதிப்பை உயர்த்தியுள்ளார். இந்தியாவில் சாதாரண விற்பனை பிரதிநிதியாக இருந்திருக்கிறார் இவர். தொடக்க காலத்தில் சர்வதேச வணிக இயந்திரக் கழகத்தில் (ஐபிஎம்) தரவு செயலாக்க அதிகாரியாக 1973 முதல் 1976 வரை பணியாற்றி இருக்கிறார். ஆனால் 1976 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐபிஎம் திட்டம் மூடப்பட்டதால், அவரது வேலையும் பறிபோனது. அதற்குப் பிறகு, அவர் 1978ல் யு.எஸ். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்து மெக்கின்சி & கம்பெனியில் பணியில் சேர்ந்துள்ளார்.
1980ல் இந்தியா திரும்பிய பின்னர், டிங்கு ஜெயின் என்பவரை மணந்தார் ஜெயின். அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை, ஆனால் மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்று மெக்கின்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். எனினும் சில மாதங்களிலேயே அவர் மெக்கின்சியை விட்டு வெளியேறினார்.
ஒரு காலத்தில் மெக்கின்சியில் மூத்த அதிகாரியாக இருந்த கோல்ட்பர்க், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தார். அஜித் ஜெயினை தன்னுடன் பணியாற்றுமாறு கோல்ட்பர்க் அழைத்தார். அதன்பிறகு, உலகின் நான்காவது பணக்காரரும் பெர்க்ஷயர் ஹாத்வே உரிமையாளருமான வாரன் பஃபெட் அஜித் ஜெயினின் வர்த்தகத் திறமைகள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அஜித் ஜெயின் வாழ்க்கையில் அனைத்துமே ஏறுமுகமாக இருந்தது. பெர்க்ஷயர் ஹாத்வே அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது என்பதோடு அமேசானின் பங்குகளையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்க்ஷயர் ஹாத்வே தலைவர் வாரன் பஃபெட் தனது வாரிசை நீண்ட காலமாக தேடி வருகிறார். தனது குழந்தைகள் சூசன், ஹோவர்ட் மற்றும் பீட்டர் பல தொண்டு நிறுவனங்களில் தனது வாரிசுகளாக இருப்பதை அவர் விரும்பவில்லை. பஃபெட் கடந்த ஆண்டு தனது நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வேயின் இயக்குநராக அஜித் ஜெயினை நியமித்துள்ளார்.
அண்மையில் வாரன் பஃபெட் தனது நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் எதிர்காலத்தில் பெர்க்ஷயர் ஹாத்வேயில் முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகாரம் அஜித் ஜெயினுக்கு செல்லக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரெக் ஆபெல் மற்றும் அஜித் ஜெயின் இருவரில் யாரை பெர்க்ஷயர் ஹாத்வேக்கு வாரிசாக்குவது என்ற குழுப்பத்தில் இருக்கிறார் பஃபெட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் இணைக்கப்பட்டனர். பெர்க்ஷயரின் வாரிசாக ஜெயின் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை பஃபெட் ஊடகங்களின் கேள்விக்குக் கூட தெளிவாக பதிலளிக்கவில்லை.
கிரெக் ஆபெலை விட அஜித் ஜெயினைத் தான் பஃபெட் அதிகம் நம்புகிறார். பஃபெட் அஜித் ஜெயினின் கவிஞர் என்றும் கூட சொல்லலாம் அந்த அளவிற்கு பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே ஜெயினை அவர் பாராட்டியுள்ளார்.
அஜித் ஜெயினைப் பற்றி பஃபெட் தனது ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : '1986ல் ஒரு சனிக்கிழமையன்று அஜித் அலுவலகத்தில் சேர்ந்தபோது, அவருக்கு காப்பீட்டுத் துறையின் அனுபவம் இல்லை. எனினும் அவர் சேர்ந்தது முதலே பெர்க்ஷயரில் முதலீட்டாளர்களுக்காக அஜித் நூற்றுக்கணக்கான மில்லியன் மதிப்பை உயர்த்தியுள்ளார். முன்னதாக 2014 ஆம் ஆண்டில் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜெயினின் வணிகத் திறனைப் பற்றி விவாதிக்க சிறிது நேரம் செலவிட்டதாக பஃபெட் குறிப்பிட்டிருந்தார்.
2008ம் ஆண்டில், பஃபெட் தனது கடிதத்தில் : "ஜெயின் எங்களுடன் சேர்ந்தபோது, எங்களுக்கு ஒரு அசாதாரண திறமை கிடைத்துள்ளது என்பதை உணர்ந்தேன். எனவே, நான் இயல்பாகவே இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு கடிதம் எழுதி, அவருடைய வீட்டில் இன்னும் திறமையாளர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன். எழுதுவதற்கு முன்பே, எனக்கு பதில் தெரியும். அஜித்தை தவிர வேறு யாரும் இல்லை என்பது தான் அது. 'அஜித் ஜெயினின் அடையாளம் அவர் அன்ஷு ஜெயினின் உறவினர் என்பதும் ஆகும். அன்ஷு ஜெயின் டச்சஸ் வங்கியின் முன்னாள் இணை தலைமை நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கட்டுரை : கஜலெட்சுமி