அலிபாபா குழுமத்தின் அதிர்ச்சி அறிவிப்பு; Xiami நிறுவனத்தை மூட முடிவு - என்ன காரணம்?
XIAMI மியூசிக் செயலியை முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது!
சீன அரசின் நெருக்கடியின் காரணமாக அலிபாபா நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அது, தனது மிகப்பெரிய கனவுத் திட்டமான பொழுதுபோக்குத்துறை வர்த்தகத்தை கைவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் மீது சீன அரசு தற்போது மோனோபோலி வழக்கு விசாரணை நடத்தி வருகிறது. இதன்காரணமாக பொழுதுபோக்குத்துறை வர்த்தகத்துக்கு முழுக்கு போட அலிபாபா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆன்ட் குழுமத்தின் ஐபிஓ மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சியைப் பல வழிகளில் முடங்கியுள்ளது சீன அரசு. தற்போது அடுத்தக்கட்டமாக அலிபாபா வளர்ச்சியை முடக்க வேண்டும் என்று திட்டமிடுள்ளது. அதன்படி, அதன் வளர்ச்சித் திட்டங்களைக் குறிவைத்துக் கட்டுப்படுத்ததும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இதற்கான துருப்புச்சீட்டுதான் மோனோபாலி வழக்கு. இந்த வழக்கு மூலமாக அலிபாபா நிறுவனத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது சீன அரசு. அலிபாபா நிறுவனம் எண்டர்டெயின்ட்மென்ட் துறையில் கோலோச்ச நினைத்த நிலையில், தற்போது அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு XIAMI என்கிற பிரபலமான மியூசிக் செயலி நிறுவனத்தைக் கைப்பற்றியது அலிபாபா நிறுவனம். இதன்மூலம் பொழுபோக்குத் துறையில் கால்பதிக்க முடிவு செய்தது அந்நிறுவனம். தொடர்ந்து, மில்லியன் டாலர் முதலீட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சேவை வளர்ச்சி அடைந்தது.
இதுவரை எந்தவிதமான நிதி நெருக்கடியும் இல்லாத நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி முதல் XIAMI மியூசிக் செயலியை முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 10 வருடங்களுக்கும் மேலான பழமையான இந்த செயலியை நிறுத்தும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளது அலிபாபா.
அலிபாபா நிறுவனத்தின் இசை வர்த்தகப் பிரிவு வலைதளமான வெய்போ தளத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. XIAMI செயலி சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வர்த்தகத்தைப் பெறவில்லை என்றாலும் சீன இசை வர்த்தகச் சந்தையில் சுமார் 2 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 மாதங்களாகவே, அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சீனா, அமெரிக்கா பங்குச்சந்தையில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது. சீன அரசை எதிர்த்த காரணத்தினால் இன்று அலிபாபா நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
தொகுப்பு: மலையரசு