இந்தியாவில் மூதலீடு செய்வதன் மூலம் அமேசான் எந்த உதவியும் செய்து விடவில்லை-அமைச்சர் பியூஷ் கோயல்!
பெசோசை சந்திக்க பியூஷ் கோயல் நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இந்தியாவில் 100 கோடி டாலர் அளவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், மூதலீடு செய்வதன் மூலம் அமேசான் இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்துவிடவில்லை என்றும் நிறுவனம், பெரிய நஷ்டத்தை ஈடுசெய்வது எப்படி என்றும், போட்டியை வெல்வதற்கான தள்ளுபடி விலை உத்தி மூலமே தாக்குப்பிடிப்பதாகவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், பல பிராண்ட ரிடைல் பிரிவில் பின்பக்க வழியாக உள்ளே நுழைய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பெசோசை சந்திக்க பியூஷ் கோயல் நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல பிராண்ட் ரிடைலிங்கில் இந்தியா 49 சதவீதத்திற்கு மேல் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவில்லை மற்றும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் எதையும் இன்னமும் அனுமதிக்கவில்லை.
"அவர்களிடம் (அமேசான்) கோடிக்கணக்கில் டாலர்கள் இருக்கலாம். ஆனால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்தால், அவர்கள் அந்த கோடிகளை ஈடு செய்தாக வேண்டும். எனவே இந்தியாவில் முதலீடு செய்யும் போது அவர்கள் ஏதோ உதவி செய்வதாக கருத முடியாது," என அமைச்சர் தெரிவித்தார்.
அமேசான் அறிவித்துள்ள ஒரு பில்லியன் டாலர் முதலீடு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் ஆன்லைனுக்கு வர உதவி செய்யும்.
வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப மேடையை அளிக்கும் இ-காமர்ஸ் வர்த்தக மாதிரியை பின்பற்றும் நிறுவனம் ஏன் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோயல் தெரிவித்தார்.
"கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் வேர்ஹவுஸிங் உள்ளிட்டவற்றிலும் முதலீடு செய்து வருகின்றன. இது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர்கள் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக பணத்தை கொண்டு வருகின்றனர். இந்த நஷ்டன் இ-காமர்ஸ் சந்தை மேடையில் உண்டாகிறது,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நியாயமான சந்தை மாதிரியில், 10 பில்லியன் டாலர் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தால், எதற்கான காரணம் என்ன என கேள்வி எழும், என்று அவர் தெரிவித்தார்.
போட்டியை வெல்வதற்கான தள்ளுபடி விலை அல்லது நியாயமில்லாத செயல்முறையில் ஈடுபடாத நிலையில் ஒரு சந்தை மாதிரி எப்படி நஷ்டம் அடையும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"இவை எல்லாம் உண்மையான பதில்கள் தேவைப்படும் உண்மையான கேள்விகள். இது தொடர்பாக அதிகாரிகள் பதில் தேடிக்கொண்டிருப்பார்கள் என்றும், இ-காமர்ஸ் நிறுவனங்கள் இவற்றுக்கு பதில் அளிக்கும் என்றும் நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்திய போட்டி கமிஷன், தள்ளுபடி மற்றும் நியாயமற்ற செயல்முறைகள் தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இ-காமர்ஸ் சந்தை மாதிரியில், வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா அனுமதிப்பதாகவும். இதில் வர்த்தகர்கள் மற்றும் வாங்குபவர்கள் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் ஆனால் சந்தை மாதிரி நிறுவனம் கையிருப்பை சொந்தம் கொண்டாட முடியாது என்றும், விலையை நிர்ணயிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பல பிராண்ட் ரிடைல் மாதிரியில் வெளிநாட்டு முதலீட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், இ-காமர்ஸ் மாதிரி வழியே இதில் நுழைய முற்பட்டால் கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டாளர்கள் இந்த சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்
-