பெண்கள் மட்டுமே பணிபுரியும் டெலிவரி மையங்கள்: மேலும் 2 இடங்களில் திறந்த அமேசான் இந்தியா!
50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை!
அமேசான் இந்தியா நிறுவனம், கேரள மாநிலத்தின் இரண்டு இடங்களில் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இரண்டு டெலிவரி மையங்களை திறந்தது. கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரண்முலா பகுதி மற்றும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் இந்த டெலிவரி மையங்களை திறந்துள்ளது.
இந்த மையங்கள் டெலிவரி சேவையில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனங்களால் இயக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மையம் மூலமாக, இந்த இரண்டு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் குஜராத்தின் காதியில் உள்ள டெலிவரி மையங்களின் தொடர்ச்சியாக இந்த இரண்டு பெண்கள் டெலிவரி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமேசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“லாஜிஸ்டிக்ஸ் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான அமேசான் இந்தியாவின் முயற்சியாக இந்த பெண்கள் டெலிவரி மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. டெலிவரி சர்வீஸ் பார்ட்னர் எனப்படும் டிஎஸ்பி திட்டம் கடைசி மைல் வரை டெலிவரி செய்யவிருக்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அமேசான் இந்தியா சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது.”
முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆக நினைக்கும் பலருக்கு இந்தத் திட்டம் ஒரு முயற்சியாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்க இந்த பார்ட்னர்கள் உள்ளூர் சமூகங்கள் தொடர்பான அறிவுடன், அமேசான் இந்தியா வழங்கும் தொழில்நுட்ப ஆதரவையும் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற நகரங்களில் டெலிவரி நிலையங்களைத் தொடங்குவது அமேசான் இந்தியாவுக்கு இந்த பகுதிகளை சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை தொடர்பான அணுகலை ஆழமாக்குவது மட்டுமல்லாமல், டிஎஸ்பி மற்றும் அவர்கள் பணியமர்த்தும் கூட்டாளிகளுக்கும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து கூட்டாளிகளும் வாடிக்கையாளர் சேவை, தொகுப்புகளை கையாளுதல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், பிரத்யேக ஹெல்ப்லைன் எண் அல்லது பகலில் தேவைப்படும் எந்த ஆதரவும் அல்லது உதவியும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமேசான் இந்தியா அதிகாரி, பிரகாஷ் ரோச்லானி இந்த திட்டம் தொடர்பாக பேசுகையில்,
“பெண்களுக்கு வேலை, வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் வளங்களை சமமாக வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அது அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. கேரளாவில் இந்த இரண்டு பெண்கள் விநியோக நிலையங்களும் தொடங்கப்படுவது பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிறைவான வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் விரிவாக்கமாகும், மேலும் அவர்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று பேசியுள்ளார்.
அரண்முலாவில் உள்ள இந்த டெலிவரி மையத்தில் பணிபுரியும் மாயா வினோத் என்பவர், ”ஒரு டெலிவரி அசோசியேட்டாக இருப்பது எனக்கு நிதி ரீதியாக சுயாதீனமாக இருக்க அதிகாரம் அளித்துள்ளது. மேலும் நான் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் எனக்கு ஆறுதல் இருக்கிறது. வாடிக்கையாளர்களிடமிருந்தும் எனது சகாக்களிடமிருந்தும் நான் பெற்ற மரியாதை ஈடு இணையற்றது," என்றுள்ளார்.
ஆங்கிலத்தில்: ரேகா | தமிழில்: மலையரசு