உலக வரலாற்றில் $200 பில்லியன் சொத்து மதிப்பை எட்டிய முதல் மனிதர் ஜெப் பெசோஸ்!
இந்த ஆண்டு 90 மில்லியன் டாலர் சொத்து மதிப்பை கூடுதலாக பெற்ற அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
இ-காமர்ஸ் ஜாம்பவனான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், உலகில் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை பெறும் முதல் தொழிலதிபர் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு சொத்து மதிப்பு உயர்வில் அதிக பலன் பெற்றவர்களில் ஒருவராக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விளங்குகிறார். இந்த ஆண்டு துவக்கம் முதல் அவரது நிறுவன பங்குகள் 86 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.7 லட்சம் கோடி டாலராக இருக்கிறது.
பெசோசின் 90 சதவீத சொத்து மதிப்பு அமேசான் பங்குகள் மூலம் சாத்தியமாகும் நிலையில், இந்த ஆண்டு அவரது நிகர மதிப்பு 90 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் 11 சதவீத பங்குகளை கொண்டிருப்பதோடு, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மற்றும் விண்வெளி நிறுவனமான புளு ஆரிஜின் ஆகியவற்றின் அதிபராகவும் பெசோஸ் விளங்குகிறார்.
புளும்பர்க் வெளியிட்டுள்ள செல்வந்தர்கள் பட்டியலின் படி இரண்டாவது இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் முதலிடத்தில் உள்ள பெசோஸ் ஆகியோர் இடையிலான இடைவெளியும் அதிகரித்துள்ளது. பில்கேட்ஸ், 124 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு பெற்றுள்ளார்.
அமேசான் நிறுவனர் பெசோஸ் கடந்த ஆண்டு தனது மனைவி மெக்கின்சி ஸ்காட்டை விவாகரத்து செய்யாவிட்டால் இன்னும் பெரிய கோடீஸ்வரராக இருந்திருப்பார்.
விவாகரத்து நஷ்ட ஈடாக பெசோஸ் மனைவிக்கு 38 பில்லியன் வழங்கினார். விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெசோஸ் முன்னாள் மனைவிக்கு தனது அமேசான் பங்குகளில் 25 சதவீதத்தை வழங்க ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் சந்தை மதிப்பு 63 பில்லியன் டாலராகும். இதன் மூலம் அவர் உலகின் பணக்கார பெண்மணியாக திகழ்கிறார்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் (115 பில்லியன் டாலர்) மற்றும் டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் (101 பில்லியன் டாலர்) ஆகிய தொழில்நுட்ப பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 73.6 பில்லியன் டாலர் அதிகரித்ததால், அவர் 100 மில்லியன் டாலர் குழுவில் இணைந்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், எலன் மஸ்க், ஜக்கர்பர்க் மற்றும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ் பங்கு மதிப்பு உயர்ந்ததை அடுத்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அவரது ஜியோ சேவை மேடையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
ஜெப் பெசோஸ் தவிர முன்னணி பத்து கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர் அதிகரிப்பதை எதிர்கொண்டுள்ளனர் என புளும்பர்க் தெரிவிக்கிறது.
செய்தி: பிடிஐ