அமேசானில் பதிவு செய்துள்ள விற்பனையாளர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு!
அமேசானில் செல்லர்களாக பதிவு செய்துள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் 50,000 ரூபாய் வரையிலான மருத்துவச் செலவுகான காப்பீட்டை அமேசான் வழங்கியுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் விற்பனையாளர்களுக்கு கோவிட்-19 தொற்று தொடர்பான இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, சிகிச்சை, ஆம்புலன்ஸ் உதவி, ஐசியு செலவுகள் என 50,000 ரூபாய் வரையிலான மருத்துவs செலவுகளை இந்த காப்பீடு மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓராண்டு வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நிர்வகிக்கவும் உரிமைகோரல்களை கையாளவும் Acko General Insurance நிறுவனத்துடன் அமேசான் இணைந்துள்ளது.
லட்சக்கணக்கான அமேசான் விற்பனையாளர்கள் இதன் மூலம் பலனடைவார்கள். 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 2020 மே 26-ம் தேதி வரை அமேசான் நிறுவனத்தின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும்.
“எங்கள் விற்பனையாளர்களில் யாருக்கும் இதைப் பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறோம். அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்யவே விரும்புகிறோம். அவர்கள் இதுகுறித்து கவலை கொள்ளாமல் தங்களது வணிக வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தலாம்,” என்று அமேசான் இந்தியா விற்பனையாளர் சேவை பிரிவின் துணைத் தலைவர் கோபால் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஊழியர்கள் தேவை அதிகரித்திருப்பதால் அமேசான் 50,000 பேருக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் பேக்கிங் கிடங்குகள், டெலிவரி நெட்வொர்க், பகுதி நேர வேலை ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் பொருட்களை சேகரித்தல், பேக் செய்தல், போக்குவரத்து, விநியோகம் ஆகியவற்றில் பங்களிப்பார்கள்.
“அமேசான் போன்ற மின்வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்களிப்பதை கோவிட்-19 பெருந்தொற்று எங்களுக்கு உணர்த்தியுள்ளது. இன்றைய கடினமான சூழலில் சிறு வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவையளிக்க எங்கள் குழுவினர் உதவி வருகின்றனர். அவர்களது சிறப்பாக பணியாற்றுவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம்,” என்று அமேசான் ஃபுல்ஃபில்மெண்ட் பிரிவின் துணைத்தலைவர் அகில் சக்சேனா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மின்வணிக துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் டெலிவரி பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் என்றும் அத்தியாவசியமற்றப் பொருட்கள் என்றும் வகைப்படுத்தி பிரிப்பதில் குழப்பங்கள் ஏற்பட்டது.
தகவல்: பிடிஐ