சென்னை டூ மிசோரம்: இளைஞர் உடலுடன் 6000கிமி ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற தமிழர்கள்!
கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞரின் உடலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மிசோரமிற்கு எடுத்துச்சென்ற சம்பவம் மனிதநேயத்தை வெளிப்படுத்தியது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, வருவாய் இழப்பு ஆகியவவை மக்களை வாட்டி வருகிறது. இது ஒருபுறம் இன்றைய சூழலில் ஏற்படும் உயிரிழப்புகள் மக்களை சொல்லொனாத் துயரில் ஆழ்த்துகிறது. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதும் இறுதிச்சடங்குகளை முறையாக நடத்துவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
மக்கள் வாழ்வாதாரத்திற்காக வெவ்வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து சென்று பணிபுரிந்து வருகின்றனர். இந்தச் சூழலில் கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பவர்களின் நெருங்கிய உறவினர்களும்கூட இறந்தவர் இருக்குமிடத்திற்கு விரைந்து சென்று இறுதியஞ்சலி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
மிசோரம் தலைநகரான அய்ஸ்வால் பகுதியைச் சேர்ந்தவர் விவியன் ரெம்சங்கா. 28 வயதான இவர் சென்னையில் உயிரிழந்தார். மிசோரமில் வசிக்கும் அவரின் குடும்பத்தினர், விவியனின் உடலை அங்கு கொண்டு சேர்க்க கேட்டுக்கொண்டனர்.
கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இந்த இளைஞரின் உடலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான ஜெயேந்திரன் மற்றும் சின்னதம்பி மிசோரமிற்கு எடுத்துச்செல்ல சம்மதித்தனர்.
ஜெயேந்திரன் மற்றும் சின்னதம்பி, விவியனின் உடலோடு சென்னையில் இருந்து 3,450 கி.மீட்டர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றுள்ளனர். விவியனின் நண்பரான ரஃபேல் ஏவிஎல் மல்சன்ஹிமா ஆம்புலன்ஸில் உடன் சென்றார்.
இவர்கள் மூவரின் மனிதநேயமிக்க செயலை மிசோரம் முதலமைச்சர் ட்விட்டர் மூலம் பாராட்டி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒவ்வொருவரும் அன்புடனும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற ஒழுக்கநெறியை இவர்களது செயல் மேலும் வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும் அய்ஸ்வால் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறே இரண்டு ஓட்டுநர்களுக்கும் தங்களது நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய சால்வைகள், சட்டைகள் போன்றவற்றை வழங்கினர்.
“எங்கள் நண்பரின் உடலை சென்னையில் இருந்து இரண்டு நல்லுள்ளங்கள் 3,000 கி.மீட்டருக்கும் மேல் பயணித்து இங்கு கொண்டு சேர்த்துள்ளனர். கொடிய நோய்பரவல், இனவெறித் தாக்குதல், அச்சம் போன்றவற்றிற்கு இடையே உண்மையான தமிழர்களின் நற்பண்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி, அண்ணா,” என்று அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர் எழுதியுள்ளார்.