4 வருடங்களில் 3கோடியில் இருந்து ரூ.16.5 கோடி டர்ன்ஓவர் – உணவு மட்டுமல்ல இவரது வளர்ச்சியும் துரிதம்!
2016-ம் ஆண்டு அன்குஷ் அரோரா தொடங்கிய சண்டிகரைச் சேர்ந்த Uncle Jack’s மக்களிடையே மிகவும் பிரபலமாகி விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது.
எந்த ஒரு துறையாக இருந்தாலும் ஆர்வத்துடன் அதில் செயல்பட களமிறங்கும்போது புதுமையான சிந்தனைகள் தாமாகவே வந்துவிடுகிறது.
அதேபோல் உணவில் ஆர்வம் அதிகமுள்ள அன்குஷ் அரோரா துரித சேவை வழங்கும Uncle Jack’s உணவகத்தை 2016ம் ஆண்டு சண்டிகரில் தொடங்கினார். முதல் ஆண்டிலேயே 3 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டினார்.
அன்குஷ், பஞ்சாபில் உள்ள சித்கரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தார். அந்த சமயத்திலேயே உணவு வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.
2012-ம் ஆண்டு அன்குஷ் நியூயார்க்கில் இருந்தபோது அவரது வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது.
“விருந்தினர்களுக்கு வித்தியாசமான முறையில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் பரிமாறவேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் பீக்கரில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் போட்டு பரிமாறினேன். இது எல்லோருக்கும் பிடித்திருந்தது. சிலர் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்,” என்கிறார் அன்குஷ்.
இந்த சம்பவம் உணவுத் துறையில் தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற அவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது.
2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சண்டிகரில் ஒரு கண்காட்சி நடந்தது. அன்குஷ் அங்கு ஒரு உணவு ஸ்டால் அமைத்தார். பீக்கரில் வழங்கப்படும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் உள்ளிட்ட துரித உணவு வகைகளை அங்கு காட்சிப்படுத்தினார். ஒரு மணி நேரம் ஸ்டாலில் இருந்த அனைத்தும் விற்றுத் தீர்த்துவிட்டதாக தெரிவிக்கிறார் அன்குஷ்.
இதுபோன்ற சிறு வெற்றிகள் என்றும் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க ஊக்குவிக்கின்றன. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சண்டிகரின் செக்டார் 8-ல் Uncle Jack’s திறந்தார். தனிப்பட்ட சேமிப்பில் இருந்து 60,000 ரூபாயும் நண்பர்களிடமிருந்து 2 லட்ச ரூபாயும் திரட்டினார்.
வணிக அம்சங்கள்
துரித உணவு துறை 2021-2025 ஆண்டுகளிடையே 18 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்ச் அண்ட் மார்கெட்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.
விரைவான நகரமயமாக்கல், உணவு டெலிவரி சேவைகள் விரிவாக்கம், இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, குடும்பத்தில் இருவர் சம்பாதிப்பது போன்றவை இந்த வளர்ச்சிக்கான முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
KFC, McDonald’s, Cafe Coffee Day, Mad Over Donuts, Barista, Starbucks, Dominos, Pizza Hut என எத்தனையோ QSR பிராண்டுகள் செயல்பட்டாலும் இந்தப் பிரிவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்களுக்கு நெருக்கமான பிராண்டாக Uncle Jack’s இருக்கவேண்டும் என்று அன்குஷ் விரும்புகிறார்.
சிறந்த சேவை, சரியான விலை போன்ற அம்சங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் உதவுகிறது.
”என் அம்மாவிடம் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். அதன்படி எப்போதும் ஃப்ரெஷ்ஷான மூலப்பொருட்களை உணவு தயாரிப்பில் பயன்படுத்துகிறேன். காய்கறிகள் உள்ளூர் சந்தையில் வாங்கப்படுகின்றன. சண்டிகரில் இருக்கும் சமையலறையில் இருந்து செயல்படுகிறோம்,” என்றார்.
பர்கர், சாண்ட்விச், பானங்கள் என 15 பிரிவுகளின் கீழ் Uncle Jack’s உணவு வகைகளை வழங்குகிறது.
விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி
2016-ம் ஆண்டு முதலே Uncle Jack’s நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2019 நிதியாண்டில் 9 கோடி ரூபாயும் 2020 நிதியாண்டில் 16.5 கோடி ரூபாயும் டர்ன்ஓவர் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் 18 கோடி ரூபாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது சண்டிகர், பஞ்ச்குலா, ஜலந்தர் மற்றும் பஞ்சாபின் இதர பகுதிகளில் Uncle Jack’s எட்டு அவுட்லெட்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு தெற்கு டெல்லி மார்கெட்டில் புதிய அவுட்லெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பஞ்சாபி பாக், கன்னாட் ப்ளேஸ் ஆகிய பகுதிகளில் கூடுதலாக இரண்டு அவுட்லெட் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு குஜராத்தின் சில்வசா பகுதியில் ஒரு அவுட்லெட் உருவாக்க அன்குஷ் திட்டமிட்டுள்ளார். இங்கு அமைக்கப்பட உள்ள சமையலறையில் இருந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகள் மட்டுமின்றி மத்தியப்பிரதேம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் உள்ள அவுட்லெட்களுக்கும் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும்.
”விரிவாக்கம் செய்ய தயார்நிலைக்கு வந்த பிறகே மற்ற பகுதிகளில் விரிவடையத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
அன்குஷ் ஃப்ரான்சைஸ் முறையில் ஆர்வம் காட்டவில்லை.
“முதலீட்டாளர்களை நாங்கள் இணைத்துக்கொள்வோம். ஆனால் ஃப்ரான்சைஸ் முறையில் செயல்படும் திட்டம் இல்லை,” என்கிறார்.
சவால்கள் மற்றும் திட்டங்கள்
மற்ற உணவங்கள் போன்றே Uncle Jack’s உணவகமும் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் வணிகம் மீண்டெழுந்துள்ளது. சந்தை குறித்து மேலும் ஆழமாகப் புரிந்துகொள்வதில் அன்குஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
“டெல்லி சந்தை சண்டிகர் போல் இல்லை. சண்டிகரில் நாங்கள் 9 மணிக்கு அவுட்லெட்டைத் திறந்துவிடுவோம். ஆனால் டெல்லியில் மக்கள் மதியம் 11 மணிக்குப் பிறகே வெளியில் நடமாடுகிறார்கள்,” என்று பகிர்ந்துகொண்டார் அன்குஷ்.
சாலை உணவு வகைகளுக்கென பிரத்யேகமாக செயல்படவும் அன்குஷ் திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா