நட்டு, சுந்தர் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு: அசத்திய ஆனந்த் மஹிந்திரா!
இந்திய இளம்படைக்கு கிடைத்த அசத்தல் பரிசு!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது இந்தியா.
கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இதுதான் அந்த அணி பெற்ற முதல் தோல்வி.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. ஒட்டுமொத்த நாடும் இந்த வெற்றியைக் கொண்டாடி தீர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி, தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் பாராட்டுக்கு எல்லாம் மணிமகுடம் சூட்டும் விதமாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்த பரிசு வீரர்களையும் மற்றவர்களையும் உச்சிமுகர வைத்துள்ளது. இந்த தொடரில் ஜொலித்தவர்களில் முக்கியமானவர்கள் இளம்வீரர்கள் தான். தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அசத்தினார்.
இதைவிட மற்றொரு வீரரான சிராஜ் தனது தந்தையின் இறப்புக்குக் கூட போகாமல் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதேபோல் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரம் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இவர்களின் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக தான் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தங்கள் நிறுவனத்தின் ‘தார்' கார் இந்த 6 வீரர்களுக்கும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“6 இளம் வீரர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மஹிந்திரா தார் காரை பரிசளிக்க உள்ளேன்," எனக் கூறி இருக்கிறார்.
இவரின் அறிவிப்பு வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று கூறி நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.