குடும்பத்துக்காக கை, கால் இல்லாது வண்டி ஓட்டும் மாற்றுத் திறனாளிக்கு வேலை அளித்த ஆனந்த் மஹிந்திரா!
டெல்லியைச் சேர்ந்த கை, கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் வண்டியை ஓட்டி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவதைத் தெரிந்துகொண்டு அவருக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
டெல்லியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கை, கால்கள் இல்லாதபோதும் வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டார். தன்னுடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வாகனத்தை மாற்றியமைத்து, அதை ஓட்டி சம்பாதித்தும் வருகிறார். இவரைப் பற்றிய ஒரு சிறு வீடியோ தொகுப்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
இந்த வீடியோவைப் பார்த்த மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவனத்தில் அவருக்கு வேலை வழங்குவதாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்த நபரிடம் ஒருவர் கேள்விகளைக் கேட்டு வீடியோவாகப் பதிவு செய்கிறார். அந்த வீடியோ பதிவில் அவர் பேசும்போது,
“எனக்குக் கல்யாணமாகி மனைவியும் ரெண்டு குழந்தைங்களும் இருக்காங்க. உடம்பு சரியில்லாத என் அப்பாவும் எங்ககூட இருக்காரு. இவங்களை எல்லாம் கவனிச்சுக்கற பொறுப்பு இருக்கறதால நான் இந்த வண்டியை ஓட்டி சம்பாதிக்கறேன்,” என்று அந்த மாற்றுத்திறனளி நபர் குறிப்பிடுகிறார்.
கடந்த ஐந்தாண்டுகளாக இதுபோல் வண்டியில் பயணித்து வேலை செய்து சம்பாதித்து வருவதாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில்,
“இன்று என்னுடைய டைம்லைனில் இந்த வீடியோவைப் பார்த்தேன். இதை அனுப்பியவர் யார், இந்த வீடியோ எப்போது பகிரப்பட்டது என்கிற விவரங்கள் எனக்குத் தெரியாது. இவர் தனது குறைபாட்டை தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் துணிந்து எதிர்கொண்டுள்ள விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவருக்கு பிசினஸ் அசோசியேட் வேலை வழங்க ஏற்பாடு செய்யமுடியுமா?” எனக் கேட்டுப் பதிவிட்டுள்ளார்.
இந்த வாகனத்தை எப்படி இயக்குவீர்கள் என வீடியோ பதிவிட்டவர் கேட்டபோது அந்த நபர் புன்னகையுடன் அதை இயக்கிக் காட்டுகிறார்.
ஆனந்த் மஹிந்திரா தேவை இருப்போருக்கு உதவ முன்வருவது இது முதல் முறையல்ல. இந்த மாற்றுத்திறனாளி போன்றே பலரின் தேவையறிந்து அதற்கேற்ற உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் பட உதவி: டிவிட்டர்