‘18 கோடி இந்தியர்கள் உடலில் கோவிட்-க்கு எதிரான ஆன்டிபாடி உருவாகிவிட்டது’ – தைரோகேர் வேலுமணி!
தைரோகேர் நிறுவனம் மேற்கொண்ட 60,000 ஆன்டிபாடி பரிசோதனை முடிவுகளின்படி 15% பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மீளமுடியாமல் திணறி வருகின்றன. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் அடங்கும்.
இந்நிலையில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஏற்கெனவே கொரோனா வைரஸை எதிர்க்கத் தேவையான எதிர்ப்புச் சக்தி (Anti-body) உருவாகியிருப்பதாக தைரோகேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதியுடன் தைரோகேர் நிறுவனம் இந்தியாவின் 600-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளில் 60,000 ஆன்டிபாடி பரிசோதனைகள் மேற்கொண்டது.
யுவர்ஸ்டோரி தமிழ் ஆசிரியருடன் லைவ் உரையாடலில் பங்குபெற்ற தைரோகேர் நிறுவனர் Dr.வேலுமணி, Anti-body டெஸ்ட் குறித்தும், கொரோனா வைரசை எதிர்த்து இந்தியர்களின் உடலில் உருவாகிய எதிர்ப்புச் சக்தி குறித்தும் விரிவாக விளக்கினார்.
இதில் செய்யப்பட்ட 53,000 ஆன்டிபாடி பரிசோதனைகளின் முடிவுகள் நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. சுமார் 15 சதவீதம் இந்தியர்களுக்கு ஏற்கெனவே கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகி, அவர்கள் அந்நோயிலிருந்து மீண்டுவிட்டதாக இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு பெரியளவில் அறிகுறிகள் ஏதும் தென்படாமலேயே தொற்று ஏற்பட்டு குணமடைந்திருப்பதாக, தைரோகேர் நிறுவனர் Dr.வேலுமணி தெரிவித்தார்.
ஆண்டிபாடி என்பது கோரோனா வைரஸ் போன்ற ஆபத்தான வைரஸை எதிர்த்துப் போராட மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கும் புரோட்டீன் ஆகும். ஒரு புதிய தொற்றிற்கு எதிராக உருவாகும் இந்த புரோட்டீன்கள் மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக ரத்தத்திலேயே இருந்து எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது.
சோதனை முடிவுகள் குறித்து ட்வீட் செய்துள்ள தைரோகேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் வேலுமணி இந்தியாவில் கிட்டத்தட்ட 18 கோடி பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகளில் 3% வரை ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. பரிசோதனை கிட் தவறாக நோய் தொற்றை உறுதிசெய்திருக்காது என்கிற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதை பகிர்ந்துகொள்கிறேன்,” என்று வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
20 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி தானேவின் பிவாண்டி பகுதியில் ஆன்டிபாடி பரிசோதனையில் அதிகபட்ச பாசிடிவ் (47.1% மாதிரிகள்) காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து பெங்களூருவின் பீன்யா தசரஹள்ளி (44.1%), டெல்லியின் ஆனந்த் விஹார் (37.7%), ஹைதராபாத்தின் ஜூபிளி பகுதி (37.3%), தானேவின் தஹிசர் (36.7%), மும்பையின் கட்கோபர் மேற்கு (36.7%) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பகுதிகளில் பின்னர் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குறைவான ஆன்டிபாடி பாசிடிவ் உள்ள பகுதிகளில் தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்துள்ளது.
மும்பையில் அலிபாக் (0.7%), பெல்லரியில் வித்யாநகர் (0.9%), புனேவில் அம்பேதன் (1.5%), ரெவரியின் பாக்தலா (1.9%), சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் (3.3%) போன்றவை குறைவாக உள்ள பகுதிகளாகும்.
இந்த நகரங்கள் கோவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் குறைவான தொற்று எண்ணிக்கையே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆன்டிபாடி பரிசோதனைகள் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு உருவாகியுள்ள ஆன்டிபாடி குறித்த தகவல்களை வழங்குவதுடன் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ள முன் கள பணியாளர்களை அடையாளம் காணவும் உதவுகிறது.
அதுமட்டுமல்லாது பிளாஸ்மா தானம் செய்பவர்களைக் கண்டறியும் உதவுகிறது. மேலும் நோய் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்களிடையே எவ்வளவு காலம் நோய் எதிர்ப்புச் சக்தி நீடிக்கிறது என்பதையும் இந்தப் பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
முழு உரையாடலை இந்த காணொளி லின்கில் பாருங்கள்...