கொரோனா நோயால் மாற்றி யோசித்து உருவான ஆப்: சிறு வணிகங்களுக்கு உதவும் ‘Nighbro’
மாற்றியோசித்ததால் உருவான ஸ்டார்ட்அப்!
உலகையே கொரோனா தொற்று உலுக்கி வரும் நிலையில், அதன் கோரப்பிடியில் சிக்கிய நபருக்கு புதுவித பிசினஸ் யோசனை வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சென்னை தாம்பரத்தில் வசித்து வரும் சண்முக சுந்தர், என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரது 13 வயது மகள் சஹானாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அப்பா, மகள் இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி பூரண நலம் அடைந்தனர்.
தங்கள் மீது அக்கறை செலுத்திய முன் களப்பணியாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த சண்முக சுந்தர், "Nighbro" எனும் செயலி ஒன்றை வடிவமைத்தார். முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக உணவை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கினார்.
சண்முக சுந்தரின் இந்த ஐடியாவிற்கு உயிர் கொடுக்க பல தன்னார்வலர்கள் முன்வந்தனர். செவிலியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கொரோனா நோயாளிகள் என 1000க்கும் மேற்பட்டோருக்கு இந்த செயலி மூலமாக இலவசமாக உணவு வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, உணவு தயாரித்து கொடுப்பவர், உணவை கொண்டு சேர்ப்பவர் என அனைத்து தரப்பினரும் இந்த செயலி மூலமாக சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இதே உதவி சண்முக சுந்தரை மாற்றி யோசிக்க வைத்தது. ஏன் இதையே சிறு, குறு வியாபாரிகளுக்கு உதவும் வகையிலான ஆன்லைன் பிசினஸாக மாற்றக்கூடாது என சிந்திருக்கிறார். உடனே, Nighbro ஆப்'பை பிரபல முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களை போல் மாற்றி அமைத்தார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே முடங்கிய மக்கள், ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆய்வு முடிவுகளின்படி, 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிரபல ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலமாகவே மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஏன் உயிர் காக்கும் மருந்து பொருட்களைக் கூட வாங்குவதாக கூறப்படுகிறது.
பிரபல நிறுவனங்களை பொறுத்தவரை கிடைக்கும் லாபத்தில் பெரும் பாதி வியாபாரிகளை விட அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சுந்தர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். டெலிவரிக்கு கிடைக்கும் லாபத்தை போல விற்பனையாளரும், வாடிக்கையாளரும் லாபம் கிடைக்க வேண்டும் என நினைத்து, அதன்படி, அருகில் உள்ள விற்பனையாளர்களை ஒருங்கிணைத்தார்.
அவர்களை வைத்தே வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்ய வைத்தார். இப்படி செய்வதால் அதிக விலை கொடுக்கப்படுவதை தவிர்க்கப்பட்டது.
இந்த யோசனையின் மற்றொரு பயன், வாடிக்கையாளர் தனக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை எங்கு இருக்கிறது என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருப்பதுடன், அந்தக் கடையின் தரம் குறித்தும் வாடிக்கையாளர்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என்பதால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது எளிதானது.
இதேபோல் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களும் விற்பனையாளருக்கு தெரியும் என்பதால் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமில்லாத ஒன்றாகும். இந்த யோசனை சண்முக சுந்தரின் ‘Nighbro' ஆப்பின் தனிப்பட்ட அம்சமாக மாறியது.
இந்த முயற்சி தொடர்பாக சண்முக சுந்தரை தொடர்புகொண்டு பேசினோம். அவர்,
“கொரோனாவில் இருந்து மீண்டு வந்தபிறகு தான் இந்த யோசனை தோன்றியது. அதன்படி தான் இதனை உருவாக்கினேன். ஆனால் மற்ற ஆன்லைன் ஆப்-களை விட Nighbro தனித்து இருப்பதாக சொல்வதற்குக் காரணம், அந்த ஆப்-பில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு சந்தை விலையை விட கூடுதலாக மதிப்பு போடப்பட்டிருக்கும். கூடுதல் விலையில் அவர்களுக்கான கமிஷன், அவர்கள் கொடுக்கும் ஆபர்கள் எல்லாம் கணக்கில் கொண்டு இந்த விலையை அவர்கள் போட்டிருப்பார்கள். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலை சுமையை கொடுக்கும்.
ஆனால் அப்படி ஒரு சுமை Nighbro வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்காது. ஏனென்றால், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகே உள்ள கடைகள் மூலமாகவே நாங்கள் பொருட்களை சப்ளை செய்து வருகிறோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு அது தெரிந்த கடையாகவும் இருக்கும். இப்படி செய்வதால் சர்வீஸ் கட்டணம் என்ற பேரில் அவர்கள் மீது கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த முறையில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமற்ற பொருளை அனுப்ப முடியாது. ஏனென்றால், இந்தமுறையில் பொருள் வாங்குபவர்கள் கடைக்காரருக்கு தெரிந்தவராக தான் இருப்பார். அதனால் தரமற்ற பொருட்களை அனுப்ப முடியாது.
இதனை எளிதாக்கும் விதமாக எங்களின் Nighbro ஆப்-பில் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைக்காரர்களை தெரிந்துகொள்ளும்படி வசதி ஏற்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் இருவரையும் இணைக்கவே இந்த வசதியை செய்துள்ளோம். மேலும்,
இந்த வசதி மூலம் வாடிக்கையாளர் தாங்கள் வாங்கிய பொருளில் திருப்தி இல்லை என்றால், அதனை உடனே மாற்றிக்கொள்ள முடியும். அல்லது பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதிலும், மற்ற நிறுவனங்களை போல, ஒருவாரம் பணத்தை திரும்பப் பெற காத்திருக்க வேண்டியதில்லை.
உடனே திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். மேலும் Machine learning என்ற வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த வசதி மற்ற ஆன்லைன் நிறுவன ஆப்களில் கிடையாது. இந்த வசதியின் மூலம் வாய்ஸ் மூலமாக கூட வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்யலாம். அதேபோல் Local Search engine போல வாடிக்கையாளர்களுக்கு எந்த கடையில், என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதையும் எங்கள் ஆப்பில் ஏற்படுத்தி உள்ளோம்," என்று விரிவாக பேசியிருக்கிறார் சண்முக சுந்தர்!.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் இலவச உணவு வழங்கிய Nighbro ஆப் தற்போது, வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது. இதன் மூலமாக சிறிய அளவிலான மளிகைக் கடைகள் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய சுந்தர் திட்டமிட்டுள்ளார்.
இதே சுந்தர் ஏற்கனவே சென்னையில் ஐடி நிறுவனங்கள், பேச்சிலர்கள், தனியாக வசிக்கும் முதியவர்கள் என நல்ல உணவு கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்காக fooddoo.com-ஐ உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக அன்று இல்லத்தரசிகளின் வீட்டு உணவையும், நல்ல உணவுக்காக காத்திருக்கும் மக்களையும் பாலமாக இணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.