'இந்தியா அதிக ஆப்’கள் டவுன்லோட் செய்கிறது, அப்லோட் செய்வதில்லை’ - ரவிசங்கர் பிரசாத்!
இந்தியாவில் உள்நாட்டு செயலிகளுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் யுவர்ஸ்டோரியின் டிஜிட்டல் இந்தியா டவுன்ஹால் நிகழ்வில் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் அதிகளவில் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. ஆனால் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்று யுவர்ஸ்டோரியின் ‘டிஜிட்டல் இந்தியா’ டவுன்ஹால் நிகழ்வில் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 59 சீன செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிடங்களை உள்நாட்டு செயலிகளைக் கொண்டு நிரப்புவதற்கான பொன்னான வாய்ப்பு இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு தற்போது கிடைத்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தியாவில் செயலிகள் அதிகளவில் டவுன்லோட் செய்யப்படுகின்றன. ஆனால் அதே அளவு அப்லோட் செய்யப்படுவதில்லை. இந்திய ஸ்டார்ட் அப்கள் இதைச் செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நம்மிடம் திறன் உள்ளது. ஸ்டார்ட் அப்கள் இதை சாதித்துக் காட்டவேண்டும்,” என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
சீன செயலிகள் தடை செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானது முதல் இந்திய ஸ்டார்ட் அப்கள் மகிழ்ச்சியில் உள்ளன. ஏனெனில் இந்த தடை உத்தரவு காரணமாக உள்நாட்டு செயலிகளுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகும். இது பிரதமரின் சுயசார்பு திட்டத்தை ஒட்டிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக சீன நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகள் தடை செய்யப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. இந்த ஆப்’கள் மூலம் தரவுகள் திருடப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது முதல் Chingari, Trell, Kaagaz Scanner போன்ற உள்நாட்டு செயலிகளின் பயனர் எண்ணிக்கை ஒரே இரவில் அதிகரித்தது. மற்ற நிறுவனங்கள் நாட்டின் தரவுகள் தனியுரிமை பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த மெய்நிகர் நிகழ்வில் பங்கேற்ற InMobi நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ நவீன் திவாரி கூறும்போது,
“கடந்த 48 மணி நேரங்களில் இந்தியாவின் டிஜிட்டல் துறை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு InMobi நிறுவனம் Roposo நிறுவனத்தை வாங்கியது. தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட பிறகு இந்தத் தளத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு மில்லியன் பயனர்கள் இணைந்திருந்ததாக நவீன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
டிஜிட்டல் கல்வி மற்றும் சுகாதார தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதில் ஸ்டார்ட் அப்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் இந்த நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.