இண்டெர்நெட் இணைப்பு இல்லாமலே இந்த ஆப் மூலம் மெசேஜ் செய்ய முடியும் தெரியுமா?
பேரிடர் காலத்தில் இணையம் துண்டிப்பு, போராட்டம் காரணமாக இண்டெர்நெட் முடக்கம் போன்ற அவசரக் கால சமயங்களில் ஆஃப்லைனில் மெசேஜ் அனுப்ப இந்த ஆப் உதவும்.
இன்றைய காலகட்டத்தில் ’சர்வம் செயலிமயம்’ என்றால் அது மிகையாகாது. வீட்டில் மளிகை வாங்கவேண்டுமா? வெளியில் செல்ல வாகனம் வேண்டுமா? மருந்து வாங்கவேண்டுமா? வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யவேண்டுமா? இப்படி நம் ஒவ்வொரு தேவைகளையும் அதற்கான பிரத்யேக செயலியைப் பயன்படுத்தி நம்மால் பூர்த்திசெய்து கொள்ள முடிகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் செயலிகள் நம் வாழ்க்கையை எளிதாக்கிவிட்டது.
பெரும்பாலான செயலிகளைப் பயன்படுத்த இணையம் அவசியம். இண்டெர்நெட் இணைப்பு இன்றி வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியாது.
நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் தற்போதைய சூழலில் அடிக்கடி இணையம் முடக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் இணைய சேவை முடக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இணைய இணைப்பு முடங்கினாலும் ஆஃப்லைனில் செயல்படும் செயலிதான் Bridgefy. சமீப நாட்களாக இந்தச் செயலி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இது சர்வர் தொடர்புடைய செலவுகளை சேமிக்கும் பொருட்டு ஆரம்பத்தில் மெசேஜிங் செயலியாகவே தொடங்கப்பட்டது.
ஃபயர்சாட் போன்றே Bridgefy செயலியும் மொபைல் போனின் ப்ளூடூத் மூலம் இயங்கி இணைய வசதி இன்றி மெசேஜ் அனுப்ப உதவுகிறது. இதன் மூலம் எழுத்து வடிவில் தகவல்கள், இடம் குறித்த தகவல், இயற்கை பேரிடர் குறித்த எச்சரிக்கை, கட்டணம், பாடங்களின் உள்ளடக்கம் போன்றவற்றை அனுப்பலாம்.
Bridgefy மூன்று விதங்களில் செயல்படுகிறது. முதலில் 100 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் Bridgefy பயனர்கள் இருவர் ப்ளூடூத் மூலம் ஒருவர் மற்றவருக்கு மெசேஜ் அனுப்பலாம் (one to one). இரண்டாவதாக தொலைதூரத்தில் இருக்கும் இரு பயனர்கள் ஒருவருக்கொருவர் மெசேஜ் அனுப்ப முடியும் (one to one long distance).
இதில் பயனர்கள் இருவரும் 330 அடிக்கும் கூடுதலான தொலைவில் இருக்கும்போது இவர்களுக்கிடையில் இருக்கும் மற்ற Bridgefy பயனர்களைக் கேரியர்களாகக் கொண்டு தகவல் சென்றடையும். மூன்றாவது ’ப்ராட்கேஸ்ட்’ (Broadcast). இது தற்போது குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஹாங்காங் போராட்டகளத்திலும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதில் ஒரு பயனர் தனது தொடர்புப் பட்டியலில் இல்லாத மற்ற Bridgefy பயனர்களுக்கும் மொத்தமாக மெசேஜ் அனுப்பலாம்.
இந்த செயலியை நிறுவுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளோ நிறுவனங்களோ Bridgefy செயலிக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்களும் ப்ரோக்ராமர்களும் இந்த செயலியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ஆப் பதிவிறக்கம் செய்ய: Bridgefy