கோடை வெயிலில் பறவைகளின் தாகத்தை தணிக்கும் சவாலை ஏற்க நீங்கள் தயாரா?
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு #BirdBathChallenge மூலம் பறவைகளின் தாகத்தைத் தீர்க்க பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கின்றனர். மற்றவர்களும் இந்த முயற்சியில் இணைய ஊக்குவிக்கின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க நாம் அனைவரும் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வரும் நிலையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை என்ன?
இதை மனதில் கொண்டு கேரளாவின் கொச்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் குழுவான ’ப்ரொக்ரசிவ் டெக்கீஸ்’ (Progressive Techies) கோடை வெயிலில் பறவைகள் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள உதவும் வகையில் ஒரு தீர்வை முன்வைத்துள்ளனர்.
இக்குழுவினர் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி #BirdBathChallenge துவங்கியுள்ளனர். இது மிகவும் எளிது. இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் தனிநபர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி அவர்களது வீடு அல்லது பணியிடத்தின் வெளிப்புறத்தை வைக்கவேண்டும் என ’தி லாஜிக்கல் இண்டியன்’ குறிப்பிடுகிறது.
ப்ரொக்ரசிவ் டெக்கீஸ் குழு உறுப்பினர்களில் ஒருவரான அனீஷ் பந்தலானி ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் தெரிவிக்கையில்,
"இத்தகைய சவால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வது சாத்தியமா என்பதையும் பலனளிக்குமா என்பதையும் சோதனை செய்தோம். எங்களில் சிலர் எங்கள் வீடுகளில் இதை சோதனை செய்து பார்க்கத் துவங்கினோம். அது பலனளித்தது. முதல் சில நாட்களில் ஒன்றிரண்டு பறவைகள் மட்டுமே வந்தது. ஆனால் தற்போது பல வகையான பறவைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது,” என்றார்.
சவாலை ஏற்கும் தனிநபர் தனது புகைப்படத்தை பதிவிடவேண்டும். அத்துடன் மேலும் ஐந்து நபர்கள் இந்த சவாலில் இணைத்துக்கொள்ளவேண்டும்.
கொச்சினின் இன்ஃபோ பார்க்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மரத்தின் கீழும் மொட்டை மாடிகளிலும் சுவற்றிலும் மண் பானைகளில் தண்ணீர் வைக்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக இக்குழுவினர் ப்ளாஸ்டிக் கிண்ணங்களை தவிர்க்கின்றனர்.
”இந்த கோடைக்காலத்தில் பறவைகள் குளிர்ச்சியாக இருக்க உதவுவதுடன் மண் பானைகள், ஸ்டீல் பாத்திரங்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறோம்,” என அனீஷ் தெரிவித்ததாக ’தி நியூஸ் மினிட்’ குறிப்பிடுகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA