பாஜக மூத்த தலைவர், முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அருண் ஜெட்லி இன்று காலமானார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (66) காலமானார்.
கடந்தாண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட முடியாததால், அவர் ஓய்வில் இருந்தார். இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்து வந்தன. உயிர் காக்கும் கருவிகள் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனைக்கே சென்று பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்கள் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அருண் ஜெட்லிக்கு சங்கீதா என்ற மனைவியும், ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.
1952ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் பிறந்தவர் அருண் ஜெட்லி. அவரது பெற்றோர் பெயர் மகராசு கிசன் ஜெட்லி மற்றும் ரத்தன் பிரபா ஆவார். டெல்லியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் படித்த அருண் ஜெட்லி, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 1997ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்த அருண் ஜெட்லி, 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 15வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
16வது மக்களவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்த அவர், பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பையும் கவனித்துக் கொண்டார்.
சமீபத்தில் தான் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைபாட்டால் காலமானார். அந்த சோகம் மறைவதற்கு முன்னதாகவே, பாஜகவில் மற்றொரு மூத்த தலைவர் மரணமடைந்திருப்பது அக்கட்சித் தொண்டர்களை மேலும் சோகமடைய வைத்துள்ளது.