அதிகாலை 4 மணிக்கு... கமகம பிரியாணி...!
முன்னாள் ஐடி ஊழியர் மனோஜ், தொடங்கியுள்ள ‘ஆட்டோ பிரியாணி’ நைட் ஷிப்ட் பார்த்து திரும்பும் இன்னாள் ஐடி ஊழியர்களின் காலைநேர கொடூரப் பசியை போக்குகிறது...
அதிகாலை 4மணி... (டெக்யூகத்தோருக்கு நள்ளிரவு) மாலையில் மங்கி மறைந்த கதிரவன், மீண்டும் எழும் சமயம். நீண்ட நெடியதோரு சேவல் கெக்கரிப்பு செவிகளில் விழும் அதே நேரம் விடியலின் முதல் நாசி விருந்தாய் மணமணக்கும் பிரியாணி வாசம் வீசினால்...?
அய்யோ அய்யோ... ‘4மணிக்கு பிரியாணியா, அடடா! சோத்துக்கு செத்தவய்ங்களா...’ என எண்ணுவோர் பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக்கொண்டு ஆழ்ந்த உறக்கநிலைக்கு செல்லலாம்.
‘செமையா இருக்கும்லலல..’ என்ற உணர்வு எழுவோரே, நாசிக்கு மட்டுமல்ல காத்தால நாலு மணிக்கு நாவிற்கும் விருந்து அளிக்க நீங்கள் அணுக வேண்டிய இடம் - விஜயா ராஜா கல்யாண மண்டபம் எதிரில், கோவிலம்பாக்கம், சென்னை. ஓஎம்ஆரில் இருந்து ஜஸ்ட் 20 மினிட்ஸ்! மேடவாக்கத்திலிருந்து வெறும் 5 மினிட்ஸ்...!
ஆம், சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ‘ஆட்டோ பிரியாணி’ கடையில் அதிகாலை 4மணிக்கு பிரியாணி விற்கப்படுகிறது. கோழிக் குடும்பமான சிக்கன் பிரியாணியும், சிக்கன் 65-யும் ஆட்டோ பிரியாணி கடையின் தினசரி மெனுகார்டில் இடம்பெறும் அயிட்டங்கள். தவிர, ஸ்பெஷல் பதார்த்தங்களும் அவ்வப்போது விற்கப்படுகிறது. இதில் என்ன முக்கியமென்றால், அந்த ராப்பொழுதில் ஒரு பெரும் கூட்டமே நின்றப்படி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டுகிறது.
பிரேக்பாஸ்ட் - பிரியாணி, லன்ச் - பிரியாணி, டின்னர்- பிரியாணி என மூவேளையும் பிரியாணி கொடுத்தாலும், ஏன்...? பிரியாணின்னு எழுதிவைத்து புளிச்சோறை கொடுத்தாலும் மூக்கு முட்ட உண்ணும் நாடி நரம்பெல்லாம் பிரியாணி வெறியேறி போன பிரியாணி லவ்வர்கள் ’ஆட்டோ பிரியாணி’ கடைக்கு 4 மணிக்கு வந்து உண்பதையே மகிழ்ச்சிகர சம்பவமாக கருதுகின்றனர். தவிர, இரவுநேரப் பணியாளர்கள் வேலை முடிந்து திரும்பும்போது அதிகாலையில் கிடைக்கும் பிரியாணியை வரப்பிரசாதமாகவே எண்ணுக்கின்றனராம்.
உண்மையில், நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்லும் பணியாளர்களுக்காக தொடங்கப்பட்டதே ‘ஆட்டோ பிரியாணி’ என்கிறார் அதன் உரிமையாளர் மனோஜ். முன்னாள் ஐடி ஊழியரான இவர் தான், இன்னாள் ஐடி ஊழியர்களின் காலைநேர கொடூரப் பசியை போக்குபவராக உள்ளார்.
“நானும் ஐடி கம்பெனில 5 வருஷம் வேலை பார்த்திருக்கிறேன். நைட் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது, பயங்கர பசியெடுக்கும். ஆனா, பாத்தீங்கனா... அந்த டைம்ல டீ, வடை, பப்ஸ் அயிட்டங்களைத் தவிர சாப்பாடுனு ஏதுவுமே கிடைக்காது. அந்த டைம்ல என்ன கிடைச்சாலும் சாப்பிடத் தோணும். அதுவும் பிரியாணிலாம் கிடைச்சா வரப்பிரசாதம். ஏன்னா... மத்தவர்களுக்கு தான் அதிகாலை. நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு டின்னர் டைம். வயிறு நிறைந்து சாப்பிட்டா தான் நல்லா தூங்க முடியும். அந்த அனுபவத்தில் கிடைத்த ஐடியா தான் 4 மணி பிரியாணி...” என்றார்.
சரி அதென்ன ‘ஆட்டோ பிரியாணி’ ? என்றவுடன், பெயர்க்காரணத்திற்கான பிளாஷ்பேக் ஸ்டோரியை பகிரத் தொடங்கினார்...
“ஐடி கம்பெனில பணிப்புரிந்து கொண்டிருந்த சமயம், சொந்தமா பிசினஸ் பண்ணனும்னு எண்ணம் ஏற்பட்டு டிராவல்ஸ் தொடங்கினேன். ஆனால், அந்தளவுக்கு அதில் வணிகம் இல்லை. அடுத்த முயற்சியா, டிவி, பிரிட்ஜ், ஏசி போன்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்றுவந்தேன். அது சம்மர் டைம். ஏசி நல்லா விற்பனையாகியது. 50 ஏசிகள் வித்துட்டேன். அடுத்து 100 ஏசிக்கு முன்பணம் செலுத்த சொன்னாங்க. என்ன நம்பி இன்னும் 4பேரு இதில் முதலீடு செய்தனர். கடைசில, அந்த மொத்த வியாபாரி பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாரு. லட்சக்கணக்கில் பணயிழப்பு ஏற்பட்டு, கடைசியா கையில இருந்தது அப்பா வைத்திருந்த ஆட்டோ மட்டும் தான். அதனால், ‘ஆட்டோ பிரியாணி’னே பேரு வச்சிட்டோம்,” என்றார்.
கடந்தாண்டு இறுதியில் தொடங்கப்பட்ட பிரியாணி ஸ்டால், முதல் வாரம் முழுவதும் மொத்த பிரியாணியில் பாதியை வீட்டுக்கே எடுத்துச் செல்லும் நிலையில் இருந்துள்ளது.
“தொடக்கத்தில் வியாபாரம் சுத்தமாக இல்லை. மிஞ்சிய பிரியாணியை வீட்டுக்கு எடுத்துச் சென்று மூன்று வேளையும் பிரியாணியே சாப்பிட்டுகிட்டு இருந்தோம். ஃபேஸ்புக்கில் பக்கம் தொடங்கி அப்டேட் செய்யத் தொடங்கிய உடன், கடையை பற்றி யூ டியுப்பில் வீடியோக்கள் பரவத் தொடங்கியது. மக்களும் ஆட்டோ பிரியாணியை தேடி வரத்தொடங்கினார்,” என்கிறார் அவர்.
ஒரு விஷயத்துக்கு பாசிட்டிவ் கமெண்ட்கள் கிடைத்தால், நெகட்டிவ் கமெண்ட்களும் இருக்கத் தானே செய்யும். அதிகாலை 4 மணிக்கு பிரியாணி சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்களும் கிளம்பியுள்ளனர்.
“ஒரு வீட்டுக்கு பத்து விருந்தாளிகள் ஒரே நேரத்தில் வந்தால் அம்மா அவர்களுக்கு எப்படி சமைப்பார்களோ?, அதேமாதிரி தான் குறைவான எண்ணெய் பயன்படுத்தி வீட்டிலே பிரியாணி சமைக்கிறோம். மிளகாய்தூளில் இருந்து எல்லாப்பொடியும் நாங்களே அரைத்து சேர்ப்பது தான்.”
அதுவும் இல்லாமல், நைட் பத்து மணிக்கு சாப்பிட்டு வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக அதிகாலை பயங்கரமா பசிக்கும். அந்த நேரத்தில் எதுவுமே சாப்பிடாமல் தூங்குவதற்கு, இது பெஸ்டு தான். ஐடி மக்களிடம் கேட்டால் தான் புரியும்” என்றார்.
இங்கே ஐடி மக்களையும் தாண்டி அலாரம் வைத்து எழுந்துவந்து பிரியாணி சாப்பிடுகின்றனர் பலர். டீ குடிக்கவந்துட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்கிறார்கள் சிலர், எனும் மனோஜ், அவர்களுடைய பிரியாணிக்கு மக்கள் அளிந்த அங்கீகாரத்தை உணர்ந்து சென்னையில் மட்டும் மூன்று இடங்களிலும், தமிழகம் முழுவதும் ஆட்டோ பிரியாணியை கொண்டு சேர்க்கும் எதிர்காலத் திட்டங்களோடு இருக்கிறார்.
ஆட்டோ பிரியாணி ஃபேஸ்புக் பக்கம்:- Auto Biriyani