74 வயதில் ரூ.700 கோடி வணிகத்தை திறம்படக் கையாளும் அமிர்தசரஸ் தொழிலதிபர்!
உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் உழைத்து தொழில் துறையில் உச்சத்தில் இருக்கும் பல்பீர் பஜாஜ். இன்றைய தேதியில் 74 வயதில் 700 கோடி ரூபாய் வணிகத்தை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.
இன்றைய இளைஞர்கள் படிப்புக்கு உகந்த வேலை கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும் ஊதியம் போதவில்லை என வெதும்புகின்றனர்.
இப்படி தன்னம்பிகையின்றி தளர்ந்து போன இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இருக்கிறார் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் உழைத்து தொழில் துறையில் உச்சத்தில் இருக்கும் பல்பீர் பஜாஜ்.
இன்றைய தேதியில் தனது 74 வயதில் 700 கோடி ரூபாய் வணிகத்தை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த தொழிலதிபர்.
தனது 10 வயதில் தந்தையை இழந்த அவர், தந்தையின் இழப்பே தனக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும், போராடி வெல்ல வேண்டும் என எழுச்சியையும் தந்ததாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
"22ஆவது வயதில் நான் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்த வயதில் குடும்பத்தின் உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உழைக்க வேண்டிய ஒரே நபர் நான்தான். இது எளிதான விஷயம் அல்ல, மிகவும் கடினமானதுதான். ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது, எனது 52 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம் மிகவும் பயனுள்ளதாகவே அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது," என்கிறார்.
50 ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட ஆப்கானிய உலர் பழங்களை விற்பனை செய்வதற்காக பஞ்சாபின் அமிர்தசரஸில் கே.பி.பி. நட்ஸ் என்ற வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கி, பல்பீர் பஜாஜ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தனது வர்த்தகத்தைத் தொடர்ந்த அவருக்கு அப்போது ஆண்டுக்கு ரூ.2 முதல் 3 கோடி வரை வருவாய் கிடைத்தது. அப்போதுதான், இத்தொழிலில் அடுத்த கட்டத்துக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
முற்றிலும் புதிதாக ஓர் துறையில் இறங்குவதை விட, ஏற்கெனவே நன்கு அனுபவமுள்ள உலர்ந்த பழங்களின் வர்த்தகத் துறையில் ஏதேனும் ஓர் துறையில் கால்பதித்து சாதிப்பதே நல்லது என எண்ணினார்.
இதையடுத்து, 1996ல், பல்பீர் பஜாஜ் உலர்ந்த பழங்களைப் பதப்படுத்த அமிர்தசரஸில் ஓர் புதிய அலகு ஒன்றை நிறுவினார், அதே நேரத்தில் உலர்ந்த பழங்களை விற்க 'தள்சி' என்ற பிராண்டையும் தொடங்கினார். இந்த பிராண்டில் சுவையான பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற உலர்ந்த பழங்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.
அடுத்த 20 ஆண்டுகளில் இவரது தொழில் அசுரவேகத்தில் முன்னேறியது. டெல்லி, ஹரியானா மற்றும் ஆந்திராவில் மூன்று அதிநவீன, உள்நாட்டு உற்பத்தி அலகுகளைத் தொடங்கினார்.
இந்நிறுவனம் தற்போது ஆண்டுக்கு ரூ.700 கோடி வருவாய் ஈட்டுவதோடு, சுமார் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது .மேலும், தனது உலர் பழத்தை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு இந்திய வீட்டுக்கும் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான கொட்டைகள் மற்றும் உலர் பழங்களை வழங்குவதே எங்கள் நோக்கம். இதற்காக நாங்கள் இயந்திரமயமாக்கலில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளோம். அதிக சுகாதாரமான, தரமிக்க உலர் பழங்களை நுகர்வோருக்கு அளிப்பதே எங்களின் முதன்மையான பணியாகும் என பல்பீர் பஜாஜ் தெரிவிக்கிறார்.
மேலும் இந்தியா உண்மையிலேயே ஓர் வித்தியாசமான சந்தையாகும். சிலர் தரத்தை பொருட்படுத்தாமல் குறைந்த விலைக்கு பொருள் கிடைத்தால்போதும் என வாங்கிச் சென்று விடுவார்கள். ஆனால் மற்றொரு தரப்பினரோ விலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தரத்துக்கே முன்னுரிமை அளிப்பார்கள். இதுபோன்ற தரத்தை மட்டுமே பெரிதாய் கருதும் வாடிக்கையாளர்களுக்காக கே.பி.பி., கவுர்மியா என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தினோம் என்கிறார் பல்பீர் பஜாஜ்.
ஆனால், இதுபோன்ற உணவுப் பொருள் விற்பனைத் துறையில் வெற்றியடைவது என்பது எளிதானது அல்ல என்கிறார் பல்பீர் பஜாஜ். மேலும், அவர் இதுகுறித்து கூறும்போது,
“பஞ்சாபிலிருந்து ஒரு வணிகத்தை இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகளுக்கு விரிவாக்குவது என்பது மிகவும் கடினமான ஓன்றாகும். ஏனெனில் பஞ்சாப்பில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. இதன் விளைவாக அமிர்தசரஸில் தொழில்களுக்கான எந்தவொரு அடிப்படை உள்கட்டமைப்பும் கிடையாது என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
மேலும், எங்கள் மாநில இளைஞர்களிடையே பெருகி வரும் போதைப் பழக்கமும் தொழில் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. வேலைவாய்ப்பை பெருக்கினாலே இளைஞர்கள் போதையின் பாதையில் இருந்து மீண்டு விடுவார்கள் என்பதை ஏன் அரசாங்கங்கள் உணர மறுக்கின்றன என தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து, தொழில் துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டு அனுபவம் உடைய பல்பீர் பஜாஜ், இளம் தொழில் முனைவோருக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார். காலம் ரொம்ப மாறிவிட்டது. இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களால் வணிகத்தில் ஓர் மகத்தான போட்டி நடைபெறுகிறது. எனவே. இளம் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் தனியாக தொழிலில் போராடுவதற்கு பதிலாக ஓர் குழு அல்லது ஒரு நிறுவனமாக இணைந்து தொழில் துறையில் சாதிக்க முன்வரவேண்டும் என்கிறார்.
ஏனெனில் எதிர்காலத்தில், மற்ற வெளிநாடுகளை விட இந்தியாவில்தான் வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பல்பீர் பஜாஜ் கணிக்கிறார். மேலும்,
“இந்தியா வியாபாரத்துக்கான மிகப் பெரிய சந்தை. எங்கள் பிராண்டுகளான துளசி மற்றும் கவுர்மியாவை ஒவ்வொரு இந்திய குடும்பத்துக்கும் விருப்பமான தேர்வாக உருவாக்குவதே எங்கள் லட்சியம்,” என்கிறார்.
74 வயதில் வீட்டில் ஓய்வு எடுக்கும் முதியவர்கள் மத்தியில் இன்னும் தொழில் துறையில் ஓர் இளைஞரைப் போல புதிய முயற்சிகள் மற்றும் யுக்திகளுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கும் பல்பீர் பஜாஜ் இன்றைய இளம்தொழில் முனைவோருக்கெல்லாம் ஓர் வழிகாட்டி என்றால் மிகையல்ல.
ஆங்கிலத்தில் மோஹித் சபர்வால் | தமிழில் திவ்யாதரன்