ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி மர்லேனா கடும் போட்டியில் வெற்றியை வசப்படுத்தியது எப்படி?
டெல்லியின் கால்காஜி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அதிஷி மர்லேனா, ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய காலம் முதல் உறுப்பினராக இருப்பவர்.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்வு முடிவுகளை ‘ஆம் ஆத்மி கட்சி’ ஆவலுடன் எதிர்பார்த்தது போன்றே அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான அதிஷி மர்லேனா; கால்காஜி தொகுதி முடிவுகளை பதட்டத்துடன் எதிர்நோக்கியிருந்தார். இறுதியில் அதிஷி, 11,000த்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பாஜக வேட்பாளரான தரம்பீர் சிங்.
ஆரம்பத்தில் இருந்தே அதிஷிக்கு நல்ல செல்வாக்கு இருந்தபோதும் இவர் போட்டியிட்ட கால்காஜி தொகுதியின் வேட்பாளரான ஷிவானி சோப்ரா உடன் கடும் போட்டி நிலவியது. ஷிவானி சோப்ரா டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ராவின் மகள் ஆவார்.
அதிஷி ஆம் ஆத்மி கட்சியில் கல்வி சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றவர். இருப்பினும் 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிஷி கிழக்கு தில்லி தொகுதியில் கடும் தோல்வியை சந்தித்து டெபாசிட் இழந்தார்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் முக்கிய உறுப்பினராக இருந்து வரும் அதிஷி, தலைநகரில் கல்வி அமைப்பை புதுப்பிக்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சருக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதியான அதிஷி மர்லேனா பற்றிய சில முக்கிய தகவல்கள் இதோ:
- இவர் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்களான விஜய் சிங், திரிப்தா வாஹி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர்.
- கார்ல் மார்க்ஸ், விளாதிமிர் லெனின் ஆகியோரின் பெயர்களை உள்ளடக்கியே ’மர்லேனா’ என இவருக்குப் பெயரிடப்பட்டது. பின்னர் ‘அதிஷி மர்லேனா’ என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டது.
- 2001ம் ஆண்டு செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பிரிவில் பட்டம் பெற்ற பிறகு ரோட்ஸ் ஸ்காலராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
- அதிஷி கர்நாடகாவின் ரிஷி வேலி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
- இவர் சம்பாவனா பொதுக் கொள்கை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு லாப நோக்கமற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். இவர் கொள்கை வகுத்தல், கல்வி ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.
- 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவி டெபாசிட் இழந்தார்.
- இவர் டெல்லி கல்வி அமைச்சருக்கு ஆலோசகராக செயல்பட்டார். இவரது ஆலோசனையின்கீழ் புதிய நர்சரி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கான பயிற்சி அமர்வுகள் இரட்டிப்பாக்கப்பட்டது. கவுரவ ஆசிரியர்கள் (Guest Teachers) நியமனம் துரிதப்படுத்தப்பட்டது. பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் கட்டாயமாக்கப்பட்டது.
- இவர் முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கால்காஜி தொகுயில் வெற்றி பெற்றார்.
ஆங்கில கட்டுரையாளர்கள்: ரேகா பாலகிருஷ்ணன் மற்றும் நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா