டென்னிஸ் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அணியில் இடம்பெற்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்!
எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்த தானியா சராய் இந்த ஆண்டு தொடக்கத்தில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அளவில் 3-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
”யாருமே உங்களை நம்பாதபோது, நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும்,” என்பது செரீனா வில்லியம்ஸின் பிரபல வரிகள்.
தானியா சராய் 14 வயது சிறுமி. இவரது அப்பா ஆட்டோ ஓட்டுநர். இவர் இந்தியாவின் 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தின்படி, இவரது ITF (International Tennis Federation) ஜூனியர் ரேங்கிங் 1709.
தானியாவிற்கு மிகப்பெரிய அளவில் உந்துதலாக இருப்பவர் செரீனா வில்லியம்ஸ். மேலே குறிப்பிட்ட செரீனாவின் வரிகளே தானியா இந்த நிலையை எட்ட உத்வேகமளித்துள்ளது.
“என்னுடைய விளையாட்டுத் திறமையையும் நான் வகுக்கும் உத்திகளையும் தொடர்ந்து மேம்படுத்துவேன். ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 16 ITF போட்டிகளில் விளையாடுவேன்,” என்று இ-மெயில் மூலம் ஹெர்ஸ்டோரி உரையாடலில் தெரிவித்திருக்கிறார் தானியா.
சமீபத்தில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ITF பாகிஸ்தான் ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் I, 2022, J5 பெண்கள் போட்டியில் தானியா பங்கேற்றிருந்தார்.
14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் வகிக்கும் இலங்கையைச் சேர்ந்த சாஜிதா ராசிக்கிடம் காலிறுதிப் போட்டியில் தானியா தோற்றுவிட்டார். ஆனாலும் அவரது மன உறுதி சற்றும் குறையவில்லை.
18 வயது மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்கள் உலகம் முழுவதும் வலம் வந்து தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள ITF World Tennis Tour Juniors வாய்ப்பளிக்கிறது. சிறந்த விளையாட்டு வீரர்கள் ப்ரொஃபஷனலாக விளையாடி வெற்றியை வசப்படுத்த இது உதவுகிறது. இருப்பினும், சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட தானியா அத்தனை சுலபமாக தற்போதைய நிலையை எட்டிவிடவில்லை.
எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்த தானியா இந்த ஆண்டு தொடக்கத்தில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய அளவில் 3-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஐஸ்வர்யா தயானந்த் ஜாதவ், சோஹினி சஞ்சய் மோஹந்தி ஆகியோருடன் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். இதற்கு தன் குடும்பம் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்ததே காரணம் என்கிறார் தானியா.
திறமையை வளர்த்தெடுத்தார்
தானியாவின் அப்பா சாம்சன் ஆந்திரப்பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்தவர். தானியாவிற்கு டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் இருப்பதை சிறு வயதிலேயே அவர் கவனித்தார். தானியாவின் தாத்தாவும் டென்னிஸ் விளையாட்டு வீரர். இவர் வாராங்கல் மாவட்டத்தில் நர்சாபூர் லயன்ஸ் கிளப்பிற்காக விளையாடியவர்.
தானியா ஆறு வயதில் Rafael Nadal Foundation நடத்திய Rafael Nadal Tennis Academy மையத்தில் முதன் முதலாக டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார். இந்த ஃபவுண்டேஷன் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழந்தைகளுக்கு டென்னிஸ் பயிற்சியளிக்கிறது.
“எங்கள் சொந்த ஊருக்கு அருகில் அமைந்திருந்ததால் தானியா Nadal Academy மையத்தில் சேர்ந்தார்,” என்கிறார் சாம்சன்.
தானியாவின் குடும்பத்தில் அவரது அப்பா சாம்சன், அம்மா ரெபெக்கா, சகோதரர் ஹேமந்த் ஜோஷுவா ஆகியோர் உள்ளனர். மகளின் திறமையை மென்மேலும் மெருகேற்ற விரும்பிய சாம்சன் குடும்பத்துடன் ஹைதராபாத்திற்கு மாற்றலானார்.
ஹைதராபாத்தில் சாம்சன் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். தானியாவை Advantage Tennis Academy மையத்தில் சேர்த்தார்.
ஒன்றரை ஆண்டுகள் கடந்த பிறகு தானியாவை Sania Mirza Tennis Academy-க்கு மாற்றினார். அங்கு அவருக்கு இலவசப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி மையம் புறநகர் பகுதியில் அமைந்திருந்ததால் சாம்சனால் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க முடியாமல் போனது. பிறகு ஹைதராபாத்தின் மனிகொண்டா பகுதிக்கு குடும்பத்துடன் மாற்றலானார்கள்.
தற்போது தானியா குறிப்பாக எந்த ஒரு அகாடமியுடனும் இணைந்திருக்கவில்லை. வெவ்வேறு கோச் மூலம் பயிற்சி பெறுகிறார்.
“முன்னணி அகாடமிகளில் பயிற்சி பெற, பிசியோதரபி, ஊட்டச்சத்து ஆலோசனை, ஜிம் என சராசரியாக மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் செலவாகும். என்னுடைய வருமானத்தைக் கொண்டு என்னால் முடிந்த வரை தானியாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறேன். ஆனால், ஆட்டோ ஓட்டும் வருமானத்தைக் கொண்டு என்னால் இந்த செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்றும் தெரியவில்லை,” என்று குறிப்பிடும் சாம்சன், தானியா பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் தவறாமல் உடன் பயணிக்கிறார்.
“இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடக்கும் ஏராளமான போட்டிகளிலும் தானியா பங்கேற்கவேண்டும் என விரும்புகிறோம். இதனால் அவரது ரேங்கிங் சிறப்பாக இருக்கும். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயண செலவுகள் மிகவும் அதிகம்,” என்கிறார் சாம்சங்.
மாநில அளவிலும் (Telangana State Tennis Association) அகில இந்திய அளவிலும் (All India Tennis Association) தானியா 128 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 117 போட்டிகளில் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) வெற்றி பெற்றிருக்கிறார். 2021ம் ஆண்டு முதல் பெஹ்ரைன், நேபால், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு வரை பெங்களூருவில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆன்லைனில் படித்தபடியே டென்னிஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதேபோல் படிப்பையும் பயிற்சியையும் சமன்படுத்த உதவும் பள்ளியை ஹைதராபாத்தில் தேடி வருகிறார்.
தானியாவின் இந்தப் பயணத்திற்கு ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் இதர வழிகளிலும் உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் தானியா நன்றி தெரிவித்துக்கொள்கிறார். இதுபோல் ஆதரவளித்தவர்களையும் நாட்டையும் பெருமைப்படுத்தும் வகையில் கூடுதல் உத்வேகத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு நாராயணன் | தமிழில்: ஸ்ரீவித்யா
கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்டும், இன்று இந்திய அணிக்கே கேப்டனாகிய ‘சச்சின் சிவா’