'அவளுக்காக எதையும் செய்வேன்’ - பேத்தியின் கல்விக்காக வீட்டை விற்று ஆட்டோவில் தங்கும் தாத்தா!
மும்பை ஆட்டோ ஓட்டுநருக்கு 24 லட்சம்!
மும்பையைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பேத்தியின் படிப்பு செலவுக்காக வீட்டை விற்ற நிலையில், அவருக்கு கிரவுட் ஃபண்டிங் மூலம் 24 லட்ச ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
ஹூயூமன் ஆஃப் பாம்பே (Humans of Bombay) என்ற அமைப்பு சார்பில், சமூக வலைதளங்களில் ஆட்டோ ஓட்டுநர் தேஷ்ராஜ் குறித்து ஷேர் செய்யபட்ட வீடியோ வைரலானது. மனதை உருக்கும் வகையில் இருந்த அந்த வீடியோவை பலரும் பகிரத் தொடங்கினார். இதன்மூலம் வெளியுலகுக்கு அறிமுகமானார் தேஷ்ராஜ்.
இது தொடர்பான இன்டர்வியூ ஒன்றில் பேசிய அவர்,
"எனது இரண்டு மகன்களின் இறப்புக்கு பிறகு, குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை நான் மீண்டும் ஏற்க வேண்டியதாயிற்று. எனது மருமகள்கள் மற்றும் அவர்களின் 4 குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தான் என்னை இவ்வளவு தூரத்துக்கு அழைத்துச்சென்றது,” என்கிறார் தேஷ்ராஜ்.
குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய காரணத்தால், நீண்ட நேரம் ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அவரின் வருமானத்தில் பெரும்பகுதி பேரக்குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கே செலவிட வேண்டியதாயிற்று.
ஆனால், என் பேத்தி 12ம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணை பெற்றபோது தான், தான் செலவிட்ட கல்விக்கட்டணத்திற்கான மதிப்பை உணர்ந்ததாகக் கூறுகிறார் தேஷ்ராஜ். இதையடுத்து பி.எட் படிப்பதற்காக தனது பேத்தி டெல்லி செல்லவேண்டும் என்று கூறியபோது சற்று தடுமாறித்தான் போனார் அவர்.
தன்னால் இதை செய்ய முடியாது என்று அவர் உணர்ந்தே இருந்தார். இருப்பினும், தனது பேத்தி ஆசைப்பட்டுவிட்டாள் என்பதற்காக தனது வீட்டையே விற்க முடிவு செய்தார். அதன்படி, பேத்தி டெல்லி சென்று பி.எட் படிக்க தனது சொந்த வீட்டை விற்று பணம் கட்டினார். வாழ வீடு இல்லாததால், வீட்டில் உள்ளவர்களை கிராமத்துக்கு அனுப்பிவிட்டு, தேஷ்ராஜ் தனது ஆட்டோவிலேயே தங்க ஆரம்பித்துள்ளார்.
“என்ன ஆனாலும் சரி, எனது பேத்தியின் கனவுகளை நனவாக்கியே தீருவேன். அதனால் தான் எனது வீட்டை விற்று கல்விக்கட்டணம் செலுத்தினேன்,” என்கிறார்.
தேஷ்ராஜின் இந்த உள்ளப்பூர்வமான அன்பு ஆயிரக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டது. ஆம்! அவரது கதை சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் எதிரொலியாக பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவியத்தொடங்கின.
அவரது கதையை ட்விட்டரில் காங்கிரஸின் அர்ச்சனா டால்மியா ஷேர் செய்து ஆட்டோ டிரைவருக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவை மிலிந்த் தியோராவும் ரீட்வீட் செய்தார். குஞ்சன் ரட்டி என்ற ஃபேஸ்புக் பயனர் தேஷ்ராஜுக்கு நிதி திரட்டத் தொடங்கினார். அது 20 லட்சத்தை தாண்டியது.
தற்போது ஹூயூமன் ஆஃப் பாம்பே (Humans of Bombay)வின் பதிவின் படி, தேஷ்ராஜ் கிரவுட் ஃபண்டிங் மூலம் 24 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
"தேஷ்ராஜ் -ஜிக்கு கிடைத்த ஆதரவு மகத்தானது! நீங்கள் அனைவரும் அவருக்கு உதவ முன்வந்ததால் அவர் நிம்மதியடைந்துள்ளார். மேலும் அவரால் அவரது பேத்திக்கான கல்விச் செலவை எளிதாக சமாளிக்க முடியும்,” என ஹியூமன் ஆஃப் பாம்பே பகிர்ந்து வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: மலையரசு