சோலார் ஆட்டோவில் மக்களுக்கு இலவச தண்ணீர் வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!
மொஹமத் ஆபாத் தனது சொந்த செலவில் தண்ணீர் வாங்கி தினமும் சுமார் 2,000 லிட்டர் தண்ணீர் வழங்கி வருகிறார்.
ராஜஸ்தானின் சுரு மாவட்டம் இந்தியாவில் மிகவும் வெப்பமான பகுதிகளில் ஒன்று. கோடைக்காலங்களில் இங்கு 50 டிகிரியைக் கடந்து வெப்பம் காணப்படும். தீவிர தண்ணீர் தட்டுப்பாட்டால் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். நீர்சத்து குறைந்து போகும் பிரச்சனையும் ஏற்படுகிறது.
சுருவின் சுஜன்கர் நகரில் உள்ள மக்களின் தாகத்தை தீர்க்கும் நோக்கத்துடன் மொஹமத் ஆபாத் என்பவர் சோலாரில் இயங்கும் தனது ஆட்டோரிக்ஷாவை நகரும் தண்ணீர் தொட்டியாக மாற்றியுள்ளார். இவர் தனது ஆட்டோவை தண்ணீர் தொட்டியுடன் இணைத்துள்ளார். நாள் முழுவதும் 2,000 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
காலை ஏழு மணிக்கு இவரது நாள் தொடங்குகிறது. மாலை 5 மணி வரை தண்ணீர் வழங்கி வருகிறார். இவர் ஆட்டோவுடன் இணைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி அமைப்பை 'தண்ணீர் குடிசை’ என்று அழைக்கிறார்.
“நான் கூடுதலாக 10 நிமிடங்கள் செலவிடுவதால் தேவையிருப்போருக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து உதவ முடியும் என்றால் அதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்,” என்று `தி பெட்டர் இந்தியா’ இடம் ஆபாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாறு தண்ணீர் விநியோகித்து வருகிறார். தனது 'தண்ணீர் குடிசை’ மூலம் தினமும் 3,000 பேர் தண்ணீர் குடிப்பதாக தெரிவிக்கிறார். அரசு மருத்துவமனை, அரசு அலுவலகம், நீதிமன்றம், காய்கறி சந்தை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தண்ணீர் வழங்க 30 நிமிடங்கள் செலவிடுகிறார்.
ஆபாத், தனது ஆட்டோவில் ஒலிபெருக்கையும் பொருத்தியுள்ளார். இதில் பாடல்கள் ஒலிப்பதுடன் கொரோனாவைரஸ் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. இவர் தனது சொந்த சேமிப்பைக் கொண்டே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வாகனத்தில் சோலார் பேனல் பொருத்தியுள்ளார். இதன் மூலம் ஒலிபெருக்கிக்குத் தேவையான மின் சக்தி கிடைக்கிறது.
இவரது சகோதரர் மொகமத் சேத் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். அவரது நினைவாகவே இந்த சேவையைத் தொடங்கியுள்ளார் ஆபாத்.
“எனக்கு என் சகோதரரை மிகவும் பிடிக்கும். அவரை நினைவாக மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். சுரு; வெப்பம் அதிகமுள்ள பகுதி என்பதால் அவர்களது தாகத்தை தணிக்க விரும்பினேன். கோடைக் காலம் முழுவதும் குளிர்ந்த நீர் வழங்குகிறேன். இந்த முயற்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 3,000 பேருக்கு தண்ணிர் வழங்குகிறேன்,” என்று ஆபாத் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
ஆபாத் தனது சொந்த செலவில் ஆர்ஓ ஆலையில் நீர் நிரப்புகிறார். தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் வாங்க 2,000 ரூபாய் செலவிடுகிறார். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 60,000 ரூபாய் செலவிடுகிறார். இவரது முயற்சிக்கு இவரது குடும்பத்தினரும் ஆதரவளிக்கின்றனர்.
“என் மகன்கள் மூவரும் நிரந்தரப் பணியில் உள்ளனர். என்னுடைய நோக்கத்தை அவர்கள் தெரிந்துகொண்டுள்ளனர். சில சமயம் அவர்களும் என்னுடைய இணைந்துகொள்வார்கள். எனக்கு நன்கொடையும் கிடைக்கிறது. சில நேரங்களில் மக்கள் தாங்களாக வற்புறுத்தி சிறு தொகையை கொடுத்துச் செல்கின்றனர்,” என்றார்.
இவரது மனிதாபமானமிக்க செயலுக்கு மக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்துக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் தன்னைத் தொடர்ந்து செயல்பட மேலும் ஊக்குவிப்பதாக அவர் கருதுகிறார்.
“அவர்கள் என் மீது காட்டும் அன்பே தொடர்ந்து சேவையளிக்க உந்துதலளிக்கிறது. என் இறுதி மூச்சு வரை இந்த சேவையை தொடர்ந்து செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA