உணவில்லாமல் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் கோவை வாலிபர்!
பொதுமக்கள் தரும் உணவை உண்டு பழகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் உணவில்லாமல் உடல் மெலிந்து காணப்பட்டன.
கொரொனா எதிரொலியின் காரணமாக ஊரடங்கு உத்திரவு வருகின்ற 14 ஆம் தேதி வரை அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உடுமலை அமணலிங்கேஷ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கண்கான மக்கள் வந்த நிலை மாறி, தற்போது பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் யாரும் வராத நிலையில் வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுமக்கள் தரும் உணவை உண்டு பழகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் உணவில்லாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றன.
தளி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் உடுமலை ஆட்டோ கேரேஜில் பணி செய்து வருகிறார். ஊரடங்கு உத்திரவால் வீட்டில் இருந்த அசோக்குமாருக்கு அவரது நண்பர் திருமூர்த்தி மலையிலுள்ள குரங்குகளுக்கு உணவில்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடுமலை நகரப்பகுதியிலுள்ள வாழைக்காய் மண்டி, பழமுதிர் நிலையம், பழக்கடை போன்ற இடங்களில் மீதமாகும் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு என மூட்டையாகக் கட்டி தனது இரு சக்கர வாகனத்தில் திருமூர்த்தி மலைக்குக் கொண்டு குரங்குகளுக்குக் கொடுக்கிறார். தினமும் ஒரு மணிக்கு வரும் அசோக்குமாருகாக குரங்குகள் காத்து இருக்கின்றன.
ஒன்றோடொன்று சண்டை போடாமல் அசோக்குமாரின் தோள் மேல் ஏறி பழத்தை வாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 11 நாட்களுக்கும் மேலாக உணவளித்து வரும் அசோக்குமார், உடல் மெலிந்து இருக்கும் குரங்குகளுக்குப் போதிய உணவு காட்டில் இல்லை எனவும், மனிதர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு பழகியதால் தற்போது தவித்து வருவதாக தெரிவித்தார்.
தினமும் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குச் சென்று பழங்களை சேகரித்து குரங்குகளுக்கு அளித்து வருவது தனக்கு மன நிம்மதியை தருவதாகவும், எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாத குரங்குகளின் பாசத்தை , மனிதனாக இருந்து உணர முடிவதால் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.